ஐஸ்வர்யா ரஜினி வீட்டில் நடந்த கொள்ளை..50 சவரனை மறைக்க என்ன காரணம்.. கிளம்பிய புது சர்ச்சை?
சென்னை : ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் 60 சவரன் திருடு போனதாக புகார் அளித்த நிலையில், வேலைக்காரப் பெண் 110 சவரனை திருடியதாக கூறியதால் பரபரப்பு எழுந்துள்ளது.
ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டு லாக்கரில் வைத்திருந்த 60 சவரன் நகைகள் திருடுபோய் விட்டதாக தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வீட்டில் வேலை செய்த பணிப்பெண் மற்றும் அவரது கணவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
ஐஸ்வர்யா வீட்டு லாக்கரில் இருந்த, ஆரம், நெக்லஸ், கம்மல், வளையல், நவரத்தினம், வைரம் என 60 சவரன் மதிப்பு நகையை காணவில்லை. அந்த நகைகள் அனைத்தும் என் திருமணத்திற்காக வாங்கிய நகைகள் அவற்றை கடந்த 18 ஆண்டுகளாக பாதுகாத்து வைத்திருந்தார்.அந்த நகையை கடைசியாக தங்கை செளந்தர்யாவின் திருமணத்தில் அணிந்திருந்தேன் என கூறியிருந்தார்.

ஆடம்பர வாழ்க்கை
புகாரை அடுத்து வீட்டில் வேலை பார்த்த பணிப்பெண் ஈஸ்வரியின் வங்கி கணக்கை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், லட்சக்கணக்கில் பண பரிமாற்றம் நடந்துள்ளதை கண்டுபிடித்து அவரிடம் விசாரணை நடத்தினர். அதில் ஈஸ்வரி, ஐஸ்வர்யாவின் நகையை திருடி விற்று, அதில் சோழிங்கநல்லூரில் சொந்த வீடு, மகளுக்கு ஆடம்பர திருமணம், கணவருக்கு காய்கறி கடை என ஆடம்பரமாக வாழ்ந்துள்ளார்.

திருடுபோன நகை எவ்வளவு
இதையடுத்து, ஈஸ்வரியிடமிருந்து 100 சவரன் தங்க நகைகளும், 30 கிராம் வைர நகைகளும், 4 கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் வீட்டுப் பத்திரம் ஆகியவை மீட்கப்பட்டன. ஐஸ்வர்யா 60 சவரன் நகை திருடு போனதாக கூறப்பட்ட நிலையில் 110 சவரன் நகை திருடி உள்ளது தெரியவந்துள்ளதால், ஐஸ்வர்யாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

குறைத்து கூற காரணம் என்ன
ஆனால், ஐஸ்வர்யாவோ தொலைந்தது எத்தனை சவரன் என்று சரியாக தெரியவில்லை என்றும், எனது திருமணத்திற்கு வாங்கி நகையை தவிர, அன்பளிப்பாக வந்த நகைகளும் அதில் இருந்ததாக கூறியுள்ளார். வழக்கமாக நகை தொலைந்து போனால், கூடுதலாக தொலைந்து போனதாகத்தான் சொல்வார்கள். ஆனால், ஐஸ்வர்யா குறைத்து சொன்னது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கிளம்பிய புது சர்ச்சை
கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் ரஜினிகாந்த், எப்படி வருமான வரி செலுத்தி வருகிறார் என்பது தெரியவில்லை? ஏற்கனவே இந்த நகைகள் குறித்து வெளியான தகவலில் ஐஸ்வர்யாவுக்கு அவரின் தந்தை திருமணத்திற்கு போட்ட நகைகள் என கூறியுள்ளதால், இந்த நகைகள் யார் பணத்தில் வாங்கப்பட்டது என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் 50 சவரனை மறைத்து ரஜினியையும் இதில் சிக்க வைத்துள்ளார் ஐஸ்வர்யா.


Click it and Unblock the Notifications











