Ameer speech: முதலாளிகளின் கையில் சினிமா மாட்டியுள்ளது.. முதல்ல காப்பாத்துங்க.. அமீர் பேச்சு!
சென்னை: திரைப்பட எடிட்டர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற அணியினர் பதவியேற்பு விழா சென்னை, சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப் நடைபெற்றது. இதில் பேசிய தமிழ் சினிமா தனித்தனி முதலாளிகளின் கையில் மாட்டியுள்ளது, அதை முதலில் காப்பாத்துங்க என்று அந்த நிகழ்ச்சியில் அமீர் பேசினார்
இந்த விழாவில் பேசிய அமீர், இசை வெளியீட்டு விழாக்கூட இவ்வளவு என்டர்டெயிண்மென்டா இருந்து இருக்காது ஏன் என்றால் அனைவரும் ரொம்ப நல்ல பேசினாங்க. ஒரு இயக்குநருக்கு படத்தொகுப்பு பற்றி புரிதல், இசை, சண்டை, எல்லாமும் தெரிந்திருக்க வேண்டும். ஆனால் ஒரு எடிட்டருக்கு இயக்குநருக்கான சென்ஸ் இருக்க வேண்டும். ஒரு இயக்குநரின் பார்வையில் ஒரு எடிட்டர் இருந்தால் தான் அந்த படம் ஒரு சிறந்த திரைப்படமாக உருவாகும்.

இயக்குநர் அமீர்: ஒரு திரைப்படத்தை கற்பனை செய்து, ஒரு ஆகச்சிறந்த திரைப்படமாக எடுத்தாலும், அந்த படம் தேறுமா, தேறாதா என்று கண்டுபிடிப்பது எடிட்டர் தான். ஆனால், பல எடிட்டர்கள் அதை இயக்குநரிடம் சொல்லுவது இல்லை. அதை அவர்களிடம் சொல்லிவிட்டால், அதை உடனே சரி செய்துவிட முடியும். நான் என் எடிட்டரோடு போராடுவேன் எதாவது வாயத்திறந்து சொல்லுயானு சொல்லுவேன். ஆனாலும் எதுவும் சொல்ல மாட்டாங்க. தன்னுடைய காதலியுடன் தனி அறையில் உட்கார்ந்து பேசும்போது எவ்வளவு சந்தோசம் கிடைக்குமோ? அவ்வளவு சந்தோசம், எடிட்டிங் ரூமில் இருக்கும்போது ஒரு இயக்குநருக்கு கிடைக்கும். அதை நான் உணர்ந்து இருக்கிறேன்.
எடிட்டரின் வேலை: நான் பருத்தி வீரன் படத்தை 13 வர்ஷன் பண்ணி அதில் ஒன்றை ஒகே செய்தேன் அது தான் எடிட்டரின் உழைப்பு. படப்பிடிப்பின் போது உதவி இயக்குநருடன் சண்டை வரும், படம் முடிந்த பிறகு எடிட்டருடன் அதிக சண்டை வரும். ஆனால், அதை எல்லாத்தையும் தாண்டி எடிட்டர்கள் படத்திற்கு உண்மையாக இருக்க வேண்டும். படம் தேறுமா தேறாதா என்பது முக்கியமல்ல. எடிட்டர்கள் அந்தப் படத்தை தேற்ற வேண்டும், அந்தப் பொறுப்பு அவர்களிடம் உள்ளது.
சினிமாவை காப்பாத்தனும்: தொடர்ந்து பேசிய அவர், இன்றைக்கு தமிழ் சினிமா அனாதையாக உள்ளது. தமிழ் சினிமாவை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு நம்மிடம் தான் உள்ளது. வருடத்திற்கு 365 நாள் அதில், ஆண்டுக்கு 250 படம் வெளியாகிறது. அதாவது ஒன்றரை நாளுக்கு என்கிற விகிதத்தில் படம் வெளியாகிறது. அதுமட்டுமில்லாமல் டிவி, செல்போன், ஓடிடி தளத்திலும் படம் வெளியதாகிறது. இப்படி இருக்கும் போது ரசிகர்கள் எவ்வளவு படங்களைப் பார்ப்பார்கள்? இதனால் மக்கள் தியேட்டருக்கு வரமாட்டார்கள் என்று தெரிந்து தான் பான் இந்தியா திரைப்படமாக எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள்.
மதுரைக்கு சென்றுவிடுவேன்: இந்த நிலை சரியாகவில்லை என்றால், மதுரைக்குச் சென்று அங்கேயே ஆட்களைப் பிடித்துப் படமெடுத்துக்கொண்டு அங்கேயே இருந்து விடுவேன். எவ்வளவு செலவு செய்து படங்கள் எடுத்தாலும் இங்கு தியேட்டர்கள் கிடைப்பதில்லை. க்யூப் நிறுவனம் தொடங்கும்போது நம்மிடம் வந்து நிற்பார்கள். ஆனால் இப்போது அவர்கள் மோனோபோலி ஆகிவிட்டார்கள். இப்போது அவர்களைக் கேள்வி கேட்க முடிவதில்லை. மேலும், தனித்தனி முதலாளிகளின் கையில் சினிமா மாட்டியுள்ளது. அதை முதலில் காப்பாற்ற வேண்டும் என்று அமீர் இந்த கூட்டத்தில் பேசினார்.


Click it and Unblock the Notifications











