பொள்ளாச்சி படுகொலை.. செத்துமடிந்த மக்கள்.. இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் உண்மையை சொல்லுமா பராசக்தி!
சென்னை: சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா நடித்து இந்த வாரம் வெளியாகவிருக்கும் திரைப்படம் 'பராசக்தி'. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாக இருக்கும் இந்த படத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாக வைத்து படம் எடுக்கப்பட்டு இருப்பதை டிரைலரில் பார்க்க முடிகிறது. இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது செத்துமடிந்த உயிர், சுட்டுத்தள்ளிய ராணுவம் , போர்க்களமான பொள்ளாச்சி.. அப்படி போராட்டத்தில் என்ன நடந்தது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்த செய்தியை படிப்பதற்கு முன் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாக வைத்து ' பராசக்தி' படத்தை எடுத்து இந்த தலைமுறையினருக்கும் போராட்டத்தின் வலியை சொல்ல முற்பட்ட படக்குழுவினருக்கு நன்றி. இன்றைய 'ஜென்ஸி'களுக்கு இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் வலி தெரியவில்லை என்றாலும், அந்த உணர்வு ரத்தத்தோடு ஊறி இருப்பதால், இன்றும் சோஷியல் மீடியாவில் 'இந்தி தெரியாது போடா' என பதிவிடுவதை பார்க்க முடிகிறது. இந்தி எதிர்ப்பு போராட்டம் எப்போது, எங்கு ஆரம்பித்தது தெரியுமா?

இந்தி எதிர்ப்பு முதல் போராட்டம்: முதன் முதலில் 1930 ஆண்டு பிற்பகுதியில் தான் இந்தித் திணிப்புக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டது. அந்த ஆண்டில் சென்னை மாகாண சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் ராஜாஜி தலைமையில் ஆட்சியமைத்தது. முதலமைச்சராகப் பதவியேற்ற ராஜாஜி, மாணவர்கள் கட்டாயமாக இந்தி படிக்க வேண்டும் என பேசி மாணவர்களின் மனத்தில் இருந்த கோவத்தை தூண்டினார். இதனால், அப்போது இருந்த நீதிக் கட்சி, சுயமரியாதை இயக்கம் அதை கடுமையாக கண்டித்தனர். அதோடு விடாமல், 1938ஆம் ஆண்டு மாணவர்கள் கட்டாயம் இந்தி படிக்க வலியுறுத்தும் வகையில் ஒரு அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி, ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவர்கள் கட்டாயம் இந்தி படிக்க வேண்டுமெனக் கூறப்பட்டது. இதில் முதற்கட்டமாக 125 பள்ளிக்கூடங்களில் இது அறிமுகப்படுத்தப்பட்டது.
மீண்டும் இந்தி: இதனை எதிர்த்து தொடர் போராட்டங்கள் நடந்து கொண்டிருந்த போது, முதலமைச்சர் ராஜாஜி தனது பதவியை ராஜினாமா செய்தார். பின் 1940 ஆம் ஆண்டு ஆளுநர் ஜான் எர்ஸ்கின், இந்தி கட்டாயமாக்கும் அரசின் உத்தரவைத் திரும்பப் பெற்றார். இதனால், மாணவர்களிடம் சலசலப்பு அடங்கி இருந்த நேரத்தில் இந்தியா சுதந்திரமடைந்த பிறகு 1948ஆம் ஆண்டில் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் முதலமைச்சராகி பள்ளிகளில் மீண்டும் இந்தியைக் கற்பிக்க வேண்டும் என்ற உத்தரவால் பள்ளிகளில் மீண்டும் இந்தி கட்டாயமாக்கப்பட்டது.
இந்தி மட்டுமே ஆட்சி மொழி: அதன் பின்னும் மீண்டும் போராட்டம் நடைபெற்றதால், 1949ஆம் ஆண்டு முதலமைச்சர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதற்குப் பிறகு கட்டாய இந்தி திட்டம் திரும்பப் பெறப்பட்டது. அதற்குப் பிறகு, 1965ஆம் ஆண்டு நெருங்கியபோது இந்தி கட்டாயம் என்ற பிரச்சனை ஆரம்பமானது. அதற்கு காரணம், இந்தியா குடியரசாக அறிவிக்கப்பட்ட பிறகு, முதல் 15 ஆண்டுகளுக்கு மட்டுமே இந்தியும் ஆங்கிலமும் இந்தியாவின் ஆட்சி மொழியாக இருக்க அரசமைப்புச் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டிருந்தது. 1965க்கு பிறகு இந்தி மட்டுமே ஆட்சி மொழியாக நீடிக்கும் எனக் கூறப்பட்டிருந்தது. அதன்படி, ஜனவரி 26, 1965க்குப் பிறகு இந்தி மட்டுமே இந்தியாவின் ஆட்சி மொழியாக இருக்கும். இதையடுத்து 1965ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி முதல் மத்திய அரசின் அலுவல் மொழியாக இந்தியே பயன்படுத்தப்படும் என்றும், முக்கியமான சுற்றறிக்கைகள், அரசாணைகள் இந்தியிலும் ஆங்கிலத்திலும் வெளியிடப்படும் என மத்திய உள்துறை அமைச்சராக இருந்த குல்சாரிலால் நந்தா அறிவித்ததார். இதைத்தொடர்ந்து 1965ஆம் ஆண்டு குடியரசு நாள் நெருங்க நெருங்க இந்தியை அலுவல் மொழியாக்குவதை எதிர்த்து போராட்டங்கள் தமிழ்நாட்டில் தீவிரமாகின.

