வெற்றிமாறன் அப்பப்போ ஏதாவது சொல்வார்.. வாடிவாசல் பற்றி அமீர் சொன்ன ஷாக் நியூஸ்
சென்னை: கோலிவுட்டின் சிறந்த நடிகர்களில் ஒருவரான சூர்யாவும், சிறந்த இயக்குநர்களில் ஒருவரான வெற்றிமாறனும் வாடிவாசல் படத்தில் இணைவார்கள் என்று கூறப்பட்டது. எழுத்தாளர் சி.சு.செல்லப்பா எழுதிய வாடிவாசல் என்ற நாவலை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகவிருக்கிறது. இயக்குநர் அமீர் உள்ளிட்டோர் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்தச் சூழலில் அமீர் வாடிவாசல் குறித்து சமீபத்திய பேட்டியில் பேசியிருக்கிறார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் கடைசியாக விடுதலை படத்தின் முதல் பாகம் வெளியானது. சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. இதன் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங்கும் முடிவடைந்து படமானது விரைவில் வெளியாகவிருக்கிறது.சமீபத்தில்கூட ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் விடுதலை 2 திரையிடப்பட்டது. படத்தை பார்த்த ரசிகர்கள் எழுந்து நின்று ஐந்து நிமிடங்கள் கைத்தட்டி வெற்றிமாறனையும், படக்குழுவினரையும் பாராட்டினார்கள்.

வாடிவாசல்: நாவல்களையும், சிறுகதைகளையும் படமாக்கும் முயற்சியில் வெற்றிமாறன் இப்போது தீவிரமாக இறங்கியிருக்கிறார். அப்படி அவர் இயக்கிய விசாரணை, அசுரன் ஆகிய படங்கள் இந்திய அளவில் கவனம் ஈர்த்தன. அதேபோல் சி.சு.செல்லப்பா எழுதிய வாடிவாசல் என்ற குறுநாவலை அதே பெயரிலேயே வெற்றிமாறன் படமாக்கவிருக்கிறார். சூர்யா கதாநாயகனாக நடிக்க, கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார்.
வாடிவாசல் டெஸ்ட் ஷூட்: வாடிவாசல் படம் குறித்த அறிவிப்பு வெளியானதுமே ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்க ஆரம்பித்துவிட்டனர். ஷூட்டிங் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் விடுதலை படத்தை இயக்க வந்துவிட்டார் வெற்றிமாறன். இதற்கிடையே தமிழ்நாடு முழுவதுமிருந்து காளைகளை வரவழைத்து டெஸ்ட் ஷூட் நடத்தப்பட்டது. அதில் நடிகர் சூர்யா,டாணாக்காரன் இயக்குநரும், நடிகருமான தமிழ் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர். அந்த டெஸ்ட் ஷூட் வீடியோவே ரசிகர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றது.
தாமதம்: வாடிவாசல் படத்தின் டெஸ்ட் ஷூட் முடிந்துவிட்டாலும் படத்தின் ஷூட்டிங் ஆரம்பிக்கப்படவே இல்லை. விடுதலை படத்தை முடித்துவிட்டு வாடிவாசல் படத்தை தொடங்க வெற்றி திட்டமிட்டிருந்தார். ஆனால் அவர் எதிர்பார்க்காதபடி விடுதலை படத்தை இரண்டு பாகங்களாக உருவாக்கும் சூழல் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் விடுதலைக்கு சென்றுவிட; சூர்யா கங்குவாவில் பிஸியானார். இதனால் வாடிவாசல் படத்தின் பணிகள் தள்ளிப்போய்க்கொண்டே இருந்தன. மேலும் படம் ட்ராப் ஆகிவிட்டதாகவும் கடந்த சில மாதங்களாகவே ஒரு தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது.
அமீர் பேட்டி: இந்நிலையில் அமீர் வாடிவாசல் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசுகையில், "வெற்றிமாறனிடம் வாடிவாசல் படம் பற்றி நானாக எதுவும் கேட்டுக்கொண்டது இல்லை. அவரே அப்பப்போ என்னிடம் சில விஷயங்களை சொல்லிக்கொண்டிருப்பார். இப்போது ஷூட்டிங் ஆரம்பிக்கிறேன் என்பார். பிறகு லேட்டாக ஆரம்பிப்போம் என்று சொல்வார். அந்தக் கேரக்டருக்கு ஒரு பாடல் ரெக்கார்டிங் நடக்குது என்பார்.
அப்படியா?: நான் பெரிதாக ரியாக்ட் செய்யமாட்டேன். அவர் என்ன சொன்னாலும் அப்படியா என்று கேட்டுக்கொள்வேன். திடீரென்று ஒருநாள் வாடிவாசல் படம் இப்போதைக்கு பண்ணவில்லை என்று சொல்வார். அதையும் சரி; நான்கு நாட்களுக்கு முன்னர்கூட நானும், வெற்றிமாறனும் சந்தித்துக்கொண்டோம். அப்போது அவர் வாடிவாசல் படத்தை நாம் மீண்டும் ஆரம்பிக்கிறோம் என்று சொன்னார். அதற்கும் நான் ஓ அப்படியா சந்தோஷம் என்று சொன்னேன்" என்றார்.


Click it and Unblock the Notifications











