தமிழில் படம் தயாரிக்கும் தோனி..மனைவி சாக்ஷியின் கதையை எடுக்கிறார்
பிரபல கிரிக்கெட் வீரர் தோனி திரைப்பட நிறுவனத்தை தொடங்கியுள்ள நிலையில் தமிழில் முதல் படத்தை தயாரிக்க உள்ளார்.
தோனிக்கும் தமிழக மக்களுக்குமான உறவு தனித்துவமானது. தோனியை கிட்டத்தட்ட தமிழக வீரராகவே தமிழ் மக்கள் கருதுகின்றனர்.
அதே எண்ணத்தில் உள்ள தோனி தமிழில் தனது மனைவி சாக்ஷியின் கதையை திரைப்படமாக தயாரிக்கிறார்.

தோனி இந்திய அணியின் சாகச கேப்டன்
பிரபல கிரிக்கெட் வீரர் தோனி இந்திய கிரிக்கெட் கேப்டன்களில் கபில் தேவுக்கு பின் பெரிய அளவில் புகழ்பெற்றவர். இவரது கேப்டன்ஷிப் தனித்துவமானது. கூல் கேப்டன் என முதன்முதலில் அழைக்கப்பட்டவர். இவர் படைத்த தனித்துவமான சாதனைகளும், இவர் தலைமையில் இந்திய அணி பெற்ற வெற்றிகளும் வாங்கிய கோப்பைகளும் அளவிட முடியாதது. பல இளம் வீரர்களை குறிப்பாக கோலி, ஹர்திக் பாண்டியா, பும்ரா உள்ளிட்ட பலரை உருவாக்கியவர் தோனி. தான் கேப்டன் பதவியிலிருந்து விலகியதை தோனிக்கு மட்டுமே தெரிவித்தேன் என கோலி சொல்லுமளவுக்கு அவருக்கு நெருக்கமானவர் தோனி.

தமிழக வீரராக கருதப்படும் தோனி
தோனி இந்திய வீரராக இருந்தாலும் ஐபிஎல் தொடங்கியது முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனாக இருக்கிறார். இடுவரை ஐபிஎல்லில் மாறாத டீம் கேப்டன் தோனி மட்டுமே இருப்பார். தோனி சிஎஸ்கே கேப்டனாக இருப்பதால் அவரை தமிழக வீரராகவே தமிழக மக்கள் பார்க்கிறார்கள். தோனிக்கும் மிகப்பிடித்த மாநிலமாக தமிழகம் உள்ளது. தோனிக்கும் திரைப்படத்துறைக்கும் மிகுந்த தொடர்பு உண்டு. அவரது வாழ்க்கை வரலாறு அழகாக திரைப்படமாக்கப்பட்டு பலமொழிகளில் வெளியானது. தற்போது தோனியே சினிமாத்துறையில் நுழைந்துள்ளார்.

முதல்படமே தமிழில் தயாரிக்கிறார் தோனி
தோனியும், அவரது மனைவி சாக்ஷி சிங் தோனியும் இணைந்து 'தோனி என்டர்டெயின்மெண்ட்' என சொந்தமாக பட நிறுவனத்தை தொடங்கி, தமிழில் திரைப்படம் ஒன்றை தயாரிக்கின்றனர். சாக்ஷி சிங் தோனியின் கருத்தாக்கத்தை மையமாக கொண்டு, குடும்ப பொழுதுபோக்கு படமாக தயாராகும் அந்த படத்தின் வேலைகள் விரைவில் தொடங்குகிறது. இந்நிறுவனம் அனைத்து மொழிகளிலும் பொழுதுபோக்கு அம்சம் உள்ள திரைப்படங்களை தயாரிக்க உள்ளது. இதற்கு முன் சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடிய ஐபிஎல் போட்டிகளை அடிப்படையாகக் கொண்டு பிரபலமான 'ரோர் ஆஃப் தி லயன்' எனும் ஆவணப் படத்தை தயாரித்து வெளியிட்டுள்ளது.'வுமன்ஸ் டே அவுட்' என்ற பெயரில் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு குறும்படம் ஒன்றையும் தயாரித்துள்ளனர்.

