Ameer - பருத்திவீரன் வழக்கு.. நீதிமன்றம் சென்றதும் சூர்யா பெயரை சேர்த்ததும் இதனால்தான்.. மௌனம் கலைத்த அமீர்
சென்னை: Ameer (அமீர்) பருத்திவீரன் பட விவகாரத்தில் நீதிமன்றத்துக்கு சென்றதற்கான காரணத்தை இயக்குநர் அமீர் சொல்லியிருக்கிறார்.
அமீர் இயக்கத்தில் கடந்த 2007ஆம் ஆண்டு வெளியான படம் பருத்திவீரன். கார்த்தியின் முதல் படமான அந்தப் படம்தான் இன்றுவரை அவரது அடையாளமாகவே இருக்கிறது. ஆனால் அந்தப் படத்திலிருந்து அமீருக்கும், ஞானவேல் ராஜாவுக்கு முட்டிக்கொண்டது. அமீர் பொய் கணக்கு காண்பித்தார் என ஞானவேல் ராஜா சொல்ல; ஞானவேல் படத்தின் ஷூட்டிங் பாதியிலேயே காணாமல் போய்விட்டார். மீதி பணத்தை நானே தயார் செய்து படத்தை உருவாக்கினேன் என அமீர் கூறுகிறார்.

நீதிமன்றத்தில்: இந்த விவகாரம் 17 வருடங்களாக நடந்துகொண்டிருக்கிறது. குறிப்பாக தன்னை மிரட்டி பருத்திவீரன் படத்தை எழுதி வாங்கிவிட்டார்கள் என்பதும் அமீரின் வாதமாக இருக்கிறது. தனக்கு சேர வேண்டிய பணத்தை பெற்றுத்தரும்படி அமீர் நீதிமன்றத்துக்கும் சென்றுவிட்டார். அந்த வழக்கு தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.
ஞானவேல் ராஜா பேட்டி: இப்படிப்பட்ட நிலைமையில்தான் கார்த்தி 25 விழாவை மையமாக வைத்து மீண்டும் பருத்திவீரன் பஞ்சாயத்து தலை தூக்கியிருக்கிறது. அதற்கு காரணம் ஞானவேல் ராஜாவின் பேட்டி. அந்தப் பேட்டியில் அமீரை சகட்டுமேனிக்கு மட்டம் தட்டி பேசினார். இது படைப்பாளிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

ஆதரவு: இதனையடுத்து சசிகுமார், சமுத்திரகனி, கரு.பழனியப்பன், பொன்வண்ணன், பாரதிராஜா என பலரும் அமீருக்கு பக்கபலமாக நின்றார்கள். நிலைமை கைமீறி போவதை உணர்ந்த ஞானவேல் ராஜா வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். ஆனால் அந்த வருத்தமும் போலியான வருத்தம் என சசிகுமார் தரமான பதிலடியை கொடுத்தார். இதற்கிடையே அமீர் பருத்திவீரன் வழக்கில் எதற்காக சூர்யா, சிவக்குமார் பெயரையும் சேர்த்தார் என்ற கேள்வியும் பெரும்பாலானோரிடத்தில் உருவாகியிருந்தது.
அமீர் பேட்டி: இந்நிலையில் அதுகுறித்து ஒரு பேட்டியில் மனம் திறந்து பேசியிருக்கிறார் அமீர். சித்ரா லட்சுமணனுக்கு அளித்த பேட்டியில், "தயாரிப்பாளர் சங்கத்தில் என்னிடமிருந்து படத்தை எழுதி வாங்கி அவர்களிடம் கொடுப்பதிலேயே குறியாக இருந்தார்கள். நான் நீதிமன்றம் செல்கிறேன் என்றேன். அதற்கு, சங்கத்தை மீறி நீதிமன்றம் போவியா என கேட்டார்கள்.

சங்கம் நேர்மையாக இருந்தால் நான் ஏன் நீதிமன்றம் போகப்போறேன் என்று சொல்லிவிட்டு வழக்கு தொடுத்தேன். அந்த வழக்கில் சூர்யா, சிவக்குமார் ஆகியோர்களின் பெயர்களை சேர்க்க வேண்டாம் என நான் எனது வழக்கறிஞரிடம் சொன்னேன். ஆனால் அவர்தான் என்னுடைய விருப்பம் இல்லாமலேயே அவர்களது பெயர்களை சேர்த்துவிட்டார்" என்றார்.


Click it and Unblock the Notifications











