பருத்திவீரன்.. அவ்ளோ அசிங்கப்படுத்தினாங்க.. சூர்யா ஃபேமிலி ஏன் என்றுகூட கேட்கவில்லை.. அமீர் உருக்கம்
சென்னை: தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் அமீர். அவர் இயக்கிய பருத்திவீரன் படத்தின் மூலம்தான் கார்த்தி ஹீரோவாக அறிமுகமானார். மிகப்பெரிய ஹிட்டான அந்தப் படம் அமீருக்கு விரும்பத்தகாத நிகழ்வுகளையும், நினைவுகளையும் மட்டுமே கொடுத்திருக்கிறது. கடந்த வருடம்கூட பருத்திவீரன் பஞ்சாயத்து பெரிய அளவில் தலைதூக்கியது. இந்தச் சூழலில் பருத்திவீரன் படம் பற்றி அமீர் சமீபத்திய பேட்டியில் உருக்கமாக பேசியிருக்கிறார்.
மௌனம் பேசியதே படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அமீர் தனது மூன்றாவது படமாக பருத்திவீரனை உருவாக்கினார். அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. கார்த்தியும் அப்படத்தின் மூலம்தான் ஹீரோவாக அறிமுகமானார். பருத்திவீரன் தமிழ் சினிமாவில் ஏற்படுத்திய தாக்கம் பெரிது. அந்தப் படத்துக்கு பிறகுதான் தமிழ் சினிமாவின் போக்கும் கொஞ்சம் மாறியது என்றே சொல்லலாம். ஆனால் அப்படம் அமீருக்கு நல்ல அனுபவங்களை கொடுக்கவில்லை. பணம் தொடர்பான பிரச்னையில் அமீர் ரொம்பவே அவமானப்படுத்தப்பட்டார்.

ஞானவேல் பேட்டி: அதுதொடர்பான பஞ்சாயத்து கடந்த வருடம் ஞானவேலுவால் மீண்டும் தலைதூக்கியது. ஆனால் அமீருக்கு ஆதரவாக ஒட்டுமொத்த படைப்பாளிகளும் நின்றனர். அதனை எதிர்பார்க்காத ஞானவேல் வருத்தமும் தெரிவித்தார். இந்தச் சூழலில் அமீர் நடிப்பில் உருவாகியிருக்கும் உயிர் தமிழுக்கு படம் இன்று ரிலீஸாகியிருக்கிறது. இந்த நிலைமையில் படத்தின் ப்ரோமோஷனுக்கு அமீர் கொடுத்த ஒரு பேட்டியில் பருத்திவீரன் குறித்து பேசியிருக்கிறார்.
அமீர் பேட்டி: அந்தப் பேட்டியில் பேசிய அவர், "பருத்திவீரன் படம் எடுத்தபோதே நான் தோற்றுவிட்டேன். ஒரு புதுமுக நடிகரை உருவாக்கி கொண்டு வந்து, படத்தை எடுத்து, நானே அதற்கு சொந்தமாக முதலீடு செய்து படத்தை உருவாக்கினால் ரிலீஸ் சமயத்தில் தயாரிப்பாளர் சங்கத்தில் என்னை ஒரு குற்றவாளிப்போல் நிற்க வைத்தார்கள். இப்போது ஜாபர் சாதிக் வழக்கில் 70 நாட்கள் குற்றவாளி போல் நிற்கிறேன் அல்லவா அதுபோல் அப்போது 60 நாட்கள் நின்றேன்.
ஆதரவு யாரும் இல்லை: அன்றும் சரி இன்றும் சரி எனக்கு ஆதரவாக யாருமே நிற்கவில்லை. தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்த ஒருவர்கூட எனக்கு சப்போர்ட் இல்லை. யாருமே உண்மை பேசவில்லை. 60 நாட்கள் சங்கத்துக்கு சென்று கைக்கட்டி நின்றேன். இப்படிப்பட்ட ஒரு படத்தை நாம் எடுத்திருக்கவேக்கூடாது என்று அப்போது எனது மனதில் பட்டது. இந்த சமூகம் எவ்வளவும் கேவலமானது என்பதை நான் உணர்ந்த நேரம்தான் அது.
அசிங்கப்படுத்தினார்கள்: அந்த விசாரணை நடந்துகொண்டிருந்தபோது அவரது வீட்டில் மேனேஜராக இருந்தவர், காய்கறி விற்றவர் எல்லாம் என்னை கேள்வி கேட்டுக்கொண்டிருந்தார்கள். அதை அவர்களும் பார்த்துக்கொண்டுதான் இருந்தார்கள். பருத்திவீரனை உருவாக்குவதற்கு எந்தவித தொடர்பும் இல்லாதவர்கள் எல்லாம் என்னை பார்த்து கேள்வி கேட்டார்கள். நான் அமைதியாக நின்று கொண்டிருந்தேன்.
யாரும் வந்து கேட்கவில்லை: தயாரிப்பாளர் சங்கத்தில் வைத்து என்னை அவமானப்படுத்தினார்கள். அய்யய்யோ படத்தை உருவாக்கிய அவருக்கு அப்படிப்பட்ட ஒரு அவமானத்தை கொடுத்துவிடக்கூடாது என்று சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் யாரும் வந்து கேட்கவில்லை. அந்தப் படத்தை ஆரம்பிக்கும்போது நாம்தானே அவரிடம் சென்று கேட்டோம் என்றெல்லாம் அவர்கள் யோசிக்கவே இல்லை. அப்போதும் நான் தனிதான்; இப்போதும் நான் தனிதான்" என்றார் உருக்கமாக.


Click it and Unblock the Notifications