சுட்டுக்கொல்லப்பட்டனர்: ஜனவரி 26ஆம் தேதி துக்க நாளாக அனுசரிக்கப்படும் என்று தி.மு.கவின் பொதுச் செயலாளர் அண்ணாதுரை அறிவித்தார். அப்படி ஒரு போராட்டம் நடக்கக்கூடாது என ஜனவரி 22ஆம் தேதியே அவர் கைது செய்யப்பட்டார். இருந்த போது ஜனவரி 25ந் தேதி போராட்டம், ஊர்வலங்கள் தீவிரமடைந்தன. அந்த போராட்டத்தின் உச்சகட்டமாக திருப்பூர் தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய போது, அதனைத் தடியடி நடத்தி காவல்துறை கலைத்தது. அந்த தடியடியில் 19 வயது மாணவர் ஒருவரை போலீசார் சுட்டதில் அவர் உயிரிழந்தார். இதனால், ஆத்திரமடைந்த மக்கள் தபால் நிலையத்தையும், ரயில் நிலையத்தையும் கொளுத்தினர். போராட்டம் கட்டுக்கடங்காமல் போகவே ராணுவம் வரவழைக்கப்பட்டு போராட்டத்தை கட்டுப்படுத்தினர். திருப்பூரில் போராட்டம் கட்டுப்பட்டாலும், மற்ற இடங்களில் நடந்த போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிசூட்டில், 25க்கும் மேற்பட்டோர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
செத்துமடித்த மாணவர்கள்: மாணவர்கள் கொத்து கொத்தாக சுடப்பட்டு கொல்லப்பட்ட செய்தி காட்டுத்தீபோல பரவ போராட்டம் மேலும் தீவிரமானது. தமிழக மாணவர் போராட்ட கவுன்சில், பிப்ரவரி 12ஆம் தேதி நடத்திய போராட்டம் தான் சோகத்தின் உச்சம், பொள்ளாச்சியில் தபால் நிலையம் முன்பாக சில மாணவர்கள், பொதுமக்கள் பலரும் திரண்டனர். தபால் நிலையத்தில் இருந்த பெயர் பலகையில் இருந்த இந்தி எழுத்துகளை அழித்த போது, போலீசார் சுட்டத்தில் அந்த மாணவன் உயிரிழந்தார். இதனால், ஆத்திரமடைந்த மாணவர் மற்றும் பொதுமக்கள் கூட்டம் போலீசார் மீது கல்வீசித் தாக்குதல் நடத்த அங்கிருந்து சிதறி ஓடிய கூட்டம் சிறு சிறு குழுவாக பிரிந்து மத்திய, மாநில அரசுகளின் அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்த ஆரம்பித்தனர். நிலைமை கைமீறிப்போனதால், கோயம்புத்தூரிலிருந்து ராணுவம் வரவைக்கப்பட்டது. ஆறு லாரிகளில் வந்த ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதில் நான்கு வயது சிறுவனும் சுட்டுக்கொல்லப்பட்டான். அரசு இறந்தவர்களின் எண்ணிக்கையை குறைவாகவே கணக்குகாட்டியது. இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களுக்குப் பிறகு பொள்ளாச்சி போர்க்களத்தைப் போலக் காட்சியளித்தது. இந்த தகவல்களை "Struggle for Freedom of Languages in India'' என்கிற நூலில் பேராசிரியர் அ. ராமசாமி குறிப்பிட்டுள்ளார்.
இப்படி தமிழ் நாட்டில் பலரின் உயிர் தியாகத்தால் நடந்த ஒரு உணர்ச்சிமிகு போராட்டத்தை பற்றி 'பராசக்தி' படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த வரலாற்றை தெரிந்து தான் படத்தின் இயக்குநர் இந்த படத்தை எடுத்து இருக்காரா.,.. இல்லையா என்பது படம் வெளியான பிறகு தான் தெரியும். ஒரு வேலை வரலாற்றை மாடைமாற்றி இருந்தால் பராசக்தி படம் வெளியான பிறகு பிரச்சனையை சந்திக்கும்.


Click it and Unblock the Notifications











