ஸ்தம்பிக்க வைக்கும் கொரோனா.. தாராள பிரபு படம் நிறுத்தம்.. ரீரிலீஸ் செய்யப்படும்.. நடிகர் வேண்டுகோள்!
சென்னை: கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் திரையரங்குகளில் தாராள பிரபு படம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக நாடுகளை அச்சுறத்தி வரும் கொரோனா வைரஸ், இந்தியாவிலும் பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை கொரோனா வைரஸால் 140க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழகத்தில் அனைத்து படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளது.

திரையரங்குகள் மூடல்
மறு அறிவிப்பு வரும் வரை திரைப்படங்கள், சீரியல்கள், விளம்பரப் படங்கள் உள்ளிட்டவற்றின் படப்பிடிப்புகளை நிறுத்த வேண்டும் என தென்னிந்திய திரைப்பட சம்மேளனமான ஃபெப்சி அறிவித்துள்ளது. படப்பிடிப்பு தொடர்பான எந்த பணியிலும் ஈடுபடக்கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளது. கல்விக் கூடங்கள், திரையரங்குகள் உள்ளிட்டவற்றையும் மார்ச் 31-ம் தேதி வரை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஹரிஷ் கல்யாண்
தமிழக அரசின் முடிவால் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருந்த 'தாராள பிரபு' படத்தின் வசூல் பாதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக 'தாராள பிரபு' படத்தின் நாயகன் ஹரிஷ் கல்யாண் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: "இன்று உலகையே கரோனா வைரஸ் (CoVid-19) பாதிப்பு ஸ்தம்பித்துப் போகச் செய்திருக்கிறது. தற்போதைய சூழலில் அனைவரும் பாதுகாப்புடன் இருக்கும் வகையில் நம் நாடு, உலக அளவில் அரசாங்க அமைப்புகள் எடுத்து வரும் முயற்சிகள் பெரிதும் பாராட்டுதலுக்குரியது.

ரீரிலிஸ் செய்யப்படும்
கடந்த வாரத்தில் வெளியாகி, உங்களது பேராதரவைப் பெற்ற எங்கள் 'தாராள பிரபு' திரைப்படத்தின் திரையிடல் அரசாணைகளுக்கு இணங்க, மார்ச் 31-ம் தேதி வரை நிறுத்தி வைக்கப்படுகிறது.எங்களது 'தாராள பிரபு' திரைப்படத்திற்கு நீங்கள் அளித்து வந்த போற்றுதலுக்குரிய அன்பிற்கும் ஆதரவுக்கும் எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் இந்த இக்கட்டான சூழலைக் கடந்த பின், அதன் மறுவெளியீட்டின்போதும், உங்களது மேலான ஆதரவை எதிர்நோக்குகிறோம். அனைவரும் பாதுகாப்புடன் இருக்க இறையருள் துணை நிற்கட்டும்".

வரவேற்பு
இவ்வாறு ஹரிஷ் கல்யாண் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். தாராள பிரபு திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. ஹரிஷ் கல்யாண், தன்யா ஹோப், விவேக், அனுபமா குமார், சச்சு உள்ளிட்ட பலர் நடித்த இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் படம் பாராட்டை பெற்ற நிலையில் கொரோனாவால் படம் திரையிடப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது படக்குழுவினரை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.


Click it and Unblock the Notifications











