துருவ் விக்ரம் படத்தின் வெளியான மாஸ் அப்டேட்.. பைசன் படம் ரிலீஸ் எப்போது?
சென்னை: பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களின் இடத்தை பிடித்தவர் இயக்குநர் மாரி செல்வராஜ். இவரது படங்களில் சமூகத்தில் நடக்கும் அவலங்களையும் அதன் பின் நடக்கும் அரசியல் அழுத்தங்களை எதார்த்தமாக உணர்ச்சி பொங்கும் வகையிலான காட்சியமைப்புகள் இருக்கின்றன. இவரது ஒவ்வொரு படங்கள் வெளிவரும்போதும் மக்கள் மத்தியில் பேசுபொருளாக விவாத மேடையாகவும் காட்சியளிப்பதும் உண்டு. விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.
கண்ணீரை வரவழைத்த வாழை: கடந்தாண்டு இயக்குநர் மாரி செல்வராஜ் தயாரித்து இயக்கிய வாழை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. தனது பால்ய வயதில் நடந்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி இப்படத்தை இயக்கினார். திரையிட்ட இடங்களில் மக்கள் கண்ணீர் விட்டு அழுதனர். தமிழ் சினிமாவில் லெஜண்ட் இயக்குநர்களும் மாரி செல்வராஜை கட்டியணைத்து முத்தமிட்டனர். அவரது வாழ்க்கையில் இப்படியொரு கொடுமையை கண்டும் மனம் வெதும்பி தவிக்கிறது என தெரிவித்தனர்.

இயக்குநர் பாலா வாழை படத்தை பார்த்து விட்டு கண்ணீருடன் மாரிசெல்வராஜின் கைகளை பிடித்த வீடியோ இணையத்தில் வைரலானது. வாழை படம் வசூலிலும் பெரும் சாதனை படைத்தது. இந்நிலையில், இயக்குநர் பா ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் துருவ் விக்ரமை வைத்து பைசன் படத்தை இயக்கி வருகிறார்.
கிராமத்து கதையில் துருவ் விக்ரம்: வர்மா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான துருவ் விக்ரம், அடுத்ததாக மகான் படத்தில் தனது தந்தை விக்ரமுடன் இணைந்து நடித்திருந்தார். இப்படத்தில் அவரது நடிப்பை பார்த்து பலரும் மெய்சிலிர்த்து ரசித்தனர். ஓடிடியில் வெளியான இப்படத்திற்கு பெரிய ஓபனிங் கிடைத்தது. சென்னையில் வளர்ந்த பையன் என்றாலும் கிராமத்து சப்ஜெக்டில் எப்படி ஒர்க் அவுட் ஆகும் என்ற கேள்விகள் எழுந்தாலும், மாரி செல்வராஜ் மீதுள்ள நம்பிக்கையில் இப்படத்தில் நடிக்க ஏற்றுக்கொண்டார்.
கபடியை மையப்படுத்தி உருவாகும் படம் என்பதால் துருவ் விக்ரம் அழுக்கு லுங்கியுடன், மாடுகளை மேய்ப்பதும், கபடி ஆடுவதும் போன்ற புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி கவனத்தை ஈர்த்தன. துருவ் விக்ரமிற்கு இப்படம் நல்ல பெயரை பெற்றுத்தரும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. மேலும், நடிகர் விக்ரமின் மகன் என்றால் சும்மாவா, டெடிகேசனுடன் பைசன் படத்தில் நடித்து வருவதை கண்டு ரசிகர்கள் வியந்தனர்.
பைசன் படம் ரிலீஸ் எப்போது: பைசன் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தின் மாஸான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் நிறைவடைய உள்ளதாகவும், கோடை விடுமுறையில் படம் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் மீண்டும் தனுஷை வைத்து இயக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்தினை தயாரிப்பாளர் தாணு தயாரிக்கவுள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
மாரி செல்வராஜ் ஹாட்ரிக் வெற்றி: பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் மற்றும் வாழை படத்தின் வெற்றியை தொடர்ந்து பைசன் படமும் மிகப்பெரிய வெற்றியை பெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மாரி செல்வராஜ் படத்திற்கு என்ற தனித்த அடையாளம் உண்டு. அதேபோன்று இப்படமும் வெகுஜன மக்களை கவர்ந்து, பெரிய விவாதத்தை ஏற்படுத்தும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.


Click it and Unblock the Notifications











