சேது சந்தித்த பிரச்னை இவ்வளவா? யாருடா நீங்க முதல வெளில போங்க.. பாலா, அமீரை துரத்திய பாரதிராஜா
சென்னை: Bharathiraja (பாரதிராஜா) இயக்குநர்கள் பாலாவையும், அமீரையும் பாரதிராஜா வெளியே போங்க என சொல்லிய சம்பவம் தெரியவந்திருக்கிறது.
பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராக இருந்த பாலா சேது படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. முதல் படமே மெகா ஹிட்டானதால் அதிலிருந்தே பாலா தனித்துவமான இயக்குநர் என்ற பெயரை பெற்றார். அதனையடுத்து அவர் இயக்கிய நந்தா, பிதாமகன், நான் கடவுள் ஆகிய படங்களும் சூப்பர் ஹிட்டடித்தன. பிறகு அவர் இயக்கிய படங்கள் சரியாக போகவில்லை.

பிரச்னை: படங்கள் ஒருபக்கம் சரியாக போகாத பிரச்னை இருக்க மறுபக்கம் அவரது குடும்ப சூழ்நிலையும் சரியில்லாமல் போக தனது மனைவி மலரிடமிருந்து விவாகரத்து பெற்றார் பாலா. அதுமட்டுமின்றி வர்மா பட பிரச்னை, வணங்கானிலிருந்து சூர்யா விலகியது என அடுத்தடுத்து அடி விழுந்தது பாலாவுக்கு. இப்போது அருண் விஜய்யை வைத்து வணங்கான் படத்தை முடிக்கப்போகிறார்.
வாழ்க்கை கொடுத்த சேது: சேது திரைப்படம் பாலாவுக்கு மட்டுமின்றி விக்ரமுக்கும் வாழ்க்கை கொடுத்தது. விக்ரமின் பல வருட போராட்டத்துக்கு அந்தப் படம் முடிவு கட்டி அவரை ஹீரோ என்று ஒத்துக்கொள்ள வைத்தது. இருந்தாலும் முதலில் அந்தப் படம் சேது என்ற பெயரில் தொடங்கப்படவில்லை. அகிலன் என்ற பெயரில்தான் தொடங்கப்பட்டது. ஆனால் படம் ட்ராப்பாக பல வருடங்களுக்கு பிறகு சேதுவாக ரிலீஸானது.
அமீர்: இதற்கிடையே பாலாவும், இயக்குநர் அமீரும் நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சேது படத்தில்தான் பாலாவிடம் அமீர் உதவி இயக்குநராக இணைந்தார். படத்தின் கதை விவாதம் தொடங்கி புரொடக்ஷன்வரை தீவிரமாகவே உழைத்தார். சொல்லப்போனால் சேது உருவாக்கத்தில் அமீரின் பங்கும் நிறையவே இருக்கிறது.
சேதுவின் போராட்டம்: சேது படத்தை எடுத்து முடித்த பிறகு விநியோகஸ்தர்கள் யாரும் அந்தப் படத்தை வாங்க முன்வரவில்லை. கிட்டத்தட்ட 100 முறை விநியோகஸ்தர்களுக்கு படம் திரையிட்டு காண்பிக்கப்பட்டது. இதன் காரணமாக ரிலீஸாகாமலேயே அந்தப் படம் 100 நாட்கள் ஓடியது என்ற பேச்சு திரைத்துறையில் பல காலமாகவே உண்டு. அதுமட்டுமின்றி படத்தின் பூஜை போடப்பட்ட முதல் நாளே படைப்பாளிகளின் போராட்டம் நடந்தது. அதனாலும் அந்தப் படத்தின் ஷூட்டிங் தள்ளிப்போனது.
அமீர் பேட்டி: இந்நிலையில் இயக்குநர் அமீர் சேது பட அனுபவங்கள் குறித்து ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டார். அவர் அளித்த பேட்டி ஒன்றில், “1993ஆம் ஆண்டு அகிலன் என்ற பெயரில் பூஜை போட்டோம். ஆனால் படம் நடக்கவில்லை. அதற்கு பிறகு 1997ஆம் ஆண்டு சேது படத்தின் பூஜையை போட்டோம். காலையில் பூஜை போட்டால் மாலையில் படைப்பாளிகளை ஸ்ட்ரைக்கை அறிவிக்கிறார்கள்.
பாரதிராஜா: இதனையடுத்து ஜெமினி லேபில் இருந்த பாரதிராஜாவை பார்ப்பதற்காக நானும் பாலாவும் சென்றோம். அவரிடம் சென்று எப்போ சார் போராட்டத்தை கைவிடுவீங்க என கேட்டோம். அதற்கு அவரோ, ஏன் யா என்னிடம் கேட்குறீங்க என சொல்ல; நாங்களோ ஏன் சார் இப்பதான் நாங்க கஷ்டப்பட்டு ஒரு படத்தை ஆரமிச்சிருக்கோம். நீங்கள் போராட்டத்தை அறிவிச்சிருக்கிங்க என கேட்டோம்.
அதற்கு அவர், யோவ் எனட்ட கேட்டா எப்படிய்யா என சொல்ல; நாங்கள் உச்சக்கட்ட கோபமடைந்து ஏன் சார் நீங்கள்தானே போராட்டத்தை அறிவிச்சீங்க. அப்போ உங்கள்ட்டதான் கேட்க முடியும் என சொல்ல; டென்ஷனான பாரதிராஜா, அருகில் இருந்தவரிடம் யோவ் யாரு இவனுங்க இப்படி பேசிட்டு இருக்கானுங்க. முதல இவனுகள் வெளில தொரத்திவிடு என்றார். பிறகு நாங்கள் வெளியே அனுப்பப்பட்டோம். அதன் பின்பு அந்தப் படம் ஒரு வழியாக ரிலீஸாகி மெகா ஹிட்டாகிவிட்டது” என்றார்.


Click it and Unblock the Notifications











