Bison: வாழை படத்துக்கு நடுவே பைசன் படக் காட்சிகள்.. துருவ் விக்ரமை பார்த்ததும் அதிரும் திரையரங்கம்
சென்னை: தமிழ் சினிமாவில் பல ஜனரஞ்சகமான இயக்குநர்களுக்கு மத்தியில், தமிழ் சினிமாவை கலை வடிவத்தில் உலகத்தரத்திற்கு கொண்டு செல்ல முயற்சிக்கும் சில இயக்குநர்கள் மட்டுமே உள்ளனர். அந்த வரிசையில் தான் சினிமாவில் அறிமுகமான முதல் படத்தில் இருந்து தனக்கான இடத்தை உருவாக்கியவர் மாரி செல்வராஜ். இவரது படங்கள் கலையாக மட்டும் இல்லாமல், ஜனரஞ்சகமாகவும் ரசிக்கப்படுகின்றது. மேலும் இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார்.
இவரது இயக்கத்தில் இன்று அதாவது ஆகஸ்ட் 23ஆம் தேதி ரிலீஸான படம் வாழை. வாழை படத்தில் நடிகர்கள் கலையரசன், திவ்யா துரைசாமி, நிகிலா விமல் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்திற்கு இசை அமைப்பாளர் சந்தோஷ நாராயணன் இசை அமைத்துள்ளார். மேலும் படத்தினை முன்னரே பார்த்த பல இயக்குநர்கள் மாரி செல்வராஜை பாராட்டினர். குறிப்பாக இயக்குநர் பா. ரஞ்சித் பேசுகையில், பொதுவாக பலரும் மாரி செல்வராஜின் பரியேறும் பெருமாள் படத்தைத்தான் மிகவும் பிடித்த படம் எனக் கூறுவார்கள். கர்ணன் மற்றும் மாமன்னன் படத்தை அவ்வாறு கூறமாட்டார்கள். அதற்கு காரணம் கர்ணன் மற்றும் மாமன்னன் ஆகிய படங்களில் எதிர்த்து சண்டை போடுகின்றான், கேள்வி கேட்கின்றான் என்பதாலே அந்தப் படங்கள் குறித்து யாரும் பேசுவதில்லை எனக் கூறினார்.

இயக்குநர் மிஷ்கின் பேசுகையில், இந்தப் படம் மிகப் பெரிய அனுபவம். அக்கிரா குரோசோவா கூறும்போது, நீங்கள் இந்தியாவை புரிந்துகொள்ள வேண்டுமென்றால், 'பதேர் பாஞ்சாலி' படத்தை பாருங்கள் எனக் கூறுவார். ஆனால், நான் சொல்வேன், நீங்கள் தமிழ்நாட்டைப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால், 'வாழை' படத்தை பாருங்கள் எனக் கூறுவேன். வாழை, இது படம் அல்ல, பாடம் எனக் கூறினார்.

அதேபோல் இயக்குநர் பாலா படத்தைப் பார்த்துவிட்டு, மாரி செல்வராஜை கட்டி அணைத்து முத்தம் கொடுத்தார். மேலும் மாரி செல்வராஜின் கரங்களை பற்றிக்கொண்டு அவருடன் நீண்ட நேரம் உட்கார்ந்துகொண்டு இருந்தார். வாழை படத்தைப் பார்த்த நடிகர் சூரி, மாரி செல்வராஜுக்கு முத்தங்களைக் கொடுத்துக் கொண்டே இருந்தார். இந்த வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.

ராம்: இயக்குநர் மணி ரத்னம் பேசுகையில், படம் மிகவும் சிறப்பாக இருக்கின்றது எனவும், சினிமாவில் இந்தப் படம் மிகவும் வலுவான குரல் எனவும், மாரி செல்வராஜை நினைத்தால் பொறாமையாக இருக்கின்றது எனவும் கூறினார். இந்த வீடியோக்களும் இணையத்தில் வேகமாக பரவியது. மாரி செல்வராஜ் உதவி இயக்குநராக பணியாற்றிய, இயக்குநர் ராம் படம் குறித்தும், மாரி செல்வராஜ் குறித்தும் மிகவும் சிலாகித்து பேசினார். குறிப்பாக, மாரி செல்வராஜின் முதல் கதை இது. ஆனால் நான் தான், இந்தப் படத்தை தனது முதல் படமாக செய்ய வேண்டாம் எனக் கூறினேன். மாரி செல்வராஜிடம் பல கதைகள் உள்ளது எனக் கூறினார்.

பைசன்: இன்று படம் ரிலீஸ் ஆன நிலையில் படத்தினைப் பார்த்த பலரும் பாராட்டி வருகின்றனர். நகைச்சுவை நடிகர் தங்கதுரை மாரி செல்வராஜை கட்டிப்பிடித்து அழுதார். இந்த வீடியோவை மாரி செல்வராஜே தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இப்படியான நிலையில் படத்திற்கு மத்தியில் மாரி செல்வராஜ் இயக்கி வரும் மற்றொரு படமான பைசன் படத்தின் காட்சிகள் திரையிடப்பட்டுள்ளது.
ரசிகர்கள்: இதனைப் பார்த்த ரசிகர்கள் ஆரவாரம் செய்து தியேட்டரையே அலறவிட்டுள்ளனர். பைசன் படத்தில் நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடிக்கின்றார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு 70 சதவீதம் முடிந்துவிட்டதாக மாரி செல்வராஜ் ஏற்கனவே கூறிய நிலையில் பைசன் படத்தின் காட்சிகள் திரையில் பார்த்ததும் ரசிகர்கள் ஆரவாரம் செய்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.


Click it and Unblock the Notifications











