ரொம்ப மிஸ் பண்றேன்.. மாரிமுத்துவின் மரணம் பேரதிர்ச்சி.. மாரிசெல்வராஜ் வேதனை!
சென்னை: மாரிமுத்து அண்ணனின் மரணம் மிகப்பெரிய பேரதிர்ச்சி என்று இயக்குநர் மாரிசெல்வராஜ் தனது வேதனையை வெளிப்படுத்தி உள்ளார்.
நடிகரும், இயக்குநருமான மாரிமுத்து மரணமடைந்த செய்திகேட்டு சின்னத்திரை, வெள்ளித்திரையை கடந்து ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மாரிமுத்து: கவிஞர் வைரமுத்துவிடம் உதவி இயக்குநராக திரை வாழ்க்கையை தொடங்கினார் மாரிமுத்து. பின்னர், மணிரத்தினம், வசந்த், சீமான், எஸ்.ஜே சூர்யா ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார். பின் கண்ணும் கண்ணும், புலிவால் ஆகிய படங்களை இயக்கி இயக்குநராக மாறி மாரிமுத்து இதுவரை 100க்கும் மேற்பட்ட படங்களில் வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார்.
எதிர்நீச்சல்: வெள்ளித்திரையில் தனது முத்திரையை பதித்த மாரிமுத்து, சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடரில், ஆதிகுணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஒட்டுமொத்த குடும்பத்தையும் தனது காட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்து மாரிமுத்து பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார்.
கதறும் நடிகர்கள்: இன்று காலை டப்பிங் பேசிக்கொண்டிருந்த மாரிமுத்துக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது. இதில் எதிர்நீச்சல் சீரியல் இயக்குநர் திருமுருகன், நடிகர் சென்ராயன், நடிகை கனிகா மற்றும் எதிர் நீச்சல் சீரியல் நடிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மாரிசெல்வராஜ் இரங்கல்: இந்நிலையில், இயக்குநர் மாரிசெல்வராஜ், மாரிமுத்துவின் மரணம் குறித்து இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், மாரிமுத்து அண்ணாவின் மறைவு பெரிய அதிர்ச்சியாக தான் இருக்கு. எல்லா யூடியூப் லிங்கும் அனுப்புவார். நானும் கருத்துகளை சொல்லுவேன், வயதில் சிறியவன் நீ சொல்வதை நான் ஏன் கேட்கனும் என நினைக்கமாட்டார்.
ரொம்ப மிஸ் பண்றேன்: இவரின் இழப்பு என் போன்ற இயக்குனர்களுக்கு ஓர் பேரிழப்பு தான், அவரும் ஒரு இயக்குனர் என்பதால் அவர்களின் வலியை உணர்ந்து என்ன வேண்டுமாணாலும் செய்வார். அவர் உருவாக்கிய ஒரு சத்தத்தை நான் ரொம்ப மிஸ் பண்ணுறேன். ஒரு ஃப்ரேமை முழுமை செய்வது அவருடைய சத்தம் தான் என வருத்தத்துடன் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











