கெட்ட வார்த்தைகள்.. ஆபாச வசனங்கள்.. பாலியல் தொல்லைகளுக்கு வழி வகுக்கிறதா ஒடிடி படைப்புகள்?
சென்னை: மீண்டும் லாக்டவுன் போடப்பட்டு இருப்பதால் ஒடிடி தளங்கள் அட்டகாசம் தாங்க முடியவில்லை.
சென்சார் இல்லாத காரணத்தினால் முழு நிர்வாண காட்சிகள், ஆபாச வசனங்கள் என எல்லை மீறுகின்றன.
தமிழில் உருவாகும் வெப் தொடர்களும் சமூகத்தையும் மாணவர்களின் எதிர்காலத்தையும் கருத்தில் கொள்ளாமல் இதே பாணியை கடை பிடிப்பது வேதனையளிக்கிறது.

மீண்டும் ஓங்கிய கை
இந்த ஆண்டு துவக்கத்தில் கொரோனா பாதிப்பு குறைந்ததை தொடர்ந்து தியேட்டர்களில் படங்களின் ரிலீஸ், பிக் பாஸ், ஐபிஎல் என ரசிகர்கள் ஒடிடிக்கு சற்றே ஓய்வு கொடுத்திருந்தனர். கொரோனா இரண்டாம் அலை காரணமாக தற்போது லாக்டவுன் போடப்பட்டுள்ளதால் மீண்டும் ஒடிடி தளங்களின் கைகள் ஓங்கி உள்ளன.

நிர்வாண காட்சிகள்
சமீபத்தில் வெளியான நடிகை தமன்னாவின் நவம்பர் ஸ்டோரி வெப் தொடரிலே போஸ்ட் மார்ட்டம் பண்ணும் காட்சிகளில் எந்தவொரு சென்சாரும் இன்றி அப்பட்டமாக முழு நிர்வாண உடலை காட்டும் காட்சிகள் இடம்பெற்று இருந்தன. மேலும், பல இந்தி மற்றும் ஆங்கில வெப் தொடர்களில் ஏராளமான ஆபாச காட்சிகள் நிரம்பி வழிகின்றன.

கெட்ட வார்த்தைகள்
ஆங்கிலம் மற்றும் இந்தி வெப் தொடர்களும் தமிழில் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வருகின்றன. அவற்றிலும் அதிகளவில் ஆபாச வசனங்கள் எந்தவொரு தணிக்கையும் இன்றி அப்படியே வந்து விழுகின்றன. அனைவரும் பார்க்கும் வெப் தொடர்களிலும் இது போன்ற கெட்ட வார்த்தைகள் நிறைந்திருப்பது வளரும் குழந்தைகளுக்கு சாபக்கேடாகவே அமைந்து வருகிறது.

தி ஃபேமிலி மேன் தொடரில்
சமந்தா, மனோஜ் பாஜ்பாயி, பிரியாமணி நடிப்பில் உருவாகி உள்ள தி ஃபேமிலி மேன் இரண்டாம் பாகம் தொடரில் ஈழத் தமிழர்களை தவறாக சித்தரித்துள்ளதாக அந்த தொடரை தடை செய்ய வேண்டும் என்கிற கண்டனங்கள் எழுந்து வருகின்றன. அதன் முதல் பாகத்தை தமிழ் மொழியில் பார்த்து வரும் ரசிகர்கள், மனோஜ் பாஜ்பாயின் மகள் பள்ளியிலேயே போதைப் பொருள் வைத்திருக்கும் காட்சிகள் மற்றும் பள்ளி பருவத்திலேயே செல்போனால் சீரழிவது உள்ளிட்ட காட்சிகளை சர்வ சாதாரணமாக வைத்துள்ளனர்.

பெற்றோர்கள் கவனத்திற்கு
பல இடங்களில் இது போன்ற வெப் தொடர்களை குடும்பத்துடன் பலரும் பார்த்து வருகின்றனர். மேலும், இதை விட மோசமான வெப் தொடர்களையும் குழந்தைகள் ஸ்மார்ட் போன்களில் பார்த்து வருகின்றனர். ஆசிரியர்கள், சக மாணவர்கள் என பலரும் ஆபாச வெப் தொடர் லிங்குகளையும் ஷேர் செய்து வருகின்றனர்.
Recommended Video

ஸ்மார்ட் போனை செக் செய்யுங்க
ஆன்லைன் வகுப்பு காரணமாக செல்போன்கள் பயன்படுத்தும் பதின்ம வயது குழந்தைகளே இதனால் மிகவும் பாதிக்கப்படுவதாக ஏகப்பட்ட புகார்கள் எழுந்துள்ளன. இதனால், பெற்றோர்கள் அடிக்கடி எந்தவொரு பிரைவசியும் கொடுக்காமல் உங்களின் குழந்தைகளின் செல்போன்கள், லேப்டாப் உள்ளிட்டவற்றை செக் செய்வது அவசியம்.

மனம் விட்டு பேசுங்க
லாக்டவுன் காலங்களில் குழந்தைகளுடனும் குடும்பத்துடனும் மனம் விட்டு பேசுங்க, நேரடியாக விளையாடுங்க.. வீட்டிலேயே வேலை செய்யும் பலரும், வேலை முடிந்தவுடன் ஏதாவது ஒரு ஒடிடி தளத்தில் மூழ்கி விடுகின்றனர். பள்ளிக் கூடம், கல்லூரி இல்லாததால் குழந்தைகளும் ஒடிடி தளங்களிலேயே பெரும்பாலான நேரத்தை செலவிடுகின்றனர். இதனால், அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக மனநல ஆலோசகர்கள் பலரும் எச்சரித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











