சூர்யா என்னை கவனித்துக்கொண்டே இருப்பார்.. மறைந்து நின்று சிகரெட் பிடித்தேன்.. பாலா ஓபன் டாக்
சென்னை: இயக்குநர் பாலா அருண் விஜய்யை வைத்து தற்போது வணங்கான் படத்தை இயக்கி முடித்திருக்கிறார். மிகப்பெரிய எதிர்பார்ப்பை சம்பாதித்திருக்கும் இந்தப் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அடுத்த வருடம் ஜனவரி மாதம் ரிலீஸாகிறது. அன்றைய தினம்தான் விடாமுயற்சி திரைப்படமும் ரிலீஸாகவிருக்கிறது. இந்தச் சூழலில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அந்த விழாவோடு சேர்ந்து பாலா 25 விழாவும் கொண்டாடப்பட்டது.
சேது படத்தை இயக்கி தனது முதல் படத்திலேயே பெரும் கவனம் ஈர்த்த பாலா பல ஹீரோக்களுக்கு அடையாளத்தை பெற்றுக்கொடுத்தவர். அவரது இயக்கத்தில் நடித்த பிறகுதான் விக்ரம், சூர்யா, அதர்வா, விஷால், ஆர்யா என பலருக்கும் நல்ல பெயர் கிடைத்தது. சூழல் இப்படி இருக்க அவர் தற்போது வணங்கான் படத்தை இயக்கி முடித்திருக்கிறார். அந்தப் படத்தில் முதலில் சூர்யாதான் நடிப்பதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அவர் படத்திலிருந்து விலக; அருண் விஜய் ஹீரோவாக நடித்திருக்கிறார்.

பாலா 25: வணங்கான் திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அடுத்த வருடம் ஜனவரி மாதம் ரிலீஸாகவிருக்கிறது. சூழல் இப்படி இருக்க நேற்று படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவும்; பாலா திரைத்துறைக்கு வந்து 25 வருடங்கள் நிறைவடைந்ததை அடுத்து பாலா 25 நிகழ்ச்சியும் கொண்டாடப்பட்டது. இதில் சூர்யா, சிவக்குமார், மணிரத்னம், மாரி செல்வராஜ், சிவகார்த்திகேயன் என பெரும் நட்சத்திர பட்டாளமே கலந்துகொண்டது. நிகழ்ச்சியில் பலரும் பாலா குறித்து நெகிழ்ச்சியாக பேசினார்கள்.
பாலா பேச்சு: நிகழ்ச்சியில் பேசிய பாலா, "பாண்டி பஜாரில் இருந்து ஒரு திரைப்பட விழாவுக்கு அழைத்து செல்லும்படி சூர்யாவிடம் கேட்டேன். அப்போதுதான் அவரை முதன்முறையாக பார்த்தேன். அப்போதே எனது அடுத்த படத்துக்கு அவர்தான் ஹீரோ என்பதை முடிவு செய்துவிட்டேன். இருந்தாலும் உடனடியாக அதனை அவரிடம் சொல்லவில்லை. நீண்ட நாட்களுக்கு பிறகுதான் அதை அவரிடம் சொன்னேன். சூர்யாவுடன் பணியாற்றும்போது நடிகரோடு பணியாற்றுவது போன்று இருக்காது; எனது தம்பியோடு பணியாற்றுவது போல்தான் இருக்கும்.
வெளிப்படைதான்: என்னிடம் எப்போதுமே சூர்யா வெளிப்படையாகத்தான் இருப்பார். எனது இயக்கத்தில் அவர் நடிக்காத படங்கள் குறித்துக்கூட என்னிடம் பேசுவார். நன்றாக இல்லை என்றால், 'அண்ணா இந்தப் படம் நீங்கள் எடுத்தது போல் இல்லை' என்று சொல்வார். நான் அதிகம் புகை பிடித்தவன். ஆனால் சூர்யா இருக்கும்போது அதனை நான் செய்யமாட்டேன். ஏனெனில் சிகரெட் பிடிக்கும்போது மற்றவர்கள் அட்வைஸ் செய்வார்கள். சூர்யா மட்டும்தான் வருத்தபடுவார்.
தம்பியால்தான் முடியும்: ஒரு நடிகரால் வருத்தப்பட முடியாது. தம்பியாக இருந்தால் மட்டும்தான் அந்த வருத்தம் வரும். இப்படி இருந்தும் அவன் இவன் படத்தில் சிறப்பு தோற்றத்தில் சூர்யா நடித்தார். அப்போது அவருக்கு தெரியாமல் பெரிய மானிட்டருக்கு பின்பு நின்றுகொண்டு சிகரெட் அடித்துக்கொண்டிருந்தேன். நடித்துக்கொண்டிருக்கும்போது சூர்யா அதனையும் கவனித்திருக்கிறார். அந்தக் காட்சியை நடித்து முடித்துவிட்டு வந்தவரிடம் சிகரெட் அடிப்பதை நான் குறைத்துக்கொண்டேன் என்று சொன்னேன். உடனே அவர் இல்லை அண்ணா நீங்கள் எட்டு முறை சிகரெட் அடித்தீர்கள் என்று சரியாக சொல்லிவிட்டார். நான் என்ன செய்தாலும் அவர் கவனித்துக்கொண்டே இருப்பார்" என்றார்.


Click it and Unblock the Notifications











