கன்னட மொழி பிரச்னை.. இதெல்லாம் தேவையில்லாத அரசியல்.. இயக்குநர் அமீர் விளாசல்
சென்னை: கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் திரைப்படம் இன்று வெளியானது. மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான அந்தப் படத்துக்கு ரசிகர்கள் தங்களது மோசமான விமர்சனத்தையே கொடுத்துவருகிறார்கள். படத்தின் மேக்கிங், திரைக்கதை என எதிலுமே முழு திருப்தியில்லை என்று ஓபனாகவே பேச ஆரம்பித்திருக்கிறார்கள். இதற்கிடையே படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் பேசி சர்ச்சையான விஷயம் குறித்து அமீர் தனது கருத்தை தெரிவித்திருக்கிறார்.
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்திருக்கும் படம் தக் லைஃப். அவருடன் சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், நாசர், அபிராமி, அசோக் செல்வன் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். பல வருடங்கள் கழித்து கமலும், மணிரத்னமும் இணைந்து ஒரு படத்தை கொடுத்திருப்பதன் காரணமாக; கண்டிப்பாக நாயகன் ரேஞ்சுக்கு இருக்கும் என்ற மிகுந்த நம்பிக்கையுடன் ரசிகர்கள் எதிர்பார்ப்பை வைத்திருந்தார்கள்.
ஏமாற்றமே மிச்சம்: படமானது இன்று திரையரங்குகளில் வெளியானது. நாயகன் கூட்டணியை மீண்டும் ஒருமுறை பார்ப்பதற்காக அதீத ஆவலோடு ரசிகர்கள் சென்றார்கள். படத்தின் ஆரம்பத்தில் முதல் 8 முதல் பத்து நிமிட காட்சிகளை ரசிகர்கள் ரசிக்கவே செய்தார்கள். ஆனால் போகப்போக படம் படுத்தேவிட்டது ஐயா என்ற மோடுக்கு சென்றுவிட்டது. முழுக்க முழுக்க எதிர்பார்ப்புடன் இருந்த ரசிகர்களுக்கு பெரிய அளவில் ஏமாற்றமே மிச்சமானது.
இதுவும் இந்தியன் 2தானா?: கமல் தனது இரண்டாவது இன்னிங்ஸை விக்ரம் என்ற மெகா ஹிட் படத்தின் மூலம் ஆரம்பித்தார். அடுத்ததாக ஷங்கர் இயக்கிய இந்தியன் 2வில் நடித்து கையில் சூடுபோட்டுக்கொண்டார். இதன் காரணமாக மணிரத்னத்துடன் அவர் இணைந்திருக்கும் இப்படம் கண்டிப்பாக அவருக்கு பெரிய வெற்றியை பெற்று தருமென்றுதான் கருதப்பட்டது. ஆனால் இந்தப் படம் இன்னொரு இந்தியன் 2 என்ற நிலையிலேயே முடித்துக்கொண்டது வருந்தக்கூடிய விஷயம்தான்.

கன்னட மொழி பிரச்னை: இதற்கிடையே உலகம் முழுவதும் இன்று படம் வெளியானாலும் கர்நாடக மாநிலத்தில் மட்டும் வெளியாகவில்லை. ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல், 'தமிழிலிருந்து கன்னடம் பிறந்தது' என சொன்னது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கர்நாடகாவிலிருந்து குரல்கள் வந்துகொண்டே இருந்தன. ஆனால் அவர் அதற்கு மறுத்துவிட்டார். ஒருகட்டத்தில் நீதிமன்றமே கமல் மன்னிப்பு கேட்டால் என்ன தவறு என்று சொன்னது.
நஷ்டம்தான்: ஆனால் கமல்ஹாசனோ திட்டவட்டமாக மறுத்துவிட்டார். சூழல் இப்படி இருக்க படம் மற்ற மாநிலங்களில் வெளியானாலும் விமர்சன ரீதியாக அடியை வாங்கியிருக்கிறது. கண்டிப்பாக வசூல் ரீதியாக இப்படம் வெளியான அனைத்து மாநிலங்களிலும் சறுக்கலைத்தான் சந்திக்கும் என்று பாக்ஸ் ஆஃபிஸ் வட்டாரங்கள் கணிக்க ஆரம்பித்திருக்கின்றன. இது ஒருபக்கம் இருக்க மறுபக்கம் கர்நாடகாவில் வெளியாகததால் ராஜ்கமல் நிறுவனத்துக்கு சில கோடிகள் ஏற்கனவே நஷ்டம்தான். ஆகமொத்தம் இந்தப் படம் கமலுக்கு ஒரு பேரிடியை கொடுத்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.
அமீர் கருத்து: இந்நிலையில் கமல் கன்னட மொழி குறித்து பேசியது பற்றி அமீர் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், "கமல்ஹாசன் கன்னட மொழி குறித்து பேசியதற்கு எழுந்த பிரச்னையெல்லாம் தேவையில்லாத ஒரு அரசியல். அவர் எந்த மொழியையும் தவறாக பேசவில்லையே. குறைத்தும் மதிப்பிடவில்லை. மறுபக்கம் கர்நாடகத்தில் 7 பேர் இறந்து போயிருக்கிறார்கள். இப்படிப்பட்ட சமயத்தில் கன்னட மொழி குறித்த விஷயம் தேவையில்லாத ஒன்று" என்றார்.


Click it and Unblock the Notifications











