ஜல்லிக்கட்டுக்கு பெருமை சேர்க்க வேண்டும்.. இயக்குநர் அமீர் வைத்த கோரிக்கை!
சென்னை: ஜல்லிக்கட்டு போட்டிக்கு மேலும், பெருமை சேர்க்கும் வகையில், போட்டியில் வென்றவர்களுக்கு அரசு பணி வழங்க வேண்டும் என்று இயக்குநர் அமீர் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். தமிழர் வீரம் வீணாகாது, தமிழ்க்கூட்டம் கூடிக்கலையும் கூட்டமல்ல, என்பதை உலகிற்கு சொல்லும் செய்தியாக இது அமையவேண்டும் என அமீர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
தை திருநாள் என்றாலே பொங்கலுக்கு அடுத்தப்படியாக ச சட்டென்று நம் நினைவுக்கு வருவது ஜல்லிக்கட்டு போட்டிகள். காளைகளின் திமிலை திமிராக அடக்கும் காளையர்களின் வீரத்தைப் பறைசாற்றும் வீர விளையாட்டு தான் ஜல்லிக்கட்டு. சில நூற்றாண்டுகள் இல்லை, பல்லாயிரம் நூற்றாண்டிற்கு முன்பு இருந்தே தமிழர்களின் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் உலகம் அறிய செய்த வீர விளையாட்டுத்தான் ஜல்லிக்கட்டு. ஏறுதழுவுதல்,ஜல்லிக்கட்டு,மஞ்சுவிரட்டு,கொல்லக்கோறி தழுவுதல் இந்த விளையாட்டுக்கு பல பெயர் உண்டு.

இப்படி தமிழரின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு உலக அளவில் புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு, பாலமேடு, அவனியாபுரம் ஆகிய இடங்களில் கோலாகலமாக நடைபெற்றுவருகிறது.இதில் வெற்றிப்பெறும் வீரர்களுக்கு, அண்டா,சைக்கிள், கார் என பல விதமான பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இயக்குநர் அமீர் அறிக்கை: இந்நிலையில், இயக்குநரும் நடிகருமான அமீர், முதல்வர் ஸ்டாலினுக்கும், அமைச்சர் உதயநிதிக்கும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், திக்கெட்டும் திகழ் ஒளி வீசி தமிழகத்தின் பெருமையை உலகறியச் செய்து வரும் தாங்கள், தமிழின் தலைநகராம் மதுரையில் ஜல்லிக்கட்டுக்கென சிறப்பாக, கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் என்ற மைதானம் ஒன்றை தங்கள் திருக்கரங்களில் திறக்கவிருக்கும் இவ்வேளையில், தொழுவினுள் புரிபு புரிபு புக்க பொதுவரைத் தெரிபு தெரிபு குத்தின ஏறு.. கொல்லேற்றுக் கோடஞ்சு வானை, மறுமையும் புல்லாளே ஆய மகள்..'என்று கலித்தொகை பறைசாற்றும் பாரம்பரியமும், வீரமும் ஒருங்கே அமையப் பெற்று, ஒன்றிய அரசிடமும், உச்சநீதிமன்றத்திடமும் போராடிப் பெற்ற நமது கலாச்சார வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை, தமிழக அரசின் அரசுப்பணி இடஒதுக்கீட்டில் விளையாட்டு உட்பிரிவில் சேர்த்து மேலும் பெருமை சேர்க்க கோருகிறேன்.

ஜல்லிக்கட்டுக்கு மேலும் பெருமை: மேலும், மதுரை அலங்காநல்லூரிலும், அவனியாபுரம் மற்றும் பாலமேடு ஆகிய இடங்களில் நடந்த நிகழ்வுகளிலும் வெற்றி பெற்ற வீரர்கள் அரசுப்பணி கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர். இந்த இனிய தருணத்தில் அவர்களது கோரிக்கையை தாங்கள் கனிவோடு கவனித்து ஆவண செய்யக் கேட்டுக் கொள்கிறேன். தமிழர் வீரம் வீணாகாது - தமிழ்க்கூட்டம் கூடிக்கலையும் கூட்டமல்ல, என்பதை உலகிற்கு சொல்லும் செய்தியாக இது அமைவதோடு, தமிழர் தம் நெடிய வரலாற்றில் தங்களது இச்செயல் பொன்னெழுத்தில் பொறிக்கப்பட்டு வரலாற்றில் வைக்கப்படும் என்ற நம்பிக்கையோடு இக்கோரிக்கையை முன்வைக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











