ரொம்ப போரடிக்குதா.. ஜாலியா இந்தப் படத்தைப் பாருங்க.. ஒரே லவ்வுதான்!
சென்னை: லாக்டவுன் பல பேருக்கு வாழ்வாதாரப் பிரச்சினை.. பலருக்கு போரடிக்குதேன்னு கவலை.. இன்னும் பலருக்கு அடுத்தடுத்து லாக்டவுன் போட்டா என்னாவது என்ற கவலை..

எல்லாத்தையும் விடுங்க பாஸ்.. திரும்பிய பக்கமெல்லாம் பாசிட்டிவ் பாசிட்டிவ் என்று ஒரே நெகட்டிவாகவே இருக்கிறது.. எல்லாத்தையும் மறந்துட்டு ஜாலியா ஒரு படம் பார்க்கலாமா.
"கேர் ஆப் காதல்"
இப்படி ஒரு படம் போன பிப்ரவரியில் வந்துச்சு.. நிறையப் பேர் தியேட்டரில் பார்த்திருக்கலாம். பார்க்காதவர்கள் கவலையே பட வேண்டாம்.. நெட்பிளிக்ஸில் இருக்கிறது.. குடும்பத்தோடு உட்கார்ந்து ஜாலியா பார்க்கக் கூடிய ஒரு அருமையான காதல் படம்தான் இந்த கேர் ஆப் காதல்.

வழக்கமான காதலைப் பேசும் படம்தான்.. ஆனால் நான்கு காதல்கள் இதில் பின்னிப் பிணைந்துள்ளன.
பழனி - ராதா, ஜோசப் - பார்கவி, தாடி - சலீமா, வேலு - சுனிதா.. இதுதான் அந்த நான்கு காதல் ஜோடிகள்.

காதல் பற்றிய படமென்றாலே கண்ணும் கண்ணும் நோக்கி, மனசும் மனசும் மயங்கி, வீடும் வீடும் மோதி, ஓடிப் போய் திருமணம் என்றெல்லாம் இருக்கும்தானே.. இதிலும் அப்படிப்பட்ட கலாட்டாக்கள் இருக்கின்றன. ஆனால் சொல்லிய விதத்தில்தான் கலகலக்க வைத்திருக்கிறார்கள்.
பழனியாக வருகிறார் முதல் மரியாதை தீபன் (ஜாக்கெட் போடாத ரஞ்சனியுடன் சேர்ந்து.. "அந்த நிலாவைத்தானே கையில பிடிச்சேன்".. எஸ்.. அவரேதான்)

ஜோசப்பாக கார்த்திக் ரத்தினம் - "தாடி"யாக வெற்றி - வேலுவாக மாஸ்டர் நிஷேஷ் என பிற கலைஞர்கள். சலீமாவாக மும்தாஸ் சர்க்கார், ராதாவாக சோனியா கிரி, சுனிதாவாக ஸ்வேதா, பார்கவியாக ஆயிரா பாலக் இன்னொரு பக்கம்.

ஆக்சுவலி இது ஒரு ரீமேக் படம்.. ஸோ.. கதையை அப்படியே எடுத்து கூடுதலாக மஞ்சள் தடவி அழகாக பொறித்து கொடுத்துள்ளனர். பரவாயில்லை, சாப்பிடுவதற்கு இந்த ரீமேக் காதலும் கூட நல்லாவே இருக்கிறது.
தெலுங்கில் வெளியான கேர் ஆப் காஞ்சரபாலம் என்ற படத்தோட ரீமேக்தான் இந்த கேர் ஆப் காதல். பிப்ரவரி 2021ல் வெளியான இப்படம் விமர்சகர்களின் பாராட்டுக்களைப் பெற்ற படம். அதேசமயம், ஒரிஜினல் தெலுங்குப் படத்துடன் ஒப்பிட்டால் அதன் சுவாரஸ்யம் கொஞ்சம் கூட குறையாமல் ஜாலியாகவே எடுத்துள்ளார் இயக்குநர் ஹேமம்பர் ஜஸ்தி.

இந்த நான்கு காதல்களில் பழனியோட காதல்தான் ரொம்ப ஜாலியாக இருக்கிறது. இதற்காகவே இந்தப் படத்தைப் பார்க்கலாம்.. காரணம் மற்ற காதல்கள் வழக்கமான காதல்தான்.. ஆனால் பழனியின் காதல் ரொம்ப சுவாரஸ்யமாக இருக்கிறது.

49 வயதான பழனிக்கு கல்யாணம் ஆகவில்லை. "பொட்டை" என்று ஊரே அவரை காலி செய்கிறது. அதைக் காதிலேயே போட்டுக் கொள்ளாமல் தன் பாட்டுக்கு யோகா, வாக்கிங், வேலை, சாப்பாடு, குடி என்று வாழ்கிறார் பழனி. அவர் வேலை பார்க்கும் அலுவலகத்தில் அவருக்கு உயர் அதிகாரியாக வந்து சேருகிறார் கேரளாவைச் சேர்ந்த ராதா. அவருக்கு 42 வயது. கல்யாணமாகி 20 வயதில் பெண் குழந்தை உள்ளது. ஆனால் கணவரை இழந்தவர்.

