வணங்கான் வந்துட்டு இருக்கு.. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பாலா.. சீக்கிரமே போட்டோ வருமா?
சென்னை: இயக்குநர் பாலா இயக்கத்தில் சூர்யா நடித்து வந்த வணங்கான் திரைப்படம் கிடப்பில் போடப்பட்டதாக பேச்சுக்கள் அடிபட்டு வந்த நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் இயக்குநர் பாலா.
துருவ் விக்ரமை வைத்து பாலா இயக்கிய வர்மா படம் சரியாக இல்லை என்று சொல்லி துருவ் விக்ரம் மீண்டும் ஒருமுறை ஆதித்ய வர்மா என நடித்து அந்த படத்தை வெளியிட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
அதன் பின்னர், இயக்குநர் பாலா இயக்கத்தில் எந்த நடிகரும் நடிக்க முன் வராத நிலையில், சூர்யா பழைய நண்பரை கைவிடக் கூடாது என்பதால் தனது தயாரிப்பு நிறுவனத்தில் புதிய படத்தை தயாரித்து தானே நடிக்கவும் முடிவு செய்தார்.

பரிதாபமான நிலையில் பாலா
சேது, பிதாமகன், நந்தா, அவன் இவன் படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் தனித்துவமான இயக்குநராக வலம் வந்த இயக்குநர் பாலா இயக்கத்தில் வெளியான தார தப்பட்ட, நாச்சியார், வர்மா உள்ளிட்ட படங்கள் படு தோல்வி அடைந்த நிலையில் பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டார் பாலா.

சோலியை முடித்த விக்ரம்
மோதிரக் கையால் குட்டுப்பட வேண்டும் என தனது மகன் துருவ் விக்ரமின் அறிமுகப் படத்தை தனக்கு சேது மூலம் வாழ்க்கை கொடுத்த பாலா தான் இயக்க வேண்டும் என சியான் விக்ரம் ஒற்றைக் காலில் நின்றார். அதுவரை ரீமேக் படங்களே பண்ணாத பாலா விக்ரமிற்காக அர்ஜுன் ரெட்டி படத்தை தமிழில் வர்மா என ரீமேக் செய்தார். ஆனால், அந்த படம் குப்பைப் படம் என தயாரிப்பு தரப்பு சொன்ன நிலையில், வேறுவொரு இயக்குநருடன் மீண்டும் அதே படத்தின் ரீமேக்கில் துருவ் விக்ரம் நடித்தார்.

உதவிய சூர்யா
அதன் பின்னர் இயக்குநர் பாலா கிட்டத்தட்ட ஃபீல்ட் அவுட் ஆகிவிட்டார் என்கிற நிலைமையில் இருந்த போது நடிகர் சூர்யா தனது தயாரிப்பில் ஒரு படம் தயாரிக்கிறேன் என்று முன் வந்தார். பின்னர், பாலா பேசிய பேச்சுக்களை கேட்டு அதில் நடிக்கவும் ஒப்புக்கொள்ள வணங்கான் படம் உருவாக தொடங்கியது.

வெடித்த பஞ்சாயத்து
ஆனால், சூர்யா எதிர்பார்த்தது போல ஷூட்டிங் ஸ்பாட்டில் பல விஷயங்கள் சரியாக போகவில்லை. அதனை கண்டித்த நிலையில், சூர்யாவுக்கும் பாலாவுக்கும் இடையே மோதல் வெடித்து விட்டதாக பேச்சுக்கள் கிளம்பின. மேலும், படப்பிடிப்பை அப்படியே கிடப்பில் போட்டு விட்டார் சூர்யா என்றும் கூறினர்.

சிவா இயக்கத்தில்
வணங்கான் படத்தை முடிக்காமலே அடுத்ததாக சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா 42 படத்துக்கு பூஜை போட்டு பாலிவுட் ஹீரோயின் திஷா பதானியுடன் சூர்யா நடித்து வருகிறார். சூர்யா 42 முடிந்த பிறகு வாடிவாசல் தொடங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், வணங்கான் படம் இனி வருமா? வராதா? என்கிற கேள்வி கிளம்பியது.

பாலா பேட்டி
இந்நிலையில், இயக்குநர் பாலாவை சினிமா விழாவில் சந்தித்த செய்தியாளர்கள் அவரை முற்றுகையிட்டு, சூர்யாவுடன் நீங்கள் இணைந்து பணியாற்றி வரும் வணங்கான் படத்துக்கு என்னதான் ஆனது? படம் வருமா? வராதா? உங்களுக்கும் சூர்யாவுக்கும் பிரச்சனை என்கின்றனரே என ஏகப்பட்ட கேள்விகளை அடுக்க அதற்கு பதில் அளித்துள்ளார் பாலா.

வணங்கான் வந்துட்டு இருக்கு
வணங்கான் இன்னும் முழுமையாக ரெடியாகவில்லை. வந்துட்டு இருக்கு என இயக்குநர் பாலா செய்தியாளர்களிடம் கூறினார். மேலும், சூர்யாவுடன் உங்களுக்கு பிரச்சனையா? என கேட்டதற்கு சிரித்துக் கொண்டே உங்களுக்கும் எனக்கும் பிரச்சனையா என பேசி விட்டு அங்கிருந்து எஸ்கேப் ஆகிவிட்டார்.


Click it and Unblock the Notifications