பலதரப்பட்ட கதைக்களத்துடன் படம் தயாரிக்க தோனி முடிவு
தோனி தயாரிக்கும் முதல் தமிழ் திரைப்படத்தை 'அதர்வா- தி ஆர்ஜின்' எனும் முப்பரிமாண வடிவிலான கிராஃபிக் நாவலை எழுதிய ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார். இந்த நாவல் ஒரு புதிய யுக கிராஃபிக் நாவல் ஆகும். இப்படத்தில் பணியாற்றும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிகிறது. தமிழில் மட்டுமின்றி அறிவியல் புனைவு கதை, கிரைம் கதைகள், நகைச்சுவை, சஸ்பென்ஸ் திரில்லர் மற்றும் பல வகையான உள்ளடக்கத்தை கொண்ட திரைப்படங்களை உருவாக்கவும் மற்றும் தயாரிப்பதற்காகவும், பல திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் திரைக்கதை ஆசிரியர்களுடன் தோனி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.

தோனியின் மனைவி சாக்ஷியின் கதை தமிழில் படமாகிறது
தமிழில் தோனி என்டர்டெய்ன்மெண்ட்டின் முதல் தயாரிப்பை இயக்கும் வாய்ப்பை பெற்றிருக்கும் ரமேஷ் தமிழ்மணி பேசுகையில், ''சாக்ஷி தோனி எழுதிய கதையின் கருவைப் படிக்கும்போதே இதன் தனித்துவத்தை என்னால் உணரமுடிந்தது. புத்தம் புதிதாய் இருந்த இந்த கதை குடும்பங்களை மகிழ்வூட்டி, சிரிக்கவைத்து சிந்திக்கவைக்கும் என்று நம்பினேன். இந்தக் கருவைத் திரைக்கதையாக்கி திரைப்படமாக்கும் வாய்ப்பை அவர் எனக்கு வழங்கியதைப் பெருமையாகக் கருதுகிறேன்." என்று கூறியுள்ளார்.

அனைத்து மொழிகளிலும் படம் தயாரிக்க தோனி முடிவு
"பிராந்திய மொழி படங்களுக்கும் இந்தி சினிமாவிற்கும் இடையேயான போட்டியாக இல்லாமல், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட படங்கள், வட மாநிலங்களிலும் சமமாக கொண்டாடப்படுவதால், தோனி என்டர்டெய்ன்மெண்ட், தன்னை மொழி சார்ந்த தயாரிப்பு நிறுவனமாக அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை. நமது நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் உள்ள இந்திய பார்வையாளர்களை, வலுவான கதைக்கருக் கொண்ட படங்கள் மூலம் சென்றடைவதே எங்களின் முன்னுரிமை. எங்களின் முதல் படம் தமிழில் தான் உருவாகும் என்றாலும், பல மொழிகளில் வெளியாகும்" என்று தோனி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்தின் வணிகப்பிரிவு தலைவரான விகாஸ் ஹசிஜா தெரிவித்துள்ளார்.

தோனியின் நன்றியுணர்வு
வித்தியாசமான கிரிக்கெட்டை வழங்கிய தோனி இந்தியாவில் தன்னை தூக்கி வைத்து கொண்டாடிய தமிழக மக்களை மறக்காமல் தனது பட நிறுவன தயாரிப்பின் முதல் படம் தமிழில் தயாரிக்க இறங்கியிருப்பது அவரது நன்றியுணர்வை காட்டுகிறது. தமிழில் பல நல்ல படங்களை ஏற்றுக்கொள்ளும் ரசிகர்கள் உள்ளதால் தோனியின் முதல் தயாரிப்பில் வெளியாகும் தமிழ் படம் வெற்றிப்படமாக அமைய வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications