அடுத்த படத்திற்கு பூஜை போட்ட ‘அருவி’ பட இயக்குநர்.. 24 ஏஎம் ஸ்டுடியோஸ் தயாரிப்பு !
24 ஏஎம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் அடுத்த படத்திற்கு பூஜை போட்டுள்ளார் ‘அருவி’ அருண்பிரபு புருஷோத்தமன்.
சென்னை: அருவி படத்தை இயக்கிய அருண்பிரபு புருஷோத்தமனின் அடுத்த படத்தை 24 ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கான பூஜை நேற்று போடப்பட்டது.
தனது முதல் படமான அருவி மூலமாகவே ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குநர் அருண்பிரபு புருஷோத்தமன். அருவி படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அருண்பிரபு புருஷோத்தமனின் இரண்டாவது படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகமானது.
இந்நிலையில், அவரது இரண்டாவது படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

24 ஏஎம் ஸ்டுடியோஸ்:
24 ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு, ‘அருவி' படத்தில் படத்தொகுப்பாளராகப் பணிபுரிந்த ரேமண்ட் படத்தொகுப்பையும், ‘மேயாத மான்' படத்தின் இசை அமைப்பாளர்களில் ஒருவரான பிரதீப் குமார் இசையையும் கவனித்துக் கொள்கின்றனர்.

குமுளி அருகே:
இந்தப் படத்தின் தொடக்கவிழா குமுளி அருகில் உள்ள நோஸ்ரம் மையத்தில் நேற்று நடந்துள்ளது. இதில், 24 ஏம்.ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா, இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன், படத்தொகுப்பாளர் ரேமண்ட்,பேராசிரியர் ராஜநாயகம், பாவலர் அறிவுமதி ஆகியோர் கலந்துகொண்டனர்.

டிவிட்டர் பதிவு:
இது தொடர்பாக தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "தரமான மற்றும் அதே சமயம் பொழுதுபோக்கு அம்சமுள்ள படங்களை கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் , இன்று அர்ப்பணிப்பு மற்றும் சின்ஸியரான அருவி பட புகழ் இயக்குனருடன் நாங்கள் ஒப்பந்தம் செய்துள்ளோம் எங்கள் மென்டர் முன்னிலையில் குமிலியில்" எனத் தெரிவித்துள்ளார்.

சிவகார்த்திக்கேயனா?
24 AM ஸ்டுடியோஸ் இதுவரை சிவகார்த்திகேயனின் படங்களை மட்டுமே தயாரித்துள்ளது. எனவே, இன்னும் படத்தில் நடிப்பவர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாததால், இதில் சிவகார்த்திக்கேயன் நாயகனாக நடிக்கிறாரா அல்லது அருவி போன்று அனைவரும் புதுமுகங்களா என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











