ஜெ.அன்பழகன் பற்றி பேசும்போது.. பிரபாகரன் குறித்து நான் சொன்னதை சர்ச்சையாக்குவதா? அமீர் வருத்தம்!
சென்னை: விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் குறித்து நான் தெரிவித்த கருத்துக்கள்,
அரசியல் விவாதங்களாக மாறி சர்ச்சையாக தொடர்வது வருத்தமாக இருக்கிறது என்று இயக்குனர் அமீர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நம்மோடு வாழ்ந்து கொண்டிருந்த மனிதர் ஒருவர் மறைந்து விட்டால் அவரைப் பற்றிய நினைவலைகளை பகிர்ந்து கொள்வது மனித மாண்பு.
அதுவே இன்று வரை நம் எல்லோராலும் கடைப்பிடிக்கப்பட்டு வந்திருக்கிறது. அந்த வகையில்
மறைந்த எம்எல்ஏ ஜெ. அன்பழகனை நினைவு கூறும் விதமாக பல்வேறு நிகழ்வுகளை சொல்லிக்கொண்டிருக்கும் போது மேலதிகமாக சில தகவல்களை சொன்னேன்.

சொன்ன தகவல்கள்
மறைந்த எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் சென்னையில் ஒரு துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஈடுபட்டு பாண்டிபஜார் காவல் நிலையத்திலிருந்த தேசியத் தலைவர் பிரபாகரன், பிணையில் வெளியே வந்த போது தங்களது கட்சி அலுவலகத்தில் இருந்ததாகவும் அப்போதே அவரை, தான் பார்த்ததாகவும் அவரிடம் பேசியதாகவும் அவரைப் பற்றி பெருமையாக ஜெ.அன்பழகன் என்னிடம் சொன்ன தகவல்களை நான் பகிர்ந்திருந்தேன்.

உண்மை இல்லை
ஆனால் அப்படி ஒரு சம்பவம் நடந்திருக்க வாய்ப்பில்லை என்றும் நான் சொன்ன தகவலில் உண்மை இல்லை என்றும் அந்த வழக்கில் பிரபாகரனை ஜாமீனில் எடுத்தது கே.எஸ். ராதாகிருஷ்ணனும் ( திமுக செய்தி தொடர்பாளர் ) அதன் பின்னர் அவரோடு தொடர்பில் இருந்தது ஐயா பழநெடுமாறன் மற்றும் இன்னபிற சிலர் தான் என்கிற தகவல்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் வந்து கொண்டிருக்கிறது.

இன்னொரு புறம்
அதே நேரத்தில் அந்த சம்பவத்தில் கே.எஸ். ராதாகிருஷ்ணன், ஜெ. அன்பழகன் போன்றோர் உடன் இருந்ததாகவும் அன்றைய 116வட்ட பகுதி செயலாளராக இருந்த து.ச. இளமாறன் மற்றும் அவரது சகோதரர் சந்திரன் இருவரும் ஜாமீன் கையெழுத்திட்டதாகவும் திமுகவின் கோ.அய்யாவு போன்றோரும் உடன் இருந்தனர் என்கிற தகவலும் இன்னொரு புறம் வந்துகொண்டிருக்கிறது.

உண்மைத் தகவல்கள்
மேலும் அந்த வழக்கின் பிண்ணனியில் அதிமுகவைச் சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவரும் செயல்பட்டிருக்கிறார் என்கிற தகவல்களும் எனக்கு அலைபேசியின் வழியே வந்து சேர்ந்திருக்கிறது. எதுவாயினும் தேசிய தலைவர் பிரபாகரன் கைது செய்யப்பட்டது குறித்தும் அவர் பிணையில் எடுக்கப்பட்டது குறித்தும் பல்வேறு உண்மைத் தகவல்கள் ஆதாரங்களுடன் வெளிவந்திருக்கிறது என்பதே மறுக்க முடியாத உண்மை.

வருத்தமாக இருக்கிறது
ஆனால் அதே நேரத்தில் இணைய தள ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் இந்த நிகழ்வு குறித்த விவாதங்கள், அரசியல் விவாதங்களாக மாறி மாபெரும் சர்ச்சையாக தொடர்ந்து கொண்டிருப்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது. தேசிய தலைவர் பிரபாகரன் குறித்து ஜெ. அன்பழகன் என்னிடம் பேசியது உண்மை. நான் கேட்டதும் உண்மை.

அரசியல் கிடையாது
அதற்கு மறைந்த ஜெ.அன்பழகனும் இறைவனுமே சாட்சி. அந்த செய்தியை நான் பகிர்ந்ததில் சிறு தவறு நிகழ்ந்திருக்கலாமே தவிர இதில் வேறு எந்த உள்நோக்கமும் அரசியலும் கிடையாது. வரலாற்றைத் திரித்துச் சொல்ல வேண்டிய அவசியமும் எனக்கு ஏற்படவில்லை அது போன்ற செயல்களில் ஒரு போதும் நான் ஈடுபடுவதில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு இயக்குனர் அமீர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











