சிம்புவின் புதிய பட அறிவிப்பு.. எஸ்டிஆர் 48க்கு எந்தப் பிரச்னையும் இல்லையாம்
சென்னை: மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசனுடன் தக் லைஃப் படத்தில் நடித்து முடித்திருக்கிறார் சிம்பு. அந்தப் படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே கமலின் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தனது 48ஆவது படத்தில் நடிக்கவும் கமிட்டானார். ஆனால் அந்தப் படத்தின் அறிவிப்போடு சரி; அடுத்த அப்டேட்டுகள் எதுவுமே வரவில்லை. இந்தச் சூழலில் சிம்பு அடுத்த படம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டார்.
சிம்பு சிறு வயதிலிருந்தே நடித்துவருபவர். வரிசையாக பல படங்களில் நடித்த அவருக்கு ஏகப்பட்ட ஹிட் படங்களாக அமைந்தன. முக்கியமாக் திறமை வாய்ந்த நடிகர் என்ற பெயரையும் அவர் பெற்றார். அதேசமயம் ஷூட்டிங்கிற்கு ஒழுங்காக வருவதில்லை என்ற சர்ச்சைகளும் அவரை சுற்றின. மேலும் சில காதல் தோல்விகளும் நடந்தன. சூழல் இப்படி இருக்க திடீரென அவர் ஆன்மீக வழியில் சென்றார். சினிமாவிலிருந்தும் ஒதுங்கினார். இதன் காரணமாக சிம்புவின் கரியர் அவ்வளவுதான் என்று பலர் பேசினார்கள்.

மாஸ் ரீ என்ட்ரி: சூழல் இப்படி இருக்க தனது உடல் எடையை குறைத்து ஈஸ்வரன் படத்தில் ரீ என்ட்ரி கொடுத்தார். அந்தப் படம் சரியாக போகவில்லை. அடுத்ததாக அவர் நடித்த மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல ஆகிய படங்களில் மாநாடும், வெந்து தணிந்தது காடும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன. சிம்புவும் மிகச்சிறப்பாக நடித்திருந்தார். இதன் காரணமாக சிம்பு பழைய ஃபார்முக்கு வந்துவிட்டார் என்று அவரது ரசிகர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியடைந்து கொண்டாடினார்கள்.
தக் லைஃப்: வரிசையாக மூன்று படங்களில் நடித்த சிம்பு இப்போது கமல் ஹாசனுடன் தக் லைஃப் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். மணிரத்னம் இயக்கியிருக்கும் அந்தப் படத்தில் கமல், சிம்பு, அபிராமி, திரிஷா என பலர் நடித்திருக்கிறார்கள். முதன்முறையாக கமலுடன் இணைந்து சிம்பு நடித்திருப்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. அநேகமாக அடுத்த வருடம் பொங்கலுக்கு தக் லைஃப் படம் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எஸ்டிஆர் 48: இதற்கிடையே கமலின் தயாரிப்பில் தனது 48ஆவது படத்தில் நடிக்க கமிட்டானார் சிம்பு. அதனை தேசிங்கு பெரியசாமி இயக்குவார் என்று அறிவிக்கப்பட்டது. கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கி வெகுவாக கவனம் ஈர்த்தவர் தேசிங்கு. எனவே அவருடன் சிம்பு கூட்டணி வைத்திருப்பதால் படத்தின் மீதான ஆவல் அதிகரித்தது. படத்தின் அறிவிப்பு வந்ததோடு மட்டும் இருக்கிறது. சிம்புவோ இந்தப் படத்துக்காக மார்ஷியல் ஆர்ட்ஸ் எல்லாம் கற்றுக்கொண்டார்.
மோசடி செய்யப்பட்ட தேசிங்கு?: இந்நிலையில் சிம்பு தனது புதிய பட அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். அதன்படி தம், மன்மதன், வல்லவன், விண்ணைத்தாண்டி வருவாயா ஆகிய படங்களின் கலவையாக GEN Z மோடில் அடுத்த படம் இருக்கும் என்று அறிவித்தார் சிம்பு. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தாலும் இன்னொரு கேள்வியை முன்வைக்க ஆரம்பித்திருக்கின்றனர். அதாவது எஸ்டிஅர் 48 படத்தின் நிலை என்னதான் ஆனது. ஒருவேளை படம் ட்ராப் செய்யப்பட்டுவிட்டதா என்று கேட்கிறார்கள்.
மேலும் எஸ்டிஆர் 48 படத்தின் கதை முதலில் ரஜினிக்குத்தான் சொல்லப்பட்டது. அந்தக் கதை அவருக்கு பிடித்திருந்தாலும் சில காரணங்களால் நடிக்கவில்லை. எனவே முதலில் ரஜினியிடம் ஏமாந்த தேசிங்கு இப்போது கமல் ஹாசன் மற்றும் சிம்புவால் ஏமாற்றப்பட்டாரா என்று காட்டமான கேள்வியை முன்வைக்கிறார்கள். அதேசமயம் எஸ்டிஆர் 48 ட்ராப் எல்லாம் செய்யப்படவில்லை. அந்தப் படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவிருக்கிறது. அதனை முடித்துவிட்டுத்தான் சிம்பு தனது அடுத்த பட வேலைகளில் இறங்குவார் என்றும் ஒரு தரப்பினர் பேசுகிறார்கள். எது எப்படியோ தேசிங்கு பெரியசாமி என்ற நல்ல இயக்குநர் விரைவில் ஒரு படத்தை கொடுக்க வேண்டும் என்பதுதான் சினிமா ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications











