உணர்ச்சிவசப்படாமல் அனைவரும் அமைதி காக்க வேண்டும் - இயக்குநர் அமீர்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
விஸ்வரூபம் திரைப்படம் தொடர்பான பிரச்சனைகளுக்கு உயர் நீதிமன்றம் தலையிட்டு அத்திரைப்படத்தை வெளியிடலாம் என்று உத்தரவிட்டுள்ள நிலையில் இன்று சில ஊர்களில படம் திரையிடப்பட்டு பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், கோவையில் பழைய இரும்புக்கடை ஒன்றில் பெட்ரோல் குண்டுகள் கண்டெடுக்கப்பட்டதாகவும் ஊடகங்களில் வரும் செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன்.
இந்திய நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் நீதிமன்றத்திற்கு கட்டுப்பட வேண்டியது அவசியமான ஒன்றாகும். எனவே கண்ணியத்திற்குரிய இந்துக்களும், இஸ்லாமியர்களும் இந்த விஷயத்தில் பொறுகை காக்க வேண்டும். நீங்கள் உணர்ச்சிவசப்படுவீர்களேயானால் அது சமூக விரோதிகளுக்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்திவிடும்.
தமிழகத்தில் நாம் அனைவரும் சகோதர உணர்வுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் விரும்பத்தகாத நிகழ்வுகள் ஏதேனும் நடந்துவிட்டால் அது காலத்தால் மறைக்க முடியாத கரும்புள்ளியாகிவிடும். இந்த சூழ்நிலையில் மதிப்பிற்குரிய கமலஹாசன் அவர்கள் வருத்தத்துடன் பேட்டியளித்திருப்பது எனக்கு மிகுந்த வேதனையளிக்கிறது.
கமல் போன்ற நிதானமான கலைஞன் தமிழகத்தை மதசார்புள்ள மாநிலமாக கருதக்கூடாது. நான் உள்பட தமிழகத்தின் கோடிக்கணக்கான மக்கள் அனைவரும் தமிழகத்தை மதசார்பற்ற மாநிலமாகவும், இந்தியாவை மதசார்பற்ற நாடாகவும் தான் பார்த்துக்கொண்டிருக்கிறோம். எனவே தாங்கள் அவசரப்பட்டு எந்த விதமான முடிவும் எடுக்க வேண்டாம் என்றும், ஒரு படைப்பாளியாக சக மனிதனாக தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர் உடனே தலையிட்டு எந்த ஒரு சிறு அசம்பாவிதமும் ஏற்பட்டுவிடாமல் காப்பதுடன் இந்த பிரச்சனை மேலும் உயர் பெறாமல் தடுக்க வேண்டியது தமிழக அரசின் தலையாய கடமையாகும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











