Director Atlee: அடுத்ததாக புஷ்பா பட நடிகருடன் இணையும் அட்லீ.. அப்ப ஷாருக்கான் -விஜய் கூட்டணி?
சென்னை: இயக்குநர் அட்லீ குறைவான படங்களையே இயக்கியிருந்தாலும் சர்வதேச அளவில் கவனம் பெற்றவராக உள்ளார்.
சமீபத்தில் ஷாருக்கானுடன் இணைந்து அட்லீ கொடுத்திருந்த ஜவான் படம் 1000 கோடி ரூபாய் கிளப்பில் சில தினங்களிலேயே இணைந்தது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக அட்லீ யாரை இயக்குவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
அடுத்ததாக ஷாருக்கான்-விஜய் கூட்டணியில் படமியக்கவுள்ளதாகவும் இதற்கு இருவரும் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அவர் தனது சமீபத்திய பேட்டியில் கூறியிருந்தார்.

இயக்குநர் அட்லீ: நடிகர் ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா உள்ளிட்டவர்களின் கலக்கல் காம்பினேஷனில் ராஜா ராணி என்ற தன்னுடைய முதல் படத்தை இயக்கியிருந்தார் இயக்குநர் அட்லீ. இந்தப் படத்தின் கதை பல படங்களை சேர்த்து இயக்கப்பட்டதாக விமர்சிக்கப்பட்டாலும் படம் சூப்பர் ஹிட்டடித்தது. அடுத்த படத்திலேயே விஜய்யை இயக்கும் வாய்ப்பையும் பெற்றுத் தந்தது. விஜய்யின் மெர்சல், தெறி, பிகில் என ஹாட்ரிக் வெற்றியை கொடுத்தார் அட்லீ. மூன்று படங்களும் வித்தியாசமான ஜானர்களில் ரசிகர்களை அதிகமாக கவர்ந்தன. தொடர்ந்து விஜய்யின் அடுத்தப்படத்தை அட்லீ இயக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
ஜவான் படத்தை இயக்கிய அட்லீ: இந்தப் படங்களின் வெற்றி பாலிவுட் பாட்ஷா என்று அழைக்கப்படும் ஷாருக்கானின் படத்தை இயக்கும் வாய்ப்பையும் பெற்றுத் தந்தது. இந்த வாய்ப்பை மிகச்சிறப்பாக பயன்படுத்திக் கொண்டார் அட்லீ. கடந்த செப்டம்பர் மாதத்தில் வெளியான இந்தப் படத்திற்காக 4 ஆண்டுகள் காத்திருந்தார். முன்னதாகவே படம் வெளியாகவிருந்த நிலையில், சில காட்சிகளை மீண்டும் எடுக்க வேண்டி ரிலீஸ் தேதி தள்ளிப் போனது. இந்தப் படத்தினை ரசிகர்கள் குறிப்பாக பாலிவுட் ரசிகர்கள் கொண்டாடினர். படம் 1000 கோடி ரூபாய் கிளப்பில் சில தினங்களிலேயே இணைந்தது.
அட்லீயின் அடுத்தப்படம்: இதையடுத்து தன்னுடைய குடும்பத்தினருடன் சில மாதங்கள் நேரம் செலவழிக்க விரும்புவதாக அட்லீ முன்னதாக பேட்டியொன்றில் குறிப்பிட்டிருந்தார். இதனிடையே நடிகர்கள் ஷாருக்கான், விஜய்யை இணைத்து அடுத்ததாக படமியக்கவுள்ளதாகவும் இந்தப் படத்திற்கு இருவரும் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் சில வாரங்களுக்கு முன்பு அட்லீ பேட்டியொன்றில் தெரிவித்திருந்தார். அதற்கான ஸ்கிரிப்ட் வேலைகளில் அவர் தற்போது ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதனிடையே அட்லீயின் அடுத்தப்படம் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
அல்லு அர்ஜூனுடன் இணையும் அட்லீ: அடுத்ததாக அல்லு அர்ஜூன் ஹீரோவாக நடிக்கும் படத்தைதான் அட்லீ இயக்கவுள்ளதாக தற்போது தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் பிரீ புரொடக்ஷன் பணிகள் தற்போது நடந்து வருவதாகவும் விரைவில் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது புஷ்பா 2 படத்தின் இறுதிக்கட்ட சூட்டிங்கில் நடித்துவருகிறார் அல்லு அர்ஜூன். இந்தப் படம் அடுத்த ஆண்டில் கோடைக் கொண்டாட்டமாக வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ரசிகர்கள் ஆர்வம்: விஜய்யுடன் அட்லீ இணைந்து இயக்கியிருந்த 3 படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்றும் ஹாட்ரிக் சக்சஸை கொடுத்தது. இதனால் அட்லீ-விஜய் காம்பினேஷனில் அடுத்தப்படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். முன்னதாக தளபதி 68 படத்தையே அட்லீதான் இயக்கவுள்ளார் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இந்நிலையில் விஜய்யின் அடுத்தப்படத்தில் அவர் இணையவுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது அட்லீ-அல்லு அர்ஜூன் கூட்டணி குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. ஷாருக்கான்-விஜய் காம்பினேஷனில் படமியக்கவுள்ளதாக அட்லீ கூறியிருந்த நிலையில், அந்தப் படம் குறித்தும் அறிந்துக் கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











