கலைப்புலி சேகரன் காலமானார்.. சோகத்தில் திரைத்துறை.. அடுத்தடுத்து துயரங்கள்.. வருத்தத்தில் ரசிகர்கள்!
சென்னை: திரைப்பட விநியோகஸ்தர், தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர் என பன்முக திறமை கொண்ட, கலைப்புலி ஜி. சேகரன் சற்றுமுன் காலமானார். அவருக்கு வயது 73. அவரது மறைவு திரைத்துறையினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
ஜி சேகரன், திரைப்பட நிதியாளராகவும் விநியோகஸ்தராகவும் தமிழ் திரையுலகில் தனது தொழிலை தொடங்கினார்.பின்னாளில் இவர் எஸ். தாணு, சூரி ஆகியோருடன் இணைந்து கலைப்புலி பிலிம்சின் பங்குதாரராக மாறினார். இதைத்தொடர்ந்து கண்ணன் இயக்கிய யார்? திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக மாறிய, சேகரன் அப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்தார். அதன் பின்,ஊரைத் தெரிஞ்சுகிட்டேன், காவல் பூனைகள், உளவாளி, ஜமீன் கோட்டை, குடும்ப சங்கிலி ஆகிய படங்களை தயாரித்தார். அதுமட்டுமில்லாமல், மாளவிகா நடித்த கட்டுவிரியன் என்ற படத்தை இயக்கி இசையும் அமைத்தார்.

கலைப்புலி சேகரன்: வயது மூப்பு காரணமாக வெளியில் தலைகாட்டாமல் இருந்த கலைப்புலி ஜி சேகர், உடல்நிலை காரணமாக, இன்று மதியம் உயிரிழந்தார். அன்னாரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக, இன்று மாலை 6 மணி முதல், அவரது இல்லமான ராயபுரத்தில் வைக்கப்பட உள்ளது. பன்முக திறமை கொண்ட, கலைப்புலி ஜி. சேகரனின் மறைவு தமிழ் திரைத்துறையினரை பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இந்த துக்க செய்தியை கேள்விபட்ட பிரபலங்கள் பலர் அஞ்சலி செலுத்துவதற்காக அவரது வீட்டுக்கு விரைந்துள்ளனர்.
கடந்த சில வாரங்களாகவே சினிமா துறையில் அடுத்தடுத்த மரண செய்திகள் வந்து ரசிகர்களை ஆழ்த்துகிறது. மார்ச் 25ந் தேதி பாரதி ராஜாவின் மகன் மனோஜ், மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அந்த துயரமான சம்பவத்தில் இருந்து மீண்டு வருவதற்குள், கே.பாலசந்தர் இயக்கிய 'அவர்கள்' படம் மூலம் தமிழில் அறிமுக நடிகர் ரவிக்குமார் காலமானார். ஒரு வருடமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு,சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதைத்தொடர்ந்து,'பனி விழும் மலர் வனம்' , 'கயல்' 'கெட்டி மேளம்' உள்ளிட்ட தொடர்களில் நடித்து வந்தவர் நடிகர் பிரபாகரன். நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.


Click it and Unblock the Notifications











