Director Atlee: ரஜினியை பாட்ஷாவை காட்டிலும் மாஸா காட்டனும்.. தயாராகிவரும் அட்லீ!
சென்னை: இயக்குநர் அட்லீ அடுத்தடுத்த வெற்றிப் படங்களை கொடுத்து இந்திய அளவில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
சமீபத்தில் ஷாருக்கான் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் வெளியான ஜவான் படம் 1000 கோடி ரூபாய்களுக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது.
அடுத்ததாக அட்லீ இயக்கத்தில் உருவாகவுள்ள படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

இயக்குநர் அட்லீ: இயக்குநர் அட்லீ ஷங்கரிடம் உதவி இயக்குநராக தன்னுடைய கேரியரை துவக்கியவர். ரஜினியின் எந்திரன் உள்ளிட்ட படங்களில் ஷங்கருடன் இணைந்து பணியாற்றிய அட்லீ, ராஜா ராணி படத்தின்மூலம் தன்னுடைய கேரியரை தமிழ் சினிமாவில் துவக்கியவர். ஆர்யா, ஜெய், நயன்தாரா, நஸ்ரியா, சந்தானம் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்த இந்தப் படம் அட்லீ மிகப்பெரிய அறிமுகத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.
ஹாட்ரிக் வெற்றி: தொடர்ந்து விஜய்யின் அடுத்தடுத்த 3 படங்களை இயக்கும் வாய்ப்பையும் பெற்றுத் தந்தது. தெறி, மெர்சல், பிகில் என விஜய்யின் அடுத்தடுத்த படங்களை இயக்கி ஹாட்ரிக் வெற்றியை கொடுத்திருந்தார் அட்லீ. இந்தப் படங்களின் மூலம் அடுத்ததாக பாலிவுட்டில் ஷாருக்கானை இயக்கும் வாய்ப்பும் அட்லீக்கு கிடைத்தது. 4 வருடங்கள் இந்த படத்திற்காக தொடர்ந்து உழைத்தார். கொரோனா உள்ளிட்டவை இந்தப் படத்தை தாமதமப்படுத்தின. இருந்தபோதிலும் தன்னம்பிக்கையுடன் ஜவான் படத்தை எடுத்து முடித்தார்.
சர்வதேச அங்கீகாரம்: இந்தப் படம் அவருக்கு சர்வதேச அளவில் அங்கீகாரத்தை பெற்றுத் தந்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தில் ரிலீசான ஜவான் படம் 1000 கோடி ரூபாய்களுக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. இதையடுத்து அட்லீயின் அடுத்தப்படம் குறித்த கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. அடுத்ததாக ஷாருக்கான் -விஜய் காம்பினேஷனில் படமியக்க உள்ளதாக அட்லீ தனது சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். மேலும் விஜய் அடுத்தடுத்த கமிட்மெண்ட்களில் பிசியாக உள்ளதால், கமல் -ஷாருக்கான் கூட்டணியில் அட்லீ படமியக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரஜினியுடன் இணையவுள்ள அட்லீ: இதனிடையே ரஜினிகாந்துடன் தான் இணைந்து படமியக்குவது 100 சதவிகிதம் உறுதியாகியுள்ளதாக அட்லீ தெரிவித்துள்ளார். இந்த படத்திற்கு ரஜினிகாந்தும் தயாராகவுள்ளதாகவும் ஆனால் அதற்கான சரியான நேரத்தில் இந்தப் படம் அமையும் என்றும் அட்லீ தனது சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். தான் ரஜினிக்கு 2 -3 ஸ்கிரிப்ட்களை சொன்னதாகவும் அட்லீ தெரிவித்துள்ளார். ஆனால் ரஜினியின் பாட்ஷா படத்தை காட்டிலும் மாஸாக ரஜினியை வெளிப்படுத்த தான் திட்டமிட்டுள்ளதாகவும் அட்லீ கூறியுள்ளார்.
ரஜினியின் ரசிகன் என அட்லீ உற்சாகம்: அதற்கான கதையை உருவாக்க தனக்கு நேரம் பிடிக்கும் என்றும் அட்லீ தெரிவித்துள்ளார். மேலும் எந்திரன் படத்திற்காக தான் ரஜினிகாந்துடன் தொடர்ந்து 300 நாட்கள் இணைந்து பணியாற்றியதாகவும் தான் ரஜினியின் மிகப்பெரிய ரசிகன் என்றும் அட்லீ மேலும் கூறியுள்ளார். இளம் வெற்றிப்பட இயக்குநர்களுடன் தொடர்ந்து இணைந்து பணியாற்றி வருகிறார். நெல்சன், ஞானவேல், லோகேஷ் கனகராஜ் ஆகியோருடன் கமிட்டான நிலையில் அடுத்ததாக அட்லீயுடன் இணைவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











