Dhanya -தமிழர்களை பிச்சைக்காரர்கள் என்று சொன்னேனா?..செய்யும் தொழில் மேல் சத்தியம்..வருத்தம் தெரிவித்த தன்யா
சென்னை: ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா விஷ்ணு விஷால், விக்ராந்த், ரஜினிகாந்த், செந்தில், தன்யா உள்ளிட்டோரை வைத்து லால் சலாம் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். படமானது பிப்ரவரி 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. சூழல் இப்படி இருக்க படத்தில் நடித்திருக்கும் தன்யா பாலகிருஷ்ணன் சில வருடங்களுக்கு முன்பு தமிழர்களை கொச்சையாக பேசினார் என்ற சர்ச்சை எழுந்தது. தற்போது அதுகுறித்து அவர் விளக்கமளித்திருக்கிறார்.
3, வை ராஜா வை ஆகிய படங்களை இயக்கியிருக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது லால் சலாம் என்ற படத்தை இயக்கி முடித்திருக்கிறார். இதில் விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டோர் லீடு ரோல் ஏற்று நடிக்க; ரஜினிகாந்த் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார். இவர்களைத் தவிர்த்து செந்தில், தன்யா பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். படமானது பிப்ரவரி 9ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. ரஜினிகாந்த் நடித்திருப்பதால் படத்தின் மீதான ஹைப் எகிறியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சர்ச்சை: சூழல் இப்படி இருக்க படத்தில் நடித்திருக்கும் தன்யா பாலகிருஷ்ணன் சில வருடங்களுக்கு முன்னர் தமிழர்கள் பிச்சைக்காரர்கள் என்று சொன்னதாகவும்; அவரை எதற்காக தமிழ் படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்றும் ஒருதரப்பினர் கேள்வி எழுப்ப தொடங்கினர். நாளுக்கு நாள் இந்த விவகாரம் முற்றிக்கொண்டே சென்றது. இந்நிலையில் அதுகுறித்து தன்யா தற்போது விளக்கமளித்திருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் விளக்க குறிப்பில், " நான்செய்யும் தொழில் மேல் சத்தியம்...
அதனை நான் கூறவே இல்லை: கடந்த சில நாட்களாகச் சமூக வலைதளங்களில் தமிழர்களை இழிவு படுத்தும் விதமாக நான் கூறியதாகப் பகிரப்பட்டு வரும் கருத்து நான் கூறியதே அல்ல. 12 வருடங்களுக்கு முன்பு இது நடந்த போதே நான் இதைத் தெளிவுபடுத்த முயன்றேன்...அதையே இப்பொழுதும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
அச்சுறுத்தல்கள்: அந்த பதிவை நான் பதிவிடவே இல்லை. அந்த ஸ்க்ரீன் ஷாட், ஒரு ட்ரோல் செய்யும் நபரால் உருவாக்கப்பட்டு பகிரப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக இதை ஆதாரபூர்வமாக நிரூபிக்க எவ்வளவு முயன்றும் என் சக்திக்கு உட்பட்டு என்னால் முடியவில்லை. இந்த 12 வருடங்கள், நான் இதைப் பற்றி பேசாமல் இருந்ததற்குக் காரணம் அந்த சம்பவம் நடந்த சமயத்தில் என் மீதும் என் குடும்பத்தின் மீதும் வந்த அச்சுறுத்தல்கள்தான். அதிலிருந்து விலகி இருப்பதே எனக்குச் சரி என்று பட்டது. இப்பொழுது இந்த சந்தர்ப்பத்தில் மீண்டும் இதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். அந்த கருத்து நான் கூறியதே அல்ல.
தொடங்கியதே தமிழ் சினிமாவில்தான்: நான் என் சினிமா பயணத்தைத் துவங்கியதே தமிழ் சினிமாவில் தான். தமிழ் சினிமாவில் வேலை செய்ய வாய்ப்பு கிடைத்தமைக்கு நான் என்றும் நன்றி கடன் பட்டுள்ளேன். அப்பொழுதும் இப்பொழுதும் என் நெருங்கிய நண்பர்களில் பலரும் தமிழர்களே...அதனால் விளையாட்டுக்குக்கூட இப்படி ஒரு கருத்தை சொல்ல நான் என் கனவிலும் நினைக்க மாட்டேன். என் ஆரம்ப காலங்களில் தமிழ் சினிமா ரசிகர்களும் ஊடகங்களும் கொடுத்த ஆதரவே இத்தனை வருடம் தொடர்ந்து நடிக்க எனக்கு ஊக்கமாய் அமைந்திருக்கிறது.
எதிர்வினைகள் இல்லை: மனிதாபிமான அடிப்படையிலும், நான் யாரையும் காயப்படுத்தும் விதத்தில் எந்த வித சொல்லையோ செயலையோ செய்யக்கூடியவள் அல்ல. இந்த சம்பவம் நடந்ததற்குப் பின் நான் சில தமிழ் திரைப்படங்களும் (ராஜா ராணி, நீதானே என் பொன் வசந்தம், கார்பன்) சில தமிழ் வெப் சீரிஸ்களிலும் நடித்துள்ளேன். அப்போது இது போன்ற எதிர்வினைகள் எதுவும் நேரவில்லை.
வருத்தம்: சர்சைக்குரிய இந்த கருத்து என்னுடையது இல்லை என்றாலும், துரதிர்ஷ்டவசமாக என் பெயர் இதில் சம்மந்தப்படுத்தப்பட்டுவிட்டது...அதனால் நான் தமிழ் மக்களிடம் முழு மனதாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என் பெயரை வைத்து உங்களை காயப்படுத்தும் விதமாக நடந்த செயலுக்கு வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த சர்ச்சையினால் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் ரஜினிகாந்த் ரசிகர்கள் அனைவர்களுக்கும் ஏற்பட்ட சிரமங்களுக்கும் மன உளைச்சலுக்கும் எனது மனவருத்தத்தை தெரிவித்து கொள்கின்றேன்" என குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