இவர்களுக்கு இடையே ஆரம்பத்தில் உருவாகும் நட்பு.. மெல்ல மெல்ல காதலாக மலர்கிறது. அந்தக் காதல் முதலில் ராதாவின் மனதில் முகிழ்க்கிறது.. தெப்பக் குளத்துக் கரையில் உட்கார்ந்து கொண்டு "எனக்கு சுகர் இருக்கு, 20 வயசுல பொண்ணு இருக்கு.. ஆனாலும் உங்க மேல காதல் வந்திருச்சு" என்று அவர் பழனியின் மனதில் காதல் கல்லை எறிகிறார்.. பழனிக்கு ஜெர்க் ஆகி ஓடிப் போகிறார்.. பிறகு நண்பர்களின் அறிவுறுத்தலுக்குப் பிறகு காதலை ஏற்கிறார். அதன் பிறகு ஏற்படும் கலாட்டாக்கள் வழக்கமானவைதான் என்றாலும் கூட செம ஜாலியாக இருக்கிறது பார்க்க.
ராதாவாக வரும் சோனியா கிரி அசத்தியுள்ளார். பழனிக்கு ஏத்த கேரக்டராக இந்த ஜோடிப் பொருத்தம் அமைகிறது.

இந்தக் காதலுக்கு மத்தியில் இடை இடையே, பட்டுச் சேலையில் செய்யப்பட்ட ஜரிகை வேலைப்பாடு போல ஜோசப் - பார்கவி காதல், தாடி சலீமா காதல், வேலு சுனிதாவின் பள்ளிப் பருவத்து காதல் என மூன்று காதல்களும் ஓடி விளையாடுகின்றன. கடைசியில்தான் யாரும் எதிர்பாராத டிவிஸ்ட்டை வைத்து பகபகவென எல்லோரையும் சிரிக்க வைத்து அசத்தியுள்ளார் இயக்குநர் ஜஸ்தி.
ஒரு சாதாரணக் கதையை எப்படி அழகியலோடு படைக்க முடியும் என்பதற்கு இந்தப் படம் ஒரு நல்ல உதாரணம்.
படத்தில் சிலரை குறிப்பிட்டுச் சொல்லலாம். சோனியா கிரி.. மலையாளத்து நடிகையான இவர் மிக மிக யதார்த்தமாக நடித்துள்ளார். சோனியா மலையாளத்தில் சில படங்களில் நடித்துள்ளார். இந்தக் கேரக்டரில் அவர் அப்படியே ராதாவாக மாறி அசத்தியிருக்கிறார். அப்படி ஒரு இயல்பான நடிப்பு.. அந்த சிரிப்பு அசத்துகிறது. இத்தனை வயதாகியும் தனக்குள் முளைத்த காதலை புறம் தள்ளாது அதை அழகாக பழனியிடம் இவர் சொல்லும் பாங்கு பியூட்டிபுல் என்று சொல்ல வைக்கிறது. தீபனுக்கும், இவருக்கும் ஜோடிப் பொருத்தம் அத்தனை அருமையாக அமைந்துள்ளது.

அதேபோல மும்தாஜ் சர்க்கார்.. இவர் மறைந்த மாஜிக் கலைஞர் பிசி சர்க்காரின் மகள். வங்கத்து நடிகையான இவர் கண்களாலேயே கலக்கியுள்ளார். அதை விட இவரது பாடி லாங்குவேஜ் அசத்துகிறது. நல்ல நடிகையான இவரை இந்த கேரக்டருக்கு சரியாக பயன்படுத்தியுள்ளனர். தாடி கேர்கடரில் வரும் வெற்றியின் நடிப்பும் பேச வைக்கிறது. பார்கவியாக வரும் ஆயிரா பாலக் நல்ல அழகு. திடீரென பார்த்தால் அனேகன் படத்தில் வரும் நாயகியை இவரது கேரக்டர் நினைவுபடுத்துகிறது.
தெலுங்கில் இப்போதெல்லாம் இதுபோன்ற சாதாரண கதையம்சம் உள்ள அழகியலோடு கூடிய படங்களை அங்குள்ள ரசிகர்கள் சிறப்பாக வரவேற்கிறார்கள். இது பாராட்டப்பட வேண்டிய அம்சமாகும். அதேபோல தமிழிலும் இதுபோன்ற படங்கள் அதிகரிப்பதையும் காண முடிகிறது. ரசிகர்களுக்கு இதுமாதிரி விருந்துகள்தான் அதிகம் தேவை.. திகட்டத் திகட்ட ரசித்து ருசித்து சாப்பிடக் கூடிய விருந்துகள் இவை.
லாக்டவுன் டென்ஷனில் இருக்கீங்களா.. பேசாமல் இது மாதிரி படங்களைத் தேடிப் பிடிச்சுப் பாருங்க.. வாழ்க்கையை ரசிக்க ஆரம்பிப்பீங்க.


Click it and Unblock the Notifications











