எதையுமே செய்ததில்லையே.. எல்லோருக்கும் நன்றி.. வணங்கான் இயக்குநர் பாலா உருக்கம்
சென்னை: பாலா இயக்கத்தில் உருவாகியிருக்கும் வணங்கான் திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு ரிலீஸாகவிருக்கிறது. இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவும், பாலா திரைத்துறைக்கு வந்து 25 வருடங்கள் நிறைவு செய்ததை கௌரவிக்கும் விதமாக பாலா 25 நிகழ்வும் சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. அதில் சூர்யா, சிவகார்த்திகேயன், சிவக்குமார், மணிரத்னம், மாரி செல்வராஜ், மிஷ்கின் என ஏராளமானோர் கலந்துகொண்டார்கள். இந்தச் சூழலில் பாலா உருக்கமாக நன்றி தெரிவித்திருக்கிறார்.
இயக்குநர் பாலா சூர்யாவை வைத்து வணங்கான் படத்தை முதலில் ஆரம்பித்தார். ஆனால் சில காரணங்களால் அந்தப் படத்திலிருந்து வெளியேறினார் சூர்யா. இதனையடுத்து அருண் விஜய்யை வைத்து அந்தப் படத்தை முடித்திருக்கிறார். கண்டிப்பாக அருண் விஜய்க்கும், பாலாவுக்கும் இது கம்பேக் படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்துக்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க; சுரேஷ் காமாட்சி படத்தை தயாரித்திருக்கிறார். அடுத்த வருடம் பொங்கலுக்கு படம் ரிலீஸாகவிருக்கிறது.

பாலா 25: சூழல் இப்படி இருக்க படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவும், பாலா திரைத்துறைக்கு வந்து 25 வருடங்கள் நிறைவு செய்ததை கௌரவிக்கும் விதமாக பாலா 25 நிகழ்வும் சில நாட்களுக்கு முன்பு சென்னையில் பிரமாண்டமாக நடந்தது. இதில் சூர்யா, சிவகார்த்திகேயன், சிவக்குமார், மணிரத்னம், மாரி செல்வராஜ், மிஷ்கின், சமுத்திரக்கனி, மன்சூர் அலிகான், வேதிகா என ஏராளமானோர் கலந்துகொண்டு பாலாவை வாழ்த்தி பேசினார்கள். இந்நிலையில் அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்திருக்கிறார்.
பாலா அறிக்கை: அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "25ஆவது திரை பயண விழா மற்றும் வணங்கான் இசை வெளியீட்டு விழா நானே எதிர்பார்க்காத அளவுக்கு என்னை இன்பக் கடலில் மூழ்கடித்துவிட்டது. எத்தனை அன்பு உள்ளங்கள். அத்தனை பேரும் வந்திருந்து வாழ்த்தி சென்றதில் என் உள்ளம் மகிழ்ந்து நிறைந்தேன். நேரில் வர இயகலாத சூழலில் பலரும் தொலைபேசி வாயிலாக அழைத்தும் வாழ்த்து மழை பொழிந்தார்கள்.
நினைவில்லை: நான் எந்த ஒரு அன்பர்களுக்கும் தனிப்பட்ட முறையும் எதையும் செய்ததாக நினைவில்லை. ஆனால் அத்தனை பேரும் என் மீதான அன்பின் மிகுதியால் இப்படி வாழ்த்துகளை வாரி குவித்துவிட்டனர். இடைவிடாத மக்கள் பணியிலும் எனக்காக நேரம் ஒதுக்கி வாழ்த்து செய்தி அனுப்பிய ஒவ்வொரு தலைவருக்கும் நான் எனது மனமார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, விசிக தலைவர் திருமாவளவன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நேரில் வந்து வாழ்த்திய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு, தொலைபேசியில் அன்பு மழை பொழிந்த எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன், தமிழக சட்டப்பேரவை உறுப்பினர் வேல்முருகன், முன்னாள் எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரி, தனியரசு ஆகியோருக்கும் எனது நன்றிகள்.
முன்னத்தி ஏர்: வர இயலாத சூழலை சொல்லி வருந்தி; என்னை பற்றியே எண்ணி என் மீது அக்கறை கொண்டு கடிதம் எழுதிய எனது முன்னத்தி ஏர் இயக்குநர் பாரதிராஜாவுக்கும் எனது நெகிழ்வான நன்றி கூறிக்கொள்கிறேன். இந்த நிகழ்ச்சிக்காக உழைத்த கலைஞர்கள், தொழிலாளர்கள் ஒவ்வொருவரின் பெயரையும் தனித்தனியாக குறிப்பிட்டு நன்றி சொன்னால் அது மிக நீண்ட கடிதமாகிவிடும் என்பதால் அனைவருக்கும் என்றென்றும் நன்றி" என்று குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications