இந்தப் படம் ஸ்ரீகாந்த்துக்கு இன்னொரு பார்த்திபன் கனவு.. தினசரி சிந்தியா பிரத்யேக பேட்டி
சென்னை: தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க நடிகர்களில் ஒருவர் ஸ்ரீகாந்த். ஒரு காலத்தில் மிகவும் ஃபேமஸாக வலம் வந்துகொண்டிருந்த அவருக்கு திடீரென வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. அதனைத் தொடர்ந்து விஜய்யுடன் நண்பன் படத்தில் நடித்தார். அந்தப் படம் அவருக்கு மீண்டும் ஒரு வெளிச்சத்தை பெற்றுக்கொடுத்தது. இந்தச் சூழலில் தினசரி என்ற படத்தில் மீண்டும் ஹீரோவாக நடித்திருக்கிறார். படமானது விரைவில் ரிலீஸாகவிருக்கும் சூழலில் ஹீரோயின் சிந்தியா தமிழ் ஃபில்மிபீட்டுக்கு பிரத்யேக பேட்டி கொடுத்திருக்கிறார்.
ரோஜா கூட்டம் திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமானவர் ஸ்ரீகாந்த். இந்தப் படத்துக்கு முன்னதாகவே காதல் வைரஸ், 12 பி ஆகிய படங்களில் நடிக்க இவர்தான் முதலில் கமிட்டானார். ஆனால் சில காரணங்களால் அந்தப் படங்களில் வேறு ஹீரோக்கள் அறிமுகமானார்கள். இதன் காரணமாக அப்செட்டான ஸ்ரீகாந்த்துக்கு ரோஜா கூட்டத்தில் சசி வாய்ப்பு கொடுத்தார். அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. மேலும் அவரது திறமையும், அழகும் ரசிகர்களையும், திரைத்துறையினரையும் ஈர்த்தது.

பிஸி நடிகர்: ரோஜா கூட்டம் படத்தின் வெற்றிக்கு பிறகு அவர் பார்த்திபன் கனவு, போஸ், ஏப்ரல் மாதத்தில், மனசெல்லாம், ஜூட், வர்ணஜாலம், கிழக்கு கடற்கரை சாலை என பிஸியாக நடித்தார். இவற்றில் வெற்றியும், தோல்வியும் அவருக்கு கலந்தே கிடைத்தன. படத்துக்கு படம் இவர் தனது திறமையையும் வளர்த்துக்கொண்டு சென்றதால் கண்டிப்பாக பெரிய ஹீரோவாக தமிழில் வலம் வருவார் என்று பலரும் ஆரூடம் கூறினார்கள். ஆனால் என்ன நடந்ததோ தெரியவில்லை அவருக்கான வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன.
மனவியுடன் பிரச்னை: ஸ்ரீகாந்த்தின் ஃபார்ம் போனதற்கு அவருக்கும் அவரது மனைவிக்கும் நடந்த பிரச்னைதான் முக்கிய காரணம் என்று சொல்லப்பட்டது. அந்த சமயத்தில் அவர்களது பிரச்னை மிகப்பெரிய விஸ்வரூபம் எடுத்து தலைப்பு செய்தியானது எல்லாம் குறிப்பிடத்தக்கது. ஒருவழியாக அவர்களது பிரச்னை தீர்ந்து மீண்டும் ஒன்று சேர்ந்தார்கள். ஆனால் சினிமாவில் விட்ட இடத்தை ஸ்ரீகாந்த்தால் பிடிக்க முடியவில்லை. பிறகு விஜய்யுடன் நண்பன் படத்தில் நடித்தார். அந்தப் படத்துக்கு பிறகு சில படங்களில் ஹீரோவாகவும், கெஸ்ட் ரோலிலும் நடித்தார். ஆனால் பெரிதாக எந்த வெற்றியும் அவருக்கு கிடைக்கவில்லை.
தினசரி: இப்படிப்பட்ட சூழலில் தினசரி என்ற படத்தில் அவர் ஹீரோவாக நடித்திருக்கிறார். சேகர் இயக்கியிருக்கும் இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார். படத்திலிருந்து ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்ற பாடல் ஒன்று சமூக வலைதளங்களில் அதிகம் ஷேர் செய்யப்பட்டது. இந்தப் படத்தை சிந்தியா என்பவர் தயாரித்து அவரே ஹீரோயினாகவும் நடித்திருக்கிறார். முக்கியமாக சிந்தியாவை பலரும் உருவ கேலி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சிந்தியா பேட்டி: இந்நிலையில் தமிழ் ஃபில்மிபீட்டுக்கு பேட்டி அளித்த சிந்தியா, "தினசரி படத்துக்கு ஸ்ரீகாந்த்தை இயக்குநரோ, நானோ தேர்ந்தெடுக்கவில்லை. கதைதான் தேர்ந்தெடுத்தது. இரண்டு, மூன்று இயக்குநர்களிடம் கதைகள் கேட்டேன். அவற்றில் இந்தக் கதை எனக்கு பிடித்திருந்தது.இந்தக் கதைக்கு ஸ்ரீகாந்த்தான் செட் ஆவார் என்று தோன்றியது. இந்தப் படம் கண்டிப்பாக தனக்கு இன்னொரு பார்த்திபன் கனவு என்று அவரே சொல்லிவிட்டார். அந்த அளவுக்கு இந்தப் படமும் குடும்பத்தினரை கவரும் விதத்தில் அமையும்" என்றார்.


Click it and Unblock the Notifications











