பாலாவின் திரைப்படத்தில் வில்லனாக நடிக்கும் பிரபல இளம் நடிகர்!
சென்னை : எதார்த்தமான திரைப்படங்களை தத்ரூபமாக இயக்குவதோடு அதற்காக பலமுறை தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை குவித்து இந்திய அளவில் உற்று நோக்கப்படுபவர் இயக்குனர் பாலா.
சேது, நந்தா,பிதாமகன்,பரதேசி என தன்னுடைய திரைப்படங்களில் எந்த ஒரு கமர்சியல் மசாலாக்களும் இல்லாமல் தன்னுடைய ஸ்டைலில் திரைப்படங்களை இயக்கி வெற்றி இயக்குனராக உள்ளார்.
கடைசியாக அர்ஜுன் ரெட்டி திரைப் படத்தின் தமிழ் ரீமேக்கை இயக்கி இருக்க இப்பொழுது புதிய திரைப்படத்தில் பிரபல இளம் நடிகர் ஒருவர் வில்லனாக நடிக்கிறார் என்ற செய்தி வெளியாகி உள்ளது.

மிகப்பெரிய அறிமுகத்தை
நடிகர் விக்ரமின் திரை வாழ்க்கைக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த சேது திரைப்படம் வெளியாகி ஒரு வார காலமாக திரையரங்குகளில் கூட்டம் இல்லாமல் இருக்க அதன் பின் தொடர்ந்து ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடி படம் மாபெரும் வெற்றியை பெற்றது. சேது விக்ரமிற்கு மட்டுமல்லாமல் பாலாவுக்கும் மிகப்பெரிய அறிமுகத்தை தமிழ் சினிமாவில் கொடுத்த நிலையில் இவர்கள் இருவரும் இன்று வரை சேர்ந்து பயணித்து வருகின்றனர்.

தமிழ் ரீமேக் வர்மா
பாலாவின் திரைப்படங்கள் என்றாலே எதார்த்தமாக இருப்பதோடு வசூலையும் விருதுகளையும் வாரி குவித்து வருகிறது. அவ்வாறு சேது தொடங்கி நந்தா, பிதாமகன்,பரதேசி,நான் கடவுள் என இயக்கிய அனைத்து திரைப்படங்களும் விருதுகளைக் குவித்து வருகிறது இதில் பல தேசிய விருதுகளும் அடங்கும். கடைசியாக அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் தமிழ் ரீமேக் வர்மா இயக்கி இருந்தார்

ஓடிடியில் வெளியாகியது
விக்ரமுக்கு சேது போல துருவ்வுக்கும் வர்மா திரைப்படம் மிகப்பெரிய அறிமுகமாக அமையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வர்மா திரைப்படம் தயாரிப்பாளர்களுக்கு பிடிக்கவில்லை என அதை கிடப்பில் போட்டுவிட்டு வேறு ஒரு இயக்குனரை வைத்து அந்த திரைப்படத்தை மீண்டும் உருவாக்கியிருந்தனர். வர்மா பல மாதங்களுக்குப் பிறகு சமீபத்தில் ஒரு ஓடிடியில் வெளியாகியது.

இரண்டு ஹீரோக்கள்
கடைசியாக பாலா இயக்கிய தாரை தப்பட்டை,நாச்சியார் போன்ற திரைப்படங்கள் சரிவர ஓடாததால் மீண்டும் ஒரு வெற்றி திரைப் படத்தை கொடுத்தாக வேண்டும் என மும்முரமாக இருக்கும் பாலா அதற்காக இரண்டு ஹீரோக்கள் நடிக்கும் சப்ஜெக்டை கையில் எடுத்துள்ளார். மேலும் அந்த திரைப்படத்தில் ஹீரோவாக நடிகர் சூர்யா நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் வில்லனாக நடிக்க அதர்வா ஓகே சொல்லி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதர்வா பாலாவின் இயக்கத்தில் ஏற்கனவே பரதேசி திரைப்படத்தில் நடித்து விருதுகளை வென்ற நிலையில் இப்பொழுது மீண்டும் அதுவும் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சூர்யாவின் மார்க்கெட் உச்சத்தில் உள்ளதால் இதில் நடிப்பாரா இல்லையா என்பது பற்றிய சந்தேகம் நீடித்து வருகிறது.


Click it and Unblock the Notifications











