விமான நிலைய விவகாரம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டாரா விஜய் சேதுபதி? பிஆர்ஓ விளக்கம்!
சென்னை: விமான நிலைய விவகாரம் குறித்து நடிகர் விஜய் சேதுபதி அறிக்கை வெளியிட்டதாக கூறப்பட்ட நிலையில் அதுகுறித்து அவரது பிஆர்ஓ விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி மற்றும் மலையாள படங்களிலும் பிஸியாக உள்ளார்.
இந்நிலையில் கடந்த புதன் கிழமை மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக நடிகர் விஜய் சேதுபதி பெங்களூரு சென்றிருந்தார்.
சூழ்ந்த வெள்ளம்.. உடனே ஓடி வந்த அமைச்சர் சேகர் பாபு.. ஆதரவற்றோர் இல்ல குழந்தைகள் பத்திரமாக மீட்பு

கெம்பெகவுடா விமான நிலையம்
பெங்களூரு கெம்பெகவுடா விமான நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதியுடன் சென்ற அவரின் உதவியாளர், அங்கிருந்த ஒருவரால் எட்டி உதைக்கப்பட்டார். அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் அந்த நபருக்கும், நடிகர் விஜய் சேதுபதி தரப்புக்கும் இடையே சமரசம் ஏற்பட்டதால் காவல்துறை வழக்குப்பதிவு நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் விளக்கம் தரப்பட்டது.

தேவரை அவமதிக்கும் விதமாக
இந்நிலையில், விமான நிலையத்தில் விஜய் சேதுபதியின் உதவியாளரை எட்டி உதைத்த நபர், தான் ஒரு தமிழர் எனவும், அன்று விஜய் சேதுபதியுடன் பேசியபோது அவர் இந்தியாவுக்கு எதிராக தாய்நாட்டை விமர்சித்தும், பசும்பொன் முத்துராமலிங்க தேவரை அவமதிக்கும் விதமாக பேசியதாகவும் கூறினார்.

அவர்கள் தாக்கியதால் தாக்கினேன்
இதனை தான் கண்டித்த போது விஜய் சேதுபதியின் உதவியாளர்கள் தன்னை தாக்கியதாகவும், தன்னை தாக்கியதால்தான் தான் அவர்களை பதிலுக்கு எட்டி உதைத்ததாகவும் அந்த நபர் யூட்யூப் சேனல்களுக்கு பேட்டி அளித்தார்.

அறிக்கை விட்டாரா விஜய்சேதுபதி?
இந்நிலையில் விஜய் சேதுபதி விமான நிலையத்தில் நடந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் அளித்ததாக கூறி அறிக்கை ஒன்று வைரலானது. அதில் நான் பெங்களூர் செல்லும் விமானத்திற்காக காத்திருந்த போது ஒரு நபர் என்னை அணுகினார். அவர் நிதானமற்ற நிலையில் என்னை அணுகினார். பிறகு பேசுகிறேன் என்றேன். அப்போது, நீயும் என் ஜாமி, நானும் நடிகன் குரல் என கத்தினார்.

என்னை நன்றாக தெரியும்
ஆனால் அவர் கூறுவது போல் நாட்டை பற்றியோ, ஆன்மிகம் பற்றியோ, தமிழர்களை உயிராகக் கருதிய நமது பசும்பொன் அய்யாவைப் பற்றியோ நான் எதுவும் சொல்லவில்லை. பின்னர், அவரது நிலையைக் கருத்தில் கொண்டு அவரது மன்னிப்பை ஏற்றுக்கொண்டேன். ரசிகர்களுக்கு என்னை நன்றாக தெரியும், அவர்களுடன் நான் எப்படி நடந்துகொள்கிறேன். ஆனால் அவர் தொடர்ந்து என்னை அவதூறாகப் பேசினால், உரிய நடவடிக்கை எடுக்கத் தயங்கமாட்டேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

விஜய் சேதுபதி பிஆர்ஓ விளக்கம்
இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள விஜய் சேதுபதியின் பிஆர் ஓ, நடிகர் விஜய் சேதுபதி இதுவரை அந்த விவகாரம் தொடர்பாக எந்த அறிக்கையும் வெளியிடவில்லை என கூறியுள்ளார். முன்னதாக விஜய் சேதுபதி தரப்பை தாக்கியதாக கூறப்படும் நடிகர் மகா காந்தி, விஜய் சேதுபதி தேசிய விருது பெற்றதற்காக வாழ்த்து கூறியதாகவும் ஆனால் அதனை விஜய் சேதுபதி ஏற்கவில்லை என்றும் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











