எதார்த்தப் படைப்பாளி இயக்குனர் பாலா… பிறந்த நாள் ஸ்பெஷல்… வாழ்த்தும் ரசிகர்கள் !
சென்னை : இயக்குனர் பாலா இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார் அவருக்கு திரைத்துறையினர், நண்பர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தேசிய அளவில் தமிழ் சினிமாவுக்கு பெருமை தேடித்தந்தவர் படைப்பாளி இயக்குனர் பாலா.
இவரின் பிறந்தநாளான இன்று இவர் இயக்கிய ,தயாரித்த படங்களைப் பற்றிப் பார்க்கலாம்.

இயக்குனர்
இயக்குனர் பாலா தேனி மாவட்டத்தில் 1966ம் ஆண்டு ஜூலை 11ந் தேதி பிறந்தார். சிறுவயது முதலே சினிமாவின் மீது ஈடுபாடு இருந்ததால், பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குனராக பணிப்புரிந்தார். இதையடுத்து, முதன்முறையாக சேது திரைப்படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானார்.

தேசிய விருது
விக்ரம், அபிதா நடித்த இத்திரைப்படம் மக்களிடையே மிகப்பெரிய அளவில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. காதலின் வலியையும், அதன் ஆழத்தையும் மிகவும் எதார்த்தமாக இந்த படத்தில் கூறி இருப்பார் பாலா. இப்படம் விக்ரமின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்த படமாகும். தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் ரீமேக்செய்யப்பட்டது. தேசிய விருதையும் வென்றது.

சூர்யாவின் திறமையான நடிப்பு
இது பாலாவின் இரண்டாவது திரைப்படமாகும். சூர்யா,லைலா ஆகியோர் நடித்திருந்தனர். அகதிகள் முகாம் பற்றியும் சீர்திருத்தப்பள்ளியில் வளர்ந்தவர்கள் பின்னாளில் வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சினை குறித்தும் இப்படம் விளக்கி இருக்கும். சூர்யா, ராஜ்கிரண் இவர்கள் இருவரின் திரை வாழ்க்கையில் என்றும் பேசக்கூடிய ஒரு திரைப்படமாக நந்தா உள்ளது.

விக்ரமிற்கு தேசிய விருது
நந்தவனத்தில் ஓரு ஆண்டி தான் பிதாமகன். ஜெயமோகனின் ஏழாம் உலகம் நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம். இப்படம் தமிழ் சினிமாவில் இதுவரை நாம் பார்த்திராத கதை அம்சத்தையும், கதாபாத்திரத்தையும் மிகவும் இயல்பாக காட்டி இருப்பார் பாலா. பிதாமகன் திரைப்படம் பாலாவின் பெயரை மேலும் உச்சிக்கு கொண்டு சென்றது. இப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தேசிய விருதை வென்றார் விக்ரம்.

இயல்பான கதைக்களம்
ஆர்யா நடித்த நான் கடவுள் சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதை பெற்றுத்தந்தது. பரதேசி பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் தேயிலைத் தோட்டத்தில் மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளையும் கொடுமைகளையும் இப்படம் காட்சிப்படுத்தியது. இப்படத்தில் பணியாற்றிய பூர்ணிமா ராமசாமிக்கு சிறந்த ஆடை வடிவமைப்புக்கான தேசிய விருதைப் பெற்றுத்தந்தது.

ஜோசப் இயக்கம்
இயக்குனராக இருந்த பாலா ,மாயாவி, பிசாசு,சண்டிவீரன், வர்மா போன்ற படங்களில் தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார். பாலா தற்போது விசித்திரன் திரைப்படத்தை தனது பி ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார். இப்படத்தை ஜோசப் இயக்கி வருகிறார். இப்படத்தில் ஆர்கே சுரேஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தின் டீசர் ஜனவரி மாதம் வெளியானது.
Recommended Video

ரசிகர்கள் வாழ்த்து
இந்நிலையில் இயக்குனர் பாலா இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரைப்பிரபலங்கள் , ரசிகர்கள் பிறந்த நாள் வாழ்த்துக்களை ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலம் கூறிவருகின்றனர். நடிகர் நடிகைகளின் நடிப்புத் திறனை தோண்டி எடுத்து திரையில் மின்னச்செய்யும் ஒரு அசாத்திய படைப்பாளி பாலாவின் பிறந்த நாளில் அவரை மனதார வாழ்த்துவோம்.


Click it and Unblock the Notifications











