இயக்குநருக்கு பிரச்னை.. தன் பிரச்னைகளுக்கு மத்தியிலும் ஓடி சென்று உதவிய தனுஷ்.. செம போங்க
சென்னை: கஸ்தூரி ராஜாவின் மகன் என்ற அடையாளத்தோடு சினிமாவுக்குள் அறிமுகமான தனுஷ் தற்போது தனக்கென தனி அடையாளத்தை பெற்றிருக்கிறார். அதற்கு முழு காரணமும் அவர் மட்டும்தான். தற்போது அவரது நடிப்பில் இட்லி கடை, குபேரா ஆகிய படங்கள் ரிலீஸுக்கு தயார் நிலையில் இருக்கின்றன. அடுத்ததாக ஒரு ஹிந்தி படத்திலும் அவர் நடித்துவருகிறார். இந்நிலையில் தனுஷ் குறித்து புதிய தகவல் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது.
இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மகனான தனுஷ் துள்ளுவதோ இளமை படத்தில் நடிக்க ஆரம்பித்தார். அந்தப் படத்தை முதலில் கஸ்தூரி ராஜா இயக்க பாதியிலிருந்து செல்வராகவன் இயக்கினார். படம் பெரிதாக போகாவிட்டாலும் யுவனின் இசை அந்தப் படத்துக்கு வெளிச்சம் பாய்ச்சியது. அந்தப் படத்துக்கு பிறகு காதல் கொண்டேன் படத்தில் நடித்தார் தனுஷ். அப்படம்தான் அவருக்கும், செல்வராகவனுக்கும் பெரிய அடையாளத்தை பெற்றுக்கொடுத்தது. தனுஷ் நல்ல நடிகர் என்ற பெயரையும் வாங்கினார்.

முன்னணி ஹீரோவான தனுஷ்: அதனையடுத்து வரிசையாக படங்களில் நடித்து ஹிட் கொடுத்தார் தனுஷ். ஒருகட்டத்தில் தமிழ் மட்டுமின்றி பாலிவுட், ஹாலிவுட் என வளர்ந்த அவர் ஆடுகளம், அசுரன் ஆகிய படங்களுக்காக தேசிய விருதினையும் வென்றார். அதுமட்டுமின்றி இந்திய அளவில் மிகச்சிறந்த நடிகர் என்ற பெயரையும் அவர் பெற்றிருக்கிறார். கடைசியாக அவரது நடிப்பில் ராயன் வெளியானது. அடுத்ததாக குபேரா, இட்லி கடை ஆகிய படங்கள் வெளியாகவிருக்கின்றன. இவை தவிர்த்து டஜன் கணக்கில் தனது கைகளில் படத்தை வைத்திருக்கிறார் அவர்.
திருமணம்: இதற்கிடையே காதல் கொண்டேன் படத்தில் நன்றாக நடித்ததற்காக ரஜினியின் மூத்த மகள் தனுஷை பாராட்டி பொக்கே வழங்கினார். அப்போது இரண்டு பேருக்கும் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. முதலில் இந்தக் காதலுக்கு ரஜினியின் வீட்டில் கடுமையான எதிர்ப்பு வந்ததாக கூறப்படுவதுண்டு. ஆனால் ஐஸ்வர்யா தொடர்ந்து பிடிவாதமாக இருந்ததால் இந்தத் திருமணத்துக்கு ரஜினிகாந்த்தும் அவரது மனைவி லதாவும் ஒத்துக்கொண்டார்கள் என்றும் சொல்லப்படுவதுண்டு.
சூப்பர் ஜோடி: அதனையடுத்து கடந்த 2004ஆம் ஆண்டு தனுஷுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு பிறகு இரண்டு உச்சபட்ச காதலோடு தங்களது வாழ்க்கையை நகர்த்திவந்தார்கள். அவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்களும் இருக்கிறார்கள். தனுஷை வைத்து ஐஸ்வர்யா 3 என்ற படத்தை இயக்கி இயகுநராக அறிமுகமானார். அடுத்ததாக அவர் இயக்கிய வை ராஜா வை படத்திலும் தனுஷ் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பிரச்னைகள்: இரண்டு பேரும் தொடர்ந்து தங்களது திருமண வாழ்க்கையையும் சுமூகமாக நகர்த்திக்கொண்டிருந்தார்கள். ஆனால் யார் கண்கள் பட்டதோ தெரியவில்லை தனுஷ் - ஐஸ்வர்யாவின் திருமண வாழ்க்கை பாதியில் முடிந்தது. கடந்த வருடம்தான் நீதிமன்றத்தில் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்றார்கள் என்பதுகுறிப்பிடத்தக்கது. இது ஒருபக்கம் இருக்க மறுபக்கம் தனுஷுக்கு இன்னொரு பிரச்னையும் இருக்கிறது. அதாவது பட தயாரிப்பு நிறுவனம் ஒன்று கொடுத்த தலை வலி அதுவாகும்.
புதிய தகவல்:இப்படிப்பட்ட நிலைமையில் தனுஷ் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி தனுஷ் தன்னை வைத்து படம் இயக்கிய இயக்குநர் ஒருவருக்கு உடநிலை சரியில்லாமல் போனதை கேள்விப்பட்டதாகவும்; உடனடியாக அவருக்கு அனைத்து உதவிகளையும் செய்ததாக கூறப்படுகிறது. இதனைப் பார்த்த ரசிகர்கள் தனுஷை பாராட்டிவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











