Aishwarya rajini: திருக்கடையூரில் ஐஸ்வர்யா ரஜினி சாமி தரிசனம்.. வெற்றிக்காக பிரார்த்தனை?
சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளும் இயக்குநருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது லால் சலாம் படத்தை இயக்கி முடித்துள்ளார்.
ரஜினிகாந்த் இந்தப் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். விஷ்ணு விஷால் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தின் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர்.
ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் மும்பை, சென்னை, திருவண்ணாமலை ஆகிய பகுதிகளில் எடுத்து முடிக்கப்பட்டுள்ளன.

திருக்கடையூர் கோயிலில் ஐஸ்வர்யா ரஜினி சாமி தரினம்: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ளது ஜெயிலர். படம் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ள நிலையில், அதற்கான பிரமோஷன்களை படக்குழுவினர் தற்போது முடுக்கிவிட்டுள்ளனர். இதனிடையே, தன்னுடைய மூத்தமகள் ஐஸ்வர்யா ரஜினியின் இயக்கத்தில் லால் சலாம் படத்தில் நடித்து முடித்துள்ளார் ரஜினிகாந்த். படத்தில் மொய்தீன் பாய் என்ற முஸ்லிம் கேரக்டரில் அவர் நடித்துள்ளார்.
இதற்கான போஸ்டர்கள், சூட்டிங் ஸ்பாட் வீடியோக்கள் ஆகியவை தொடர்ந்து வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. ஜெயிலர் படத்தின் சூட்டிங்கை முடித்தவுடன், மும்பை, சென்னை, திருவண்ணாமலை ஆகிய பகுதிகளில் நடந்த லால் சலாம் படத்தின் சூட்டிங்கில் ரஜினிகாந்த் பங்கேற்றார். திருவண்ணாமலையில் ரஜினியை பார்ப்பதற்காக சூட்டிங் நடந்த பண்ணை வீட்டின் முன்பு ரசிகர்களை ஆர்வத்துடன் காத்திருந்ததையும் பார்க்க முடிந்தது. அவர்களுக்கு கையசைத்து ரஜினி உற்சாகப்படுத்தினார்.

இந்நிலையில் இந்தப் படத்தில் ரஜினியின் போர்ஷன்கள் நிறைவடைந்ததாகவும் சில பேட்ச் வொர்க்குகள் மட்டும் படத்தில் மீதமுள்ளதாகவும் சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி குழுவினருடன் ரஜினி, ஐஸ்வர்யா ரஜினி ஆகியோர் இணைந்து கொண்டாட்டத்திலும் ஈடுபட்டனர். தன்னுடைய அப்பா உண்மையான மேஜிக் என்று இந்த பதிவின் கேப்ஷனில் ஐஸ்வர்யா ரஜினி குறிப்பிட்டிருந்தார்.
படத்தில் விஷ்ணு விஷால், ஜீவிதா உள்ளிட்டவர்களும் முன்னணி கேரக்டர்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் படத்தின் சூட்டிங்கை ஏறக்குறைய முடித்துள்ள ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தற்போது திருக்கடையூரில் சாமி தரிசனம் செய்துள்ளார். கோயிலில் சென்று இறங்கியது முதல் கோயில் பிரகாரத்தை சுற்றி வருவது, கோயில் யானையிடம் ஆசிர்வாதம் வாங்குவது என அடுத்தடுத்த பதிவுகளை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

முன்னதாக 3 மற்றும் வை ராஜா வை போன்ற படங்களை இயக்கியுள்ளார் ஐஸ்வர்யா ரஜினி. இடையில் முஸாபிர் என்ற இசை ஆல்பத்தையும் ஐந்து மொழிகளில் உருவாக்கி வெளியிட்டிருந்தார். இந்நிலையில் தற்போது கிரிக்கெட்டை மையமாக கொண்ட லால் சலாம் படத்தை இயக்கி முடித்துள்ளார். நடிகர் தனுஷுடனான பிரிவிற்கு பிறகு, தன்னுடைய கேரியர், பிட்னஸ், ஆன்மீக பயணங்கள், குழந்தைகள் என்று தனது கவனத்தை திருப்பியுள்ளார் ஐஸ்வர்யா ரஜினி.


Click it and Unblock the Notifications











