இது தேவைதானா தனுஷ்.. வாத்தி எழுந்திருக்கும் புதிய சிக்கல் - களத்தில் குதித்த ஆசிரியர் சங்கங்கள்
சென்னை: வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் வாத்தி படத்துக்கு எதிராக ஆசிரியர் சங்கங்கள் போர்க்கொடி தூக்கியிருப்பதால் படத்துக்கு சிக்கல் எழுந்துள்ளது.
வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் படம் வாத்தி. சம்யுக்தா, சமுத்திரகனி உள்ளிட்டோர் நடித்திருக்கும் இந்தப் படத்துக்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இந்தப் படமானது நாளை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. படத்தை பார்க்க தனுஷ் ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருக்கின்றனர்.

சர்ச்சையை சந்தித்த வாத்தி
இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்வு சமீபத்தில் நடந்தது. இதில் தனுஷ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர். இதில் தனுஷ் பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. தனுஷ் பேசுகையில், " நான் ஒரு டியூஷனில் சேர்ந்தேன். ஆனால் படிப்பதற்காக போகவில்லை. அங்கு எனது கேர்ள் ஃப்ரெண்ட் இருந்தாங்க. அவங்கக்கூட டைம் ஸ்பெண்ட் பண்ணதான் அங்கு போனேன். பத்து நாள்கள் டியூஷன் போனேன். ஆனா அந்த டீச்சர் என்னையே எழுப்பி எழுப்பி கேள்வி கேட்டுக்கொண்டிருந்தார். இது வேலைக்கு ஆகாது என டியூஷன் போவதை நிறுத்திவிட்டேன்.

கேர்ள் ஃப்ரெண்டுக்கு சிக்னல் விட்ட தனுஷ்
அதன் பிறகு டியூஷனுக்கு வெளியேதான் காத்திருப்பேன். ஆனால் நான் வெளியில் வெயிட் பண்ணுவது அவருக்கு தெரிய வேண்டுமல்லவா. அதனால் என் பைக்கின் ஹார்னை எப்போதெல்லாம் அந்தப் பக்கம் போகிறேனோ அடிப்பேன். அதுதான் நான் வந்துவிட்டேன் என அவருக்கு உணர்த்துகிற சிக்னல். இந்த சிக்னலை கேட்டதும் உள்ளே இருக்கும் அவருக்கும் நான் வெளியில் காத்திருக்கிறேன் என்பது தெரிந்துவிடும்.

சிக்னல் கொடுப்பதை கண்டுபிடித்து திட்டிய ஆசிரியர்
இப்படியே போய்க்கொண்டிருக்க சில நாள்களுக்கு பிறகு ஆசிரியர் நான் சிக்னல் கொடுப்பதை கண்டுபிடித்துவிட்டார். ஒருநாள் அவர் டியூஷனில் படிப்பவர்களிடம்; உள்ளே இருக்கும் நீங்கள் எல்லாம் டிகிரி வாங்கி பெரிய ஆளாக வருவீர்கள். ஆனா வெளில நின்றுகொண்டு ஒருவன் சிக்னல் கொடுக்கிறானே அவன் நடுத்தெருவுல கூத்தாடுவான் என்று சொல்லியிருக்கிறார். அவர் எதை நினைத்து சொன்னாரோ தெரியவில்லை. அவர் சொல்லியபடியே நான் கூத்தாடாத தெருவே தமிழ்நாட்டில் இன்று இல்லை. அதனால் என்ன ராஜாவாத்தானே இருக்கோம்" என்றார்.

தனுஷின் பொறுப்பற்ற பேச்சுக்குகண்டனங்கள்
தனுஷின் இந்தப் பேச்சுக்கு பலரும் சமூக வலைதளங்களில் கண்டனங்களை தெரிவித்துவருகின்றனர். மேலும் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் கூறுகையில், "சமீபகாலமாக மாணவர்கள் ஆசிரியர்களை கேலி செய்வதோடு வரம்புமீறி செயல்படுவதும் வாடிக்கையாகிவிட்டது.
தனுஷ் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் பிப்ரவரி 17ஆம் தேதி வெளியாகும் படத்துக்கு வாத்தி என்று பெயரிடப்பட்டுள்ளது இது எங்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் மூலம் ஆசிரியர்களை கேலி பொருளாக்கும் நிலை உருவாகியுள்ளது.

தன்மான உணர்வை காயப்படுத்துவதாக உள்ளது.
இந்த மாதிரி செய்வது ஆசிரியர்களின் தன்மான உணர்வை காயப்படுத்துவது போல் இருக்கிறது. இந்த செயல் கண்டிக்கத்தக்கது. இந்தப் படத்தின் தயாரிப்பாளர் படத்தின் தலைப்பை உடனடியாக மாற்ற வேண்டும். தமிழ்நாடு அரசும் இந்த விஷயத்தில் தலையிட்டு உரிய தீர்வை காண வேண்டும்" என்றார்.

தணிக்கை குழு எப்படி இதை அனுமதித்தது?
இதுகுறித்து தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர் இளங்கோவன் கூறுகையில், "தமிழ்நாட்டில் சமீபகாலமாக அரசு பள்ளி ஆசிரியர்களை இழிவுப்படுத்தும் வகையில் திரைப்படங்களில் நகைச்சுவை நடிகர்களை ஆசிரியர் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து கேலி செய்யும் செயல் அதிகரித்துள்ளது.
தனுஷ் நடித்து வெளியாக உள்ள படத்துக்கு வாத்தி என பெயர் வைத்து மீண்டும் ஆசிரியர்களை கேலி பொருளாக்கி இருக்கின்றனர். இதனை தணிக்கை குழு எப்படி அனுமதித்தது. வாத்தி என அழைப்பதுதான் திராவிட மாடலா?.. நாங்கள் சட்டப்போராட்டம் நடத்த வேண்டுமா?" என கேள்வி எழுப்பினார்.


Click it and Unblock the Notifications











