செய்யவேண்டியது நிறைய இருக்கிறது.. சேர்ந்து படம் பண்ணலாம் வாங்க.. ரஞ்சித்தை அழைக்கும் அனுராக் காஷ்யப்
இயக்குநர் ரஞ்சித்துடன் சேர்ந்து படம் பண்ண விரும்புவதாக பிரபல பாலிவுட் இயக்குநரும், நடிகருமான அனுராக் காஷ்யப் தெரிவித்துள்ளார்.
சென்னை: பிரபல பாலிவுட் இயக்குநரும், நடிகருமான அனுராக் காஷ்யப், இயக்குநர் ரஞ்சித்தை நேரில் சந்தித்து பேசியது பாலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழில் மூன்றாவது படத்திலேயே ரஜினியை இயக்கும் வாய்ப்பை பெற்றவர் என்ற பெருமைக்குரியவர் இயக்குநர் ரஞ்சித். கபாலி பட வெற்றியால் மீண்டும் ரஞ்சித்திற்கே படம் இயக்கும் வாய்ப்பை ரஜினி தந்ததால், முன்னணி இயக்குநர்களில் ஒருவரானார் ரஞ்சித். விரைவில் பாலிவுட்டிலும் அறிமுகமாக இருக்கிறார் அவர்.
இந்நிலையில், பாலிவுட் திரைப்பட உலகின் மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவரும், நடிகருமான அனுராக் காஷ்யப், ரஞ்சித்தை நேரில் சந்தித்து பேசியுள்ளார். சமீபத்தில் 'காலா' 'பரியேறும் பெருமாள்' படங்களை பார்த்த தாக்கத்தினால் ரஞ்சித்தை அவர் மும்பையில் சந்தித்தார்.

பரியேறும் பெருமாள்:
இரஞ்சித்துக்கு விருந்தளித்த அனுராக், ரஜினி நடிப்பில் வெளியான "காலா" திரைப்படம் குறித்து சிலாகித்து பேசியிருக்கிறார். அந்த படத்தின் அரசியல், தொழிற்நுட்ப நேர்த்தி ஆகியவை குறித்தும் விரிவாக பேசியிருக்கிறார். மேலும் பா.இரஞ்சித் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான பரியேறும் பெருமாள் படம் குறித்தும் அவர் பாராட்டியிருக்கிறார்.

சேர்ந்து படம் பண்ணலாம்:
மேலும், "இந்திய சமூகத்தில் சாதிய ஏற்றத்தாழ்வு, வர்க்கம் , பெண்ணடிமைத்தனம் குறித்து கலைஞர்களுக்கு சரியான புரிதல் வேண்டும். கலைஞர்கள் அதை கவனத்தில் கொள்ளவேண்டும். நாம் செய்யவேண்டிய பணிகள் நிறைய இருக்கிறது. இந்திய அளவில் தலித் அரசியலை வெளிப்படையாகவும், நேர்மையாகவும் துணிச்சலாக பேசக்கூடிய படைப்பாளியான உங்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன்" என்றும் இந்த சந்திப்பின் போது, தனது விருப்பத்தினை ரஞ்சித்திடம் தெரிவித்திருக்கிறார் அனுராக் காஷ்யப்.

ரஞ்சித் மகிழ்ச்சி:
இந்த சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்த இயக்குநர் பா.இரஞ்சித், "உண்மையிலேயே அவரை சந்தித்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. " காலா", "பரியேறும் பெருமாள்" குறித்து அவர் பேசியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. கூடிய விரைவில் சேர்ந்து பணியாற்றுவோம் என்றும் கூறியிருக்கிறார்" என்று உற்சாகமாக கூறினார்.

நயன் வில்லன்:
பாலிவுட்டில் பிரபல இயக்குநர்களில் ஒருவரான அனுராக், தமிழில் இமைக்கா நொடிகள் படத்தில் நயன்தாராவுக்கு வில்லனாக நடித்திருந்தார். அப்படத்தில் அவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











