Bala: சிவக்குமார் கேட்ட அந்த கேள்வி.. கமல் ரஜினிக்கு படம் பண்ண மாட்டேன்னு சொன்ன பாலா..ரசிகர்கள் ஷாக்
சென்னை: இயக்குநர் பாலா இயக்கத்தில் வரும் தைப் பொங்கலுக்கு அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வணங்கான் திரைப்படம் ரிலீஸ் ஆகவுள்ளது. படத்தின் இசை வெளியீட்டு விழாவும் படத்தின் இயக்குநர் பாலா தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்து 25 ஆண்டுகள் ஆனதைத் தொடர்ந்தும், பிரமாண்டமான நிகழ்ச்சியை படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி நடத்தினார். இந்த நிகழ்ச்சியில் தமிழ் திரையுலகைச் சேர்ந்த பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் நடிகர் சிவக்குமார், இயக்குநர் பாலாவை பேட்டி எடுத்தார். அப்போது அவர் கேட்ட கேள்விகளும் அதற்கு பாலா அளித்த பதில்களும் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
இயக்குநர் பாலா, தமிழ் சினிமாவில் தனக்கென தனி சினிமா உருவாக்கத்தினைக் கடைபிடிக்ககூடியவர். இவரது இயக்கத்தில் வெளியான படங்கள் பலவும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினைப் பெற்றுள்ளது. இதன் காரணமாகவே, இவரது இயக்கத்திற்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உருவாகியுள்ளது. பாலா எப்போதுமே, தன் படத்தில் நடிக்கும் நடிகர்களை நம்பி படம் இயக்குவதில்லை. அதேபோல், தனது படத்தில் ஒரு ஸ்டார் வேல்யூ இருக்ககூடிய நடிகர் உள்ளார், அந்த நடிகருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. எனவே, அவரை கொஞ்சமும் மரியாதைகுறைவாக திரையில் காண்பித்துவிடக்கூடாது என்றெல்லாம், இலக்கணம் வகுத்து நெளிவுசுளிவுடன் படம் எடுக்க மாட்டார். அது பாலாவுக்கு வரவும் வராது.

அதனால்தான், பிதாமகன் படத்தில் விக்ரமுக்கு துடைப்பத்தாலே அடிவிழும் காட்சிகள் எல்லாம் வைத்தார். அந்தப் படத்திற்காக விக்ரமிற்கு தேசிய விருதே கிடைத்தது. இப்படி தனக்கென தனி சினிமா உருவாக்க பாணியும் திரை மொழியும் கொண்ட இயக்குநர் பாலா தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்து 25 ஆண்டுகள் ஆகின்றது. இவரது, இயக்கத்தில் முதன் முதலில் வெளியான சேது படமும் வெளியாகி 25 ஆண்டுகள் ஆகின்றது.
பாலா 25: இப்படியான நிலையில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வணங்கான் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் நடிகர்கள் சூர்யா, சிவகார்த்திகேயன், அதர்வா, கருணாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதேபோல் இயக்குநர்கள் வரிசையில் மணி ரத்னம், மாரி செல்வராஜ், லிங்குசாமி, மிஷ்கின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதுமட்டும் இல்லாமல் இந்த நிகழ்ச்சியில் நடிகர் சிவக்குமார் கலந்து கொண்டார். அருண் விஜய் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்.
ரஜினி, கமல்: சிவக்குமார், பாலாவை சில கேள்வி கேட்குமாறு, நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. அதில், சிவக்குமார் பாலாவை நோக்கி, உங்களது படத்தில் ரஜினிகாந்த், கமல் ஹாசன் நடிக்க கால் ஷீட் கொடுத்தால் அவர்களுக்காக படம் செய்வீர்களா எனக் கேள்வி கேட்டார். அதற்கு பாலா, செய்யமாட்டேன் எனக் கூறினார். உடனே சிவக்குமார் ஏன் எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு, பாலா, அவர்களது சினிமா பாதை வேறு, என்னோட சினிமா பாதை வேறு என பதில் அளித்தார்.
அதிர்ச்சி: அப்போதும் விடாமல், சிவக்குமார் கேள்வி எழுப்பினார். அதாவது, " உங்கள் பார்வைக்கு ஏற்ற வகையில் ரஜினிகாந்த் அகோரியாக நடிக்கின்றேன் எனக் கூறுகின்றார் என்றால் அப்போது அவருடன் இணைந்து படம் பண்ணுவீர்களா? அல்லது ரஜினிகாந்த், கமல்ஹாசன் முதலில் சொல்லட்டும் பார்க்கலாம் எனக் கூறுகின்றீர்களா" என பதில் கேள்வி எழுப்பினார். இதற்கு பாலாவோ, அவர்கள் அப்படிச் சொல்ல மாட்டார்கள் என பதில் அளித்தார். இது திரைத்துறையினர் மட்டும் இல்லாமல் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











