சிவகார்த்திகேயன் பட இயக்குநரை லாக் செய்த தனுஷ்?.. வரிசையா வைத்திருக்கிறாரே
சென்னை: தனுஷ் கடைசியாக நடித்த கேப்டன் மில்லர் திரைப்படம் சுமாரான வரவேற்பை பெற்றது. இதனையடுத்து அவர் தனது 50ஆவது படத்தில் நடித்து முடித்தார். அந்தப் படத்தை முடித்த கையோடு சேகர் கம்முல்லா இயக்கத்தில் நடிக்க கமிட்டானார். படத்துக்கு குபேரா என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இதன் பெயரும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் நேற்று மாலை வெளியாகி கவனத்தை ஈர்த்தது. சூழல் இப்படி இருக்க தனுஷ் சிவகார்த்திகேயன் பட இயக்குநருடன் இணையவிருப்பதாக கூறப்படுகிறது.
இந்தியாவின் சிறந்த நடிகர்களில் ஒருவர் என்ற பெயரை பெற்றிருக்கிறார் தனுஷ். அவர் கடைசியாக கேப்டன் மில்லர் படத்தில் நடித்தார். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவான அந்தப் படம் கோயில் நுழைவு போராட்டத்தையும், சாதிய ஏற்றத்தாழ்வையும், வெள்ளைக்காரர்கள் ஆட்சிக்காலத்தையும் மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருந்தது. மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளியான அந்தப் படம் சுமாரான வரவேற்பையே பெற்றது. முக்கியமாக கேப்டன் மில்லருக்கு போட்டியாக களமிறங்கிய சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம் பொங்கல் ரேஸில் பந்தயம் அடித்தது.

தனுஷ் அப்செட்: தன்னால் அறிமுகப்படுத்தப்பட்ட ஹீரோவிடமே தோற்றுவிட்டோமே என்று தனுஷ் கொஞ்சம் அப்செட்டில் இருந்ததாக கூறப்படுகிறது. சூழல் இப்படி இருக்க கேப்டன் மில்லர் படத்துக்கு அடுத்ததாக அவர் தனது 50ஆவது படத்தில் நடித்திருக்கிறார். அதனை அவரே இயக்கவும் செய்திருக்கிறார். படத்துக்கு ராயன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. நிச்சயம் இந்தப் படத்தை மெகா ஹிட் படமாக கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் இருக்கிறார். படத்தில் பிரகாஷ் ராஜ், எஸ்.ஜே.சூர்யா, காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், துஷாரா விஜயன் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.
அடுத்த படம்: ராயன் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே சேகர் கம்முல்லாவின் இயக்கத்தில் நடிக்க கமிட்டானார் தனுஷ். ஏற்கனவே வாத்தி படத்தில் நடித்து கையில் சூடுபோட்டுக்கொண்ட அவர் மீண்டும் ஏன் தெலுங்கு இயக்குநருடன் கைகோர்க்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் வருத்தப்பட்டனர். ஆனால் வாத்தி படத்தில் விட்டதை இந்தப் படத்தில் பிடித்து தெலுங்கில் தனக்கென தனி மார்க்கெட்டை நிலைநாட்டும் நோக்கத்தில் அவர் இருக்கிறார் என திரைத்துறையில் பேச்சு ஓடுகிறது.
குபேரா: படத்தின் பெயரும், ஃபர்ஸ்ட் லுக்கும் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதன்படி படத்துக்கு குபேரா என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. ஃபர்ஸ்ட் லுக்கில் தனுஷ் தாடியும், தம்பட்டையுமாக பிச்சைக்காரர் போல் இருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் தனுஷின் கெட்டப்பே வேற மாதிரி இருக்கிறதே. அப்போ கதை எப்படி இருக்கும் என்று சமூக வலைதளங்களில் ஆர்வத்தோடு பேச ஆரம்பித்தனர்.
பிஸி தனுஷ்: குபேரா படத்தை முடித்த கையோடு இளையராஜாவின் பயோபிக்கில் நடிக்கிறார் தனுஷ். அதனை அநேகமாக அருண் மாதேஸ்வரன் இயக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனையடுத்து மாரி செல்வராஜுடன் இணைந்து ஒரு படத்தில் பணியாற்றுகிறார். இவை தவிர்த்து ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்திலும் கமிட்டாகியிருக்கிறார். இப்படி வரிசையாக படங்கள் வைத்திருக்கும் தனுஷ் சிவகார்த்திகேயன் பட இயக்குநருடன் இணையவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது ரங்கூன் படத்தின் மூலம் கவனம் ஈர்த்த ராஜ்குமார் பெரியசாமி இப்போது சிவகார்த்திகேயனை வைத்து அமரன் படத்தை இயக்கி முடித்திருக்கிறார். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தொடங்கியிருக்கின்றன. ரங்கூன் படத்தின் மூலமே அவர் கவனம் ஈர்த்திருப்பதால் அமரன் மீது பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்நிலையில் ராஜ்குமார் பெரியசாமியிடம் தனுஷ் கதை கேட்டு ஓகே சொல்லிவிட்டதாகவும்; விரைவில் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications











