தனுஷின் நிறுவன பெயரில் மோசடி நடக்குது.. உஷாரா இருக்க சொல்லி எச்சரிக்கை.. என்ன நடந்தது?
சென்னை: தனுஷ் நடிப்பு மட்டுமின்றி இயக்கம், தயாரிப்பு உள்ளிட்ட பணிகளையும் கவனித்துவருகிறார். அவரது வுண்டபார் நிறுவனம்தான் எதிர்நீச்சல், நானும் ரௌடிதான், காலா உள்ளிட்ட ஹிட் படங்களை தயாரித்தது. 21ஆம் தேதிகூட தனுஷ் இயக்கத்தில் அந்த நிறுவனத்தின் தயாரிப்பில் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்கிற திரைப்படம் வெளியாகவிருக்கிறது. இதில் தனுஷின் சகோதரி மகனான பவிஷ் ஹீரோவாக அறிமுகமாகியிருக்கிறார். அனிகா சுரேந்திரன் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.
கஸ்தூரி ராஜா சினிமாவில் இயக்குநராக இருந்தாலும் அவரால் பெரிய அளவுக்கு வளர முடியவில்லை. இதன் காரணமாக அவரது குடும்பம் கொஞ்சம் கஷ்டத்தில் தத்தளித்தது. இப்படிப்பட்ட சூழலில்தான் தனது மகன் தனுஷை நடிகராக அறிமுகப்படுத்தினார் அவர். முதல் படம் சரியாக போகாவிட்டாலும் இரண்டாவது படமான காதல் கொண்டேன் தனுஷுக்கும், அந்தப் படத்தின் இயக்குநரும் கஸ்தூரி ராஜாவின் மூத்த மகனுமான செல்வராகவனுக்கும் மிகப்பெரிய அடையாளத்தை பெற்றுக்கொடுத்தது.

தலையெடுத்த தனுஷ்: அந்தப் படத்துக்கு பிறகு தனுஷுக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் கிடைத்தன. அந்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொண்டு படிப்படியாக முன்னேறிக்கொண்டே இருந்தார். முக்கியமாக ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணமும் செய்துகொண்டார். பல வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த இவர்கள் கடந்த வருடம் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டார்கள். அவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்கிற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.
பல ஜானர்களில் கிங்: தனுஷை பொறுத்தவரை நடிப்பு மட்டுமின்றி இயக்கம், பாடல்கள் பாடுவது, எழுதுவது, படங்களை தயாரிப்பு என பல வழிகளில் தன்னை நிரூபித்துக்கொண்டே இருக்கிறார். குறிப்பாக வுண்டர்பார் பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி ஹிட் படங்களை தயாரித்திருக்கிறார். எதிர்நீச்சல், நானும் ரௌடிதான், விசாரணை, காலா என வரிசையாக படங்களை தயாரித்திருக்கிறார். சிவகார்த்திகேயன், விக்னேஷ் சிவன் ஆகியோருக்கு மிகச்சிறந்த ஹிட் படங்களை முதன்முதலில் கொடுத்தது தனுஷின் வுண்டர்பார் நிறுவனம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்: தனுஷ் தற்போது நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இதில் அவரது சகோதரி மகன் பவிஷ் ஹீரோவாக நடித்திருக்கிறார். அனிகா சுரேந்திரன், மாத்யூ தாமஸ் உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தையும் வுண்டர்பார் நிறுவனம்தான் தயாரித்திருக்கிறது. நாளை மறுநாள் வெளியாகவிருக்கும் படத்துக்கு நல்ல எதிர்பார்ப்பு நிலவிவருகிறது. சூழல் இப்படி இருக்க தனுஷின் நிறுவனத்தில் நடிப்பதற்கு ஆள் கேட்கிறார்கள் என்று மோசடியான விளம்பரம் ஒன்று சுற்றி வந்தது.
நிறுவனத்தின் விளக்கம்: இந்நிலையில் வுண்டர்பார் நிறுவத்தின் இயக்குநர் ஸ்ரேயாஸ் இதுகுறித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "அனைவரது கவனத்துக்கும் இந்த அறிக்கை வெளியிடப்படுகிறது. நடிப்பதற்கு ஆள் தேடுவதாக எனது பெயரிலோ அல்லது வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்தின் பெயரிலோ வரும் விளம்பரங்கள் போலியானவை. 7598756841 என்பது எனது ஃபோன் நம்பரும் இல்லை. அந்த நம்பரோடு எனது புகைப்படத்தை சேர்த்து தவறாக பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











