மும்பையில் கெத்து காட்டும் தமிழன்! ஜவான் மாஸ் ஹிட்டுக்குப்பின் சல்மான் கானை இயக்கும் அட்லீ!
மும்பை: தமிழ் சினிமாவில் பக்கா கமர்சியல் டைரக்டர் என்று பெயர் எடுத்தவர் மட்டும் இல்லாமல் பாக்ஸ் ஆபீஸில் நூற்றுக்கணக்கான கோடிகளை வாரி குவிக்கும் இயக்குநர் என்றும் பெயரெடுத்தவர் அட்லீ. பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருந்தவர் அட்லீ. எந்திரன், நண்பன் உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றினார். இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். தனது அட்டகாசமான இயக்கத்தால் அட்லீ படத்துக்கு போனாலே ஜாலியா ஒரு படம் பார்த்துட்டு வரலாம் பா என்கின்ற உணர்வையும் எதாவது ஒரு சோசியல் மெசேஜ் இருக்கும் என்கின்ற எண்ணத்தையும் சினிமா ரசிகர்களுக்கு ஏற்படுத்தி விட்டார்.
ராஜா ராணிக்கு பின்னர் இயக்குநர் அட்லீ நடிகர் விஜய்-யை வைத்து தெறி, அதன் பின்னர் மெர்சல் மற்றும் அதை அடுத்து பிகில் என மூன்று படங்களை தொடர்ந்து இயக்கினார். அட்லீ இயக்கிய நான்கு படங்களும் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. குறிப்பாக மெர்சல் திரைப்படத்தில் ஜிஎஸ்டிக்கு எதிரான வசனங்கள் பாஜக ஆதரவாளர்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாகவும் மெர்சல் திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

ஆயிரம் கோடி வசூல்: விஜய்-யை வைத்து தெறி, மெர்சல் மற்றும் பிகில் என ஆகிய மூன்று படங்களிலும் மிகப்பெரிய ஹிட் கொடுத்ததால் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் அட்லீயை அழைத்து தனக்கொரு படம் செய்யுமாறு கேட்டுக் கொண்டார். "ஷாருக்கானே சொல்றாரு அவருக்கு ஒரு படம் பண்ணிருவோம்" என்கின்ற நம்பிக்கையில் ஷாருக்கான் வைத்து ஜவான் என்ற பிளாக்பஸ்டர் படத்தை இயக்கினார் அட்லீ. இந்தப் படம் ஹிந்தி திரை உலகிலேயே இதுவரை பேசாத அரசியலை பேசியது மட்டும் இல்லாமல் வசூலிலும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. பாக்ஸ் ஆபிஸில் ரூபாய் ஆயிரம் கோடி வசூல் செய்தது ஜவான். இந்த படத்தில் நயன்தாரா யோகி பாபு விஜய் சேதுபதி உள்ளிட்ட தென்னிந்திய துறை பிரபலங்களும் நடித்திருந்தனர். அனிருத் இசையமைத்திருந்தார். நடந்து முடிந்த மக்களவைப் பொதுத் தேர்தலில் பாஜக பெரும்பான்மையை இழக்க காரணங்களில் ஒன்றாக ஜவான் படத்தைக் கூறினார்.

மிகப்பெரிய இயக்குநர்: ஜவான் படத்தின் பிரம்மாண்ட வெற்றியும் ஆயிரம் கோடி ரூபாய் பாக்ஸ் ஆபிஸ் வசூலும் அட்லீயை ஹிந்தி திரை உலகில் மிகப்பெரிய இயக்குநர் பட்டியலில் இடம்பெறச் செய்தது. இதனால் பாலிவுட் சூப்பர் ஸ்டார்கள் அட்லீயை அழைத்து எனக்கொரு கதை பண்ணுங்க என வரிசையாக நிற்கும் அளவிற்கு சூழல் ஏற்பட்டது. இந்நிலையில் அல்லு அர்ஜுனை வைத்து அட்லீ படம் இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருந்த நிலையில் அந்தப் படம் கைவிடப்பட்டதாகவும் செய்திகள் உலா வர தொடங்கியுள்ளன.

சல்மான் கான்: இந்நிலையில் இன்று அதாவது ஜூன் மாதம் 17ஆம் தேதி எக்ஸ் வலைதளத்தில் அட்லி ட்ரெண்டிங்கில் உள்ளார். இதற்கு முக்கிய காரணம் இவர் சல்மான்கானை வைத்து ஒரு படத்தை இயக்கப் போவதாகவும் அந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளதாகவும் எக்ஸ் பக்கத்தில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். ஆனால் இது தொடர்பாக அட்லீயோ அல்லது சல்மான் கான் தரப்பிலோ அல்லது சன் பிக்சர்ஸ் நிறுவனமோ அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் வெளியிடவில்லை. ஆனால் சினிமா வட்டாரங்களில் இது தொடர்பான தகவல் கூடிய விரைவில் வெளிவரும் என கூறி வருகின்றனர். சல்மான் கானை வைத்து இயக்கப் போகின்ற படமும் முழுக்க முழுக்க அதிரடி சண்டைக் காட்சிகள் நிறைந்த படமாக இருக்க வேண்டும் என்பதற்காக பல நாட்கள் மெனக்கெட்டு இந்த கதையை உருவாக்கினாராம் அட்லீ. படம் இந்தி, தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகவுள்ளதாம்.


Click it and Unblock the Notifications











