மலர் டீச்சர் சொன்னதற்கு என்ன அர்த்தம்...6 ஆண்டுகளுக்கு பின் வெளியிட்ட பிரேமம் டைரக்டர்
திருவனந்தபுரம் : 2013 ம் ஆண்டு தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் நேரம் என்ற படத்தை இயக்கி, டைரக்டராக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன். இடர் 2015 ம் ஆண்டு இயக்கிய படம் பிரேமம்.
தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் ரீமேக் செய்யப்பட்டு, சூப்பர்ஹிட் அடித்த படம் பிரேமம். ஜார்ஜ் என்ற இளைஞனின் வாழ்க்கையில் பல்வேறு கால கட்டங்களில் 3 காதல் நிகழ்வுகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் இது.
அனுபமா பரமேஸ்வரன், சாய் பல்லவி, மடோனா செபாஸ்டியன், நிவின் பாலி என புதியவர்களின் கூட்டணியில் உருவாக்கப்பட்ட படம் பிரேமம். இந்த படத்தில் வரும் ஒவ்வொரு கேரக்டர்களும் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம்பிடித்தது. அதிலும் சாய் பல்லவி நடித்த மலர் டீச்சர் கேரக்டர் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.

6 ஆண்டுகளாக கேட்கப்பட்ட கேள்வி
இந்த படம் ரிலீஸ் ஆகி 6 ஆண்டுகள் ஆன பிறகும் பலரும் அதிக அளவில் கேட்ட கேள்வி, மலர் நிஜமாகவே பழைய நினைவுகளை இழந்து விட்டாரா அல்லது ஜார்ஜை நிராகரிக்க பழசை மறந்து விட்டதாக அவர் கூறினாரா என்ற கேள்வி தான்.

உண்மையை சொன்ன டைரக்டர்
இந்நிலையில் சமீபத்தில் பேஸ்புக்கில் ரசிகர்களிடம் அல்போன்ஸ் கலந்துரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர், ஒரு சந்தேகம் .. பிரேமத்தில் .. ஜார்ஜிடம் உண்மைகள் எதையும் சொல்ல விரும்பவில்லை என்று மலர் கடைசியாக சொல்கிறாள் .. அதை மூன்று முறை பார்த்த பிறகும் நாங்கள் குழப்பமடைகிறோம் .. மலருக்கு உண்மையில் நினைவுகள் இழப்பு ஏற்பட்டதா? அல்லது மலர் வேண்டுமென்றே ஜார்ஜை தவிர்க்க விரும்பினாளா? அல்லது சமீபத்தில் மலர் தன் நினைவைத் திரும்பப் பெற்றார், அதனால் மலர், திருமணம் செய்துகொண்டுள்ள ஜார்ஜிடம் பழைய உண்மைகளை சொல்ல விரும்பவில்லையா? இவற்றில் எது சரி? என கேட்டார்.

மலருக்கு நினைவு வந்தது உண்மை
இதற்கு பதில் அளித்த அல்போன்ஸ் புத்திரன், "மலர் நினைவை இழந்துவிட்டாள். அவள் பழைய நினைவு வந்ததும் அறிவழகனுடன் பேசியிருக்கலாம். உடனே அவனுடன் அங்கு சென்றதும் திருமண கோலத்தில் நிற்கும் ஜார்ஜ் செலினுடன் மகிழ்ச்சியாக இருப்பதாக மலர் உணர்கிறாள். ஆனால் அங்கு சூப்பராக, ஜார்ஜ் மலருக்கு மீண்டும் நினைவு வந்துவிட்டதை புரிந்துகொள்கிறான்.

இசையில் சொன்ன உணர்வு
இது உரையாடல்களில் கூறப்படவில்லை. ஆனாலும் நான் இந்த நேரத்தில் வயலினுக்கு பதிலாக ஹார்மோனிகா இசையுடன் காட்சியில் காட்டியுள்ளேன். உங்கள் சந்தேகம் நீங்கும் என்று நம்புகிறேன். இந்த பதில்.. உங்கள் கேள்விகளில் கடைசி கேள்வியாக உள்ளது. சமீபத்தில் மலர் நினைவை திரும்ப பெற்றாள் என்பதுதான்..." என குறிப்பிட்டுள்ளார்.

சப் டைட்டிலால் வந்த குழப்பம்
இதே போன்று ஷெலின், மேரியின் உடன் பிறந்த தங்கை இல்லை. சப் டைட்டிலில் அக்கா என போடப்பட்டுள்ளதால் பலரும் இந்த கேள்வியை கேட்டுள்ளனர். ஒருவேளை மேரி, ஷெலினின் உடன் பிறந்த அக்காவாக இருந்தால், ஷெலினின் திருமணத்தின் போது மேரியும் இருப்பது போல் காட்டி இருப்பேன் எனவும் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











