அடிச்சு பட்டைய கெளப்பும் துருவ் விக்ரம்.. பைசன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!
சென்னை: இயக்குநர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள பைசன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை வெளியானது. கபடியை மையமாக வைத்து உருவாகியிருக்கும் இப்படத்தில், அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன் ஆகியோர் நடித்துள்ளனர். இயக்குநர் மாரி செல்வராஜின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் படத்தின் போஸ்டரும் இடம்பிடித்துள்ளது.
மிருகங்கள்: பரியேறும் பெருமாள் படத்தில் கருப்பி என்ற நாய், கர்ணன் படத்தில் கழுதை, இறந்த நாட்டார் தெய்வம், மாமன்னன் படத்தில் பன்னிக்குட்டி என மிருகங்களை காட்சி பொருளாக இல்லாமல் கதாப்பாத்திரமாக உருவாக்கி வருகிறார் மாரி செல்வராஜ். மாமன்னன் படத்தில் பன்னிக்குட்டிக்கு இறக்கை இருப்பது போன்ற காட்சிகளும் மெய்சிலிர்க்க வைத்தன. கர்ணன் படத்தில் காலில் கட்டப்பட்ட கழுதைக்கு விடுதலை தருவது போன்று காட்சிகளை குறியீடாக வைத்திருப்பார். அதேபோன்று பைசன் படத்தில் எருமை மாட்டு கொம்பு இடம்பெற்றுள்ளது.

வித்தியாசம்: பைசன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் புகைப்படத்தில் இரண்டு துருவ் விக்ரம் உருவங்கள் இடம்பெற்றுள்ளன. ஒன்றில் அவர் குனிந்திருக்கும்படியும், மற்றொன்றில் அவர் போட்டிக்கு தயாராக இருக்கும்படியும் வடிவமைக்கப்பட்டுள்ளது. அவருக்கு பின்னால் கொம்புடன் கூடிய எருமையின் தலையும் இடம்பிடித்துள்ளது. இயக்குநர் நெல்சன் காமெடியாக தனது படத்திற்கு புரோமோஷன் தேடுவார். மாரி செல்வராஜ் ரசிகர்கள் கொண்டாடும் பாடலாகவும், சித்திரங்கள் மூலமும் தனது படங்களுக்கு விளம்பரம் செய்வார். வித்தியாசமான அணுகுமுறையும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கின்றன.

நடிகர்கள்: பைசன் படத்தில் அழகம்பெருமாள், கலையரசன், பசுபதி, லால் மற்றும் ஹரி கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். முதல் முறையாக இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னாவுடன் இணைந்து இப்படத்தில் மாரி பணியாற்றுகிறார். இப்படத்தில் இசையும் புதுமையான பாடல்களாக ஒலிக்கும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. மாரி செல்வராஜ் படங்களுக்கு என்று தனி ரசிகர்கள் உள்ளனர். வாழை படம் கண்ணீர் மழையில் அனைவரையும் ஆழ்த்தியது அதேபோன்று இதுவும் இடம்பிடிக்கும் என்பது உறுதியாகிவிட்டது.
துருவ் விக்ரம்: வர்ம படத்திற்கு பிறகு துருவ் விக்ரம் கிராமத்து கதையில் நடித்து முடித்துள்ளார். இதற்கென அவரது தந்தை விக்ரம் போன்றே மெனக்கெட்டு நடித்துள்ளார் என்பது படத்தின் போஸ்டர்களை பார்க்கும்போதே தெரிகிறது. நிச்சயம் இப்படம் அவருக்கு திருப்புமுனையாக இருக்கும் என நம்புகிறார். கபடி விளையாட்டை மையப்படுத்தி இருப்பதால் ஒரு மாவீரனின் கதை என்றும் கூறப்படுவதால் துருவ் விக்ரம் நடிப்பில் புதிய பரிணாமத்தை காணலாம்.

மூர்க்கமாய் உடைக்கிறேன்: நான் எங்கிருந்து வருகிறேன் என்று உனக்கு தெரியும். ஏன் வருகிறேன் என்றும் உனக்கு தெரியும், வந்து சேர்ந்தால் என்ன செய்வேனென்றும் உனக்கு தெரியும் ஆதலால் .... நீ கதவுகளை அடைக்கிறாய் நான் முட்டிமோதி மூர்க்கமாய் உடைக்கிறேன் என மாரி செல்வராஜ் படத்தின் ஃபர்ஸ்லுக் போஸ்டருடன் பதிவிட்டுள்ளார். தன் வலிகளை, சந்தித்த பிரச்னைகளை காட்சிப்படுத்தும் மாரி செல்வராஜ் இப்படத்தில் தீவிர பாய்ச்சலாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பரியேறும் பெருமாள் படத்தை போன்று இல்லாமல் நீலம் புரொடெக்சனில் பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்படுகிறது. நீலம் புரொடெக்சன் எடுக்கும் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











