Dhurandhar 2 Box Office: துரந்தர் 2 பாக்ஸ் ஆபீஸ்.. இந்தியா அளவில் சாதனை.. முகேஷ் அம்பானி குஷி
சென்னை: கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி வெளியாகி, உலகளாவிய பாக்ஸ் ஆபீஸில் சாதனை படைத்து வரும் 'துரந்தர்' திரைப்படத் தொடரின் பிரம்மாண்ட வெற்றியை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி கொண்டாடியுள்ளார். தென்னிந்தியப் படங்களின் ஆதிக்கத்தால் சற்று தொய்வடைந்திருந்த பாலிவுட் சினிமாவிற்கு, ஜியோ ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவான இப்படம் மீண்டும் அசுர பலத்தை மீட்டுத் தந்துள்ளது.
படத்தின் இணைத் தயாரிப்பாளர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், ஜியோ ஸ்டுடியோஸின் சாதனைகளைக் குறிப்பிட்டு 'துரந்தர்' இந்தியத் திரையுலகில் ஒரு புதிய மைல்கல் என்று பாராட்டியுள்ளார். இது தொடர்பாக முகேஷ் அம்பானி குறிப்பிட்டுள்ளதாவது, "ஜியோ ஸ்டுடியோஸ் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக மிக அதிக வசூல் செய்த படங்களை வழங்கி, திரையுலகில் தன் அசைக்க முடியாத ஆதிக்கத்தை நிரூபித்துள்ளது. 2024-ல் 'ஸ்திரீ 2', 2025-ல் 'துரந்தர்', மற்றும் 2026-ல் வெளியான 'துரந்தர்: தி ரிவெஞ்ச்' ஆகிய படங்கள் மூலம் இந்த அரிய சாதனை நிகழ்ந்துள்ளது. குறிப்பாக, 'துரந்தர்' தொடரின் இரண்டு பாகங்களும் உலகளாவிய வசூல், வெளியீட்டு உத்தி மற்றும் ரசிகர்களின் வரவேற்பில் புதிய உலகளாவிய சாதனைகளைப் படைத்துள்ளன. இரண்டு படங்களும் இணைந்து ரூபாய் 3100 கோடிகளை உலக அளவில் வசூலித்துள்ளது.
மேலும், "இந்தியாவில் மட்டுமல்ல, உலகளவிலேயே ஒரே நேரத்தில் இரண்டு பாகங்களாகத் திட்டமிடப்பட்டு, ஒன்றாகவே படமாக்கப்பட்டு, மிகக் குறுகிய கால இடைவெளியில் அடுத்தடுத்து வெளியான முதல் திரைப்படத் தொடர் இதுதான்" என்றும் அவர் பெருமிதத்துடன் உரிமை கோரியுள்ளார். இருப்பினும், அம்பானியின் இந்த கருத்துக்கு சினிமா ஆர்வலர்கள் மத்தியில் மாற்று கருத்துகளும் எழுந்துள்ளன. இதற்கு முன்பே அனுராக் காஷ்யப் இயக்கத்தில் வெளியான 'கேங்ஸ் ஆஃப் வாசிப்பூர்' (பாகம் 1 & 2) திரைப்படங்களும் ஒன்றாகவே படமாக்கப்பட்டு, சில மாத இடைவெளியில் அடுத்தடுத்து ரிலீஸ் செய்யப்பட்டன என்பதை நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

அம்பானி பெருமிதம்: 'துரந்தர்' படத்தின் வசூல் குறித்து அம்பானி கூறுகையில், "இதன் முதல் பாகம் இந்திய சினிமா வரலாற்றிலேயே அதிக வசூல் செய்த படமாக சாதனை படைத்தது. 15 வாரங்கள் திரையரங்குகளில் ஓடிய நிலையில் வெளியான இதன் இரண்டாம் பாகம், தற்போது முதல் பாகத்தின் அனைத்து சாதனைகளையும் முறியடித்துள்ளது" என்றார். ரன்வீர் சிங்கிற்கு கிடைத்த ஆதரவு: முகேஷ் அம்பானியின் இந்தப் பாராட்டு, நடிகர் ரன்வீர் சிங்கிற்கு மிக முக்கியமான ஒரு காலகட்டத்தில் கிடைத்துள்ளது. ஃபர்ஹான் அக்தர் இயக்கவிருந்த 'டான் 3' திரைப்படத்தில் இருந்து ரன்வீர் சிங் திடீரென விலகிய முடிவு, பாலிவுட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

தடையும் நீக்கமும்: இதன் காரணமாக, 'வெஸ்டர்ன் இந்தியா சினி எம்ப்ளாயீஸ் ஃபெடரேஷன்' (FWICE) அமைப்பு ரன்வீர் சிங்கிற்கு எதிராக ஒத்துழையாமை இயக்கத்தை அறிவித்திருந்தது. ஆனால், தற்போது பிற திரையுலக அமைப்புகளுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு, அந்த அமைப்பு ரன்வீர் சிங்கிற்கு எதிரான தடையை வாபஸ் பெற்றுள்ளது. அம்பானியின் பாராட்டு கடிதம் மற்றும் ரன்வீர் சிங்கிற்கு தடை நீக்கப்பட்ட செய்தி பாலிவுட்டில் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், ரன்வீர் சிங்கின் ரசிகர்கள் இதனைச் சமூக வலைத்தளங்களில் வெகுவாகக் கொண்டாடி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications