16 Years of Paruthiveeran.. பருத்திவீரனை பார்த்து அமீரிடம் கோபப்பட்ட கலைஞர் கருணாநிதி
சென்னை: கார்த்தி நடிப்பில் பருத்திவீரன் படம் வெளியாகி இன்றுடன் 16 வருடங்கள் நிறைவடைகின்றன. அந்தப் படம் குறித்த ஒரு சுவாரஸ்ய தகவல்
இயக்குநர் பாலாவிடம் உதவி இயக்குநராக இருந்தவர் அமீர். பாலாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வெளியே வந்த அமீர் மௌனம் பேசியதே படத்தை இயக்கினார். அதன் பிறகு தானே தயாரித்து ஜீவா நடிப்பில் ராம் படத்தை உருவாக்கினார். முதல் இரண்டு படங்களும் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றாலும் வசூல் ரீதியாக போதுமான வரவேற்பைப் பெறவில்லை.

பருத்திவீரனை களமிறக்கிய அமீர்
இப்படிப்பட்ட சூழலில் அமீர் தனது மூன்றாவது படமாக பருத்திவீரன் படத்தை இயக்கினார். தற்போது நடிப்பில் கலக்கிவரும் நடிகர் கார்த்தியின் முதல் படம் பருத்திவீரன். இதில் கார்த்தியுடன் ப்ரியாமணி, சம்பத், பொன்வண்ணன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். முழுக்க முழுக்க கிராமத்து காதல் படமாக பருத்திவீரன் உருவாகியிருந்தது.

தமிழ் திரையுலகை புரட்டிப்போட்ட பருத்திவீரன்
சூர்யாவின் தம்பி அறிமுகமாகிறார் என்ற ஒற்றை எதிர்பார்ப்போடு படம் வெளியானது. சராசரி கிராமத்து படமாகத்தான் இருக்கும் என்று நினைத்தபடி ரசிகர்கள் திரையரங்குகளுக்கு படம் பார்க்க சென்றனர். ஆனால் அங்கு அவர்களுக்கு கிடைத்ததோ வேறு அனுபவம். முழுக்க முழுக்க மதுரை, தேனி சுற்றுவட்டாரங்களின் பேக்ட்ராப்போடு உருவாகியிருந்த படத்தை பார்த்தபோது; தமது முந்தைய தலைமுறை எப்படி பாரதிராஜாவின் படங்களுக்கு அடிமையாகினரோ அதேபோல் பருத்திவீரனுக்கும் ரசிகர்கள் அடிமையாகினர்.

அனைவரையும் கலங்க வைத்த பருத்திவீரன் க்ளைமேக்ஸ்
படத்தில் கார்த்தியின் நடிப்பை பார்த்த பலரும் இது இவருக்கு முதல் படமா என்றே யோசித்தனர். அந்த அளவுக்கு கார்த்தியின் நடிப்பு இருந்தது. படம் முழுக்க ரகளையாகவும், கோபக்காரனாகவும் புகுந்து விளையாடியிருப்பார் கார்த்தி. அவருக்கு ஈடுகொடுத்து ப்ரியாமணியும் நடித்திருப்பார். சொல்லப்போனால் கார்த்தியைவிடவும் மிகச்சிறந்த நடிப்பை ப்ரியாமணி கொடுத்திருப்பார். அதனால் அவர் தேசிய விருதையும் வென்றார். படம் முழுக்க ரசிக்க வைத்தாலும் படத்தின் க்ளைமேக்ஸை இன்று பார்த்தாலும் பலரும் கலங்கிப்போவார்கள். இப்படி பல சிறப்புகளை கொண்ட பருத்திவீரன் படம் வெளியாகி இன்றுடன் 16 வருடங்கள் நிறைவடைகின்றன.

பருத்திவீரனை பார்த்து அமீரிடம் கோபப்பட்ட கலைஞர் கருணாநிதி
இந்நிலையில் பருத்திவீரன் படத்தை கலைஞர் கருணாநிதி பார்த்தது தொடர்பாக அமீர் கூறியிருக்கும் விஷயம் ஓன்று தெரியவந்திருக்கிறது. அதாவது, பருத்திவீரன் படத்தின் சிறப்பு காட்சி அப்போது முதலமைச்சராக இருந்த கலைஞர் கருணாநிதிக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டிருக்கிறது. படம் பார்த்துக்கொண்டிருந்தபோது அருகில் இருந்த அமீரிடம் கலைஞர் கருணாநிதி, 'யோவ் இது எந்த ஊரு' என்று சற்று கோபத்துடன் கேட்டாராம்.
அதற்கு பதிலளித்த அமீர், 'இது தேனி சுற்றுவட்டாரம்' என்று கூறியிருக்கிறார். அதற்கு உடனே கலைஞர் கருணாநிதி, 'என்ன இந்த ஊருல தந்தி கம்பியே காணும் (மின்சார கம்பங்கள்) என்று கேட்டிருக்கிறார். பதறிப்போன அமீர், 'தந்தி கம்பங்கள் அந்த ஊரில் இருந்தன நான் அவற்றை காண்பிக்காமல் இந்தப் படத்தை நான் எடுத்திருக்கிறேன்' என கருணாநிதியிடம் பதில் கூறியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











