சிவாஜி வீட்டு மருமகன் ஆகிறாரா ஆதிக் ரவிச்சந்திரன்?.. இது என்ன புது கதையா இருக்கு
சென்னை: Adhik Ravichandran (ஆதிக் ரவிச்சந்திரன்) இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் பிரபுவின் மகளை திருமணம் செய்துகொள்ளவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
ஜிவி பிரகாஷை வைத்து த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானார் ஆதிக் ரவிச்சந்திரன். அந்தப் படம் சுமாரான வரவேற்பை பெற்றது. அதனையடுத்து சிம்புவை வைத்து அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தை இயக்கினார். அந்தப் படம் பிரச்னைகளையும் சந்தித்து தோல்வியையும் சந்தித்தது. இதனால் ஆதிக் ரவிச்சந்திரன் விரைவிலேயே காலியாகிவிடுவார் என்று பலரும் ஆரூடம் கூறினர்.

நேர்கொண்ட பார்வை: அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்துக்கு பிறகு எந்த படமும் இயக்காமல் இருந்த ஆதிக் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்தார். ஹெச்.வினோத் இயக்கியிருந்த அந்தப் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்திருப்பார். இந்த சூழலில் அவர் விஷாலை வைத்து மார்க் ஆண்டனி படத்தை இயக்கினார்.
நல்ல ரெஸ்பான்ஸ்: ஆதிக் ரவிச்சந்திரன் இந்தப் படத்தின் மூலமும் தோல்வியையே கொடுப்பார் என்ற பேச்சுதான் எழுந்திருந்தது. ஆனால் அப்படி பேசியவர்களுக்கு தன்னுடைய மேக்கிங் மூலம் பதிலடி கொடுத்தார் ஆதிக். டைம் ட்ராவலை மையமாக வைத்து காமெடியுடன் திரைக்கதையை நகர்த்தி அட்டகாசம் செய்திருக்கிறார் படத்தில். அதனை பார்த்த ரசிகர்கள் படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனத்தையே கொடுத்தனர்.
செம வசூல்: விஷால் பல வருடங்களாக ஒரு ஹிட்டுக்கு ஏங்கிக்கொண்டிருந்த சூழலில் மார்க் ஆண்டனி படம் அந்த ஏக்கத்தை தீர்த்து வைத்திருக்கிறது. இதுவரை கிட்டத்தட்ட நூறு கோடி ரூபாயை அப்படம் வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் விஷால் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார். மேலும் இனி ஆதிக் ரவிச்சந்திரனும் பிஸியான இயக்குநராக வலம் வருவார் என்று கணிக்கப்படுகிறது.
திருமணம்?: இந்நிலையில் ஆதிக் ரவிச்சந்திரனின் திருமணம் குறித்த புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது அவர் நடிகர் பிரபுவின் மகளான ஐஸ்வர்யாவை காதலிப்பதாகவும் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ளப்போகிறார் என்றும் கூறப்படுகிறது. ஐஸ்வர்யா ஏற்கனவே குணால் என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஆனால் அவர்களுக்குள் மனஸ்தாபம் ஏற்பட்டு பிரிந்துவிட்டனர்.
அதனையடுத்து தனது தாய், தந்தையும் வசித்து வந்த ஐஸ்வர்யாவுக்கு ஆதிக் ரவிச்சந்திரனுடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அந்தப் பழக்கம் நாளடைவில் காதலாக மாறிவிட்டதாம். தனது காதலை பிரபுவிடம் சொல்ல அவரும் ஒத்துக்கொண்டாராம். இருவீட்டார் சம்மதத்துடன் டிசம்பர் 15ஆம் தேதி திருமணம் நடக்கவிருப்பதாகவும் பேச்சு எழுந்திருக்கிறது. இதற்கிடையே ஆதிக் அடுத்ததாக அஜித்தை வைத்து ஒரு படம் இயக்குவதாகவும் தகவல் ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











