Selvaragavan: மன அழுத்தம்.. 7 முறை தற்கொலைக்கு முயன்றேன்.. மனம் திறந்த செல்வராகவன்!
சென்னை: துள்ளுவதோ இளமை, 7ஜி ரெயின்போ காலனி, காதல் கோட்டை, புதுக்கோட்டை போன்ற பிளாக் பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர் என்ற இடத்தை பிடித்துள்ளார் செல்வராகவன். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தத்துவ மழை பொழிந்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் தற்கொலை குறித்து பேசி உள்ளார்.
இயக்குநராக இருந்த செல்வராகவன் விஜய் நடித்த பீஸ்ட் படத்தில் நடித்து நடிகராக மாறினார். இதைத்தொடர்ந்து சாணி காயிதம் படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு அண்ணனாக நடித்து நடிப்பில் மிரட்டினார். இந்த படம் அவருக்கு நல்ல நடிகர் என்ற பெயரை பெற்று தந்தது . அதைத்தொடர்ந்து பகாசூரன், நானே வருவேன், மார்க் ஆண்டனி, ராயன் என அடுத்தடுத்த படத்தில் நடித்து வருகிறார். இணையத்தில் அவ்வப்போது தத்துவம் பேசி வரும் செல்வராகவன் தற்போது, வாழ்க்கை தத்துவத்தை பேசி உள்ளார்.

தற்கொலை எண்ணம்: அதில், இந்த உலகத்துல வாழ்கிற அனைவருக்கும் இந்த இரண்டுவிதமான அனுபவத்தை அனுபவித்தவர்களாக இருப்பார்கள் ஒன்று. தற்கொலை முயற்சி, இன்னொன்று டிப்ரஷன். இது மாதிரி நானும் அனுபவித்து இருக்கிறேன். நான் ஒருமுறை அல்ல ஏழு முறை தற்கொலைக்கு முயற்சி செய்து இருக்கிறேன். ஆனால் இப்பொழுது அல்ல, சில வருடங்களுக்கு முன்பு. ஒவ்வொரு தற்கொலைக்கு முயற்சி செய்யும் போதும், மனசுக்குள் ஒரு குரல் கேட்கும், ஏதோ சொல்ற மாதிரி, ஏதோ கேக்குற மாதிரி ஒரு உணர்வு இருக்கும். 10 நாள் கழித்தோ அல்லது ஆறு மாதம் அல்லது ஒரு வருடம் கழித்துக் கூட வாழ்க்கை திடீரென மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் நாம ஆசைபட்டது போல மாறலாம். அப்போது, தற்கொலை செய்து கொண்டிருந்தால் எல்லாமே போயிருக்குமே என்று நான் நினைப்பேன்.
அது கடவுளின் குரல்: வாழ்க்கையே அதுதான். தற்கொலை செய்ய முயற்சி செய்து வாழ்க்கை முடித்துக்கொள்ள நினைப்பவர்களின் உண்மையான நோக்கம் என்னவென்றால், அடுத்த ஜென்மத்திலாவது நம் வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும் எனும் நம்பிக்கையே. சுவிட்சர்லாந்தில் உள்ள ஒரு குடியிருப்பில் சந்தோஷமாக பிறந்து வாழ வேண்டும் என்று நினைப்போம்; ஆனால், கூவத்தில் பிறந்த பன்னியாகவோ, காட்டில் மரத்தில் தொங்கும் பேயாகவும் இருந்தால் யாரால் என்ன செய்ய முடியும்.

நமக்கு கேட்கும் அந்த குரல் கடவுளின் குரலாகவோ அல்லது வேறு யாரின் குரலாகவோ இருக்கலாம். என்ன பெயர் வேண்டுமானாலும் சொல்லுங்கள், ஆனால் அந்த குரல் கேட்காமல் இருக்காது. இது உண்மையானது என்று இயக்குனர் செல்வராகவன் தற்கொலை எண்ணம் குறித்து அந்த வீடியோவில் பேசி உள்ளார். ஆனால், தற்போது அந்த வீடியோ டெலிட் செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











