Ameer - ஞானவேலுவால் நிராயுதபாணியாய் நின்றேன் எவ்வளவு துரோகம்.. என் குடும்பத்துக்கே தெரியாது.. அமீர் எமோஷனல்
சென்னை: Ameer on Gnanavel Raja (ஞானவேல் ராஜா பற்றி அமீர்) தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவால் நிராயுதபாணியாய் நின்றேன் என இயக்குநர் அமீர் எமோஷனலாக பேசியிருக்கிறார்.
ஞானவேல் ராஜா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், பருத்திவீரனில் அமீர் பொய் கணக்கு காண்பித்துவிட்டார். அவர் ஒரு திருடன். தோற்றுபோன குதிரை என ஏகத்துக்கும் மட்டமாக பேசினார். அவரது இந்தப் பேச்சுக்கு அமீரும் தக்க பதிலடி கொடுத்தார். அமீர் தனது அறிக்கையில், "பருத்திவீரனில் என்ன நடந்தது என்பது குறித்து தெரிந்தவர்கள் எல்லாம் அமைதியாக இருக்கிறார்கள்" என வேதனையோடு குறிப்பிட்டிருந்தார்.

பெருகிய ஆதரவு: அமீரின் அந்த அறிக்கைக்கு அடுத்து சசிகுமார், சமுத்திரகனியும் பருத்திவீரன் படம் எப்படி உருவானது. அதில் யார் பணம் இருக்கிறது என்பது தொடர்பாக புட்டு புட்டு வைத்தனர். இதனால் ஞானவேல் ராஜா செய்வதறியாது திகைக்க ஆரம்பித்தார். அவர்களைத் தொடர்ந்து கரு.பழனியப்பன், பாரதிராஜா, பொன்வண்ணன் உள்ளிட்டோரும் அமீருக்கு ஆதரவாக இறங்கினர்.
கரு.பழனியப்பனின் ட்விஸ்ட்: இப்படி படைப்பாளிகள் மட்டுமின்றி ரசிகர்களும் அமீருக்கே ஆதரவு தெரிவித்தனர். குறிப்பாக பராசக்தியில் சிவாஜிக்கு பிறகு ஒரு அறிமுக ஹீரோவுக்கு முதல் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டது என்றால் அது கார்த்திக்கு பருத்திவீரனில்தான் நடந்தது. அப்படிப்பட்ட படம் ஒரு கொடுத்த இயக்குநரை இப்படி அசிங்கப்படுத்தக்கூடாது. இதற்கு சிவக்குமார் குடும்பமும் அமைதியாக இருக்கக்கூடாது எனவும் ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்ய ஆரம்பித்தனர்.
போலி வருத்தம்: மேலும் கரு.பழனியப்பன் தனது அறிக்கையில், 'ஞானவேல் ராஜாவை மன்னிப்பு கேட்க சிவக்குமார் சொல்ல வேண்டும்' என குறிப்பிட்டார். அவர் அறிக்கை வெளியிட்டு 18 மணி நேரத்துக்குள் ஞானவேல் ராஜா வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். இருந்தாலும் அந்த வருத்தமும் போலி வருத்தம்தான் என்ற கண்டங்களும் எழுந்திருக்கின்றன.
அமீர் பேட்டி: இந்நிலையில் பத்திரிகையாளர் சித்ரா லட்சுமணனுக்கு அமீர் அளித்த ஒரு பேட்டியில் ரொம்பவே எமோஷனலாக பேசியிருக்கிறார். அந்தப் பேட்டியில் பேசிய அவர், "நான் தயாரித்த ராம் படத்தை விநியோகம் செய்ய முடியாமல் எப்படி திணறிக்கொண்டிருந்தேனோ அதேபோல்தான் நான் தயாரித்த யோகி படத்துக்கும் திணறினேன்.
அதற்கு காரணம் யோகி படத்தை திரையிடக்கூடாது என்று ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அவர் வேறு யாருமல்ல ஞானவேல் ராஜாதான். அது யாருக்குமே தெரியாது. விநியோகஸ்தர்களிடம் நான் பட பெட்டியை எடுத்துக்கொடுக்க வேண்டும். ஆனால் எனக்கோ பயம். ஒருவேளை படத்துக்கு நீதிமன்றம் தடை விதித்தால் என்ன செய்வது என்று யோசித்து நிராயுதபாணியாய் நின்றுகொண்டிருந்தேன்.
ஏதோ இறைவன் புண்ணியத்தில் அந்த வழக்கை மூன்று நாட்கள் கழித்து விசாரித்துக்கொள்ளலாம் என்று நீதிபதி சொல்லிவிட்டார். எனவே பட பெட்டியை கொடுத்துவிட்டேன். அதேபோல் ஆர்யாவை வைத்து நான் ஆரம்பித்த சந்தனத்தேவன் படத்தின் பைனான்சியரிடம் சென்று அமீருக்கு பணம் கொடுக்காதீர்கள் என ஞானவேல் ராஜா சொன்னார். இதெல்லாம் ஏன் அவர் செய்ய வேண்டும். என்ன அவசியம் வந்தது. அவர் இவ்வளவு செய்திருக்கிறார் என்று எனது குடும்பத்துக்குக்கூட தெரியாது" என்றார்.


Click it and Unblock the Notifications











