மெகா ஹிட் படங்களைத் தவறவிட்ட சாந்தனு.. கதைத்தேர்வை அவங்க அப்பாவிடம் விடச் சொல்லும் ரசிகர்கள்!
சென்னை: நடிகர் சாந்தனு தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக நடிகராக வளம் வரக்கூடியவர். இந்தி திரை உலகில் இருப்பதைப் போல் தமிழ் திரையுலகமும் இருந்திருந்தால், சாந்தனு என்றோ வெற்றி பெற்ற கதாநாயகன் என்ற நிலையை எட்டி இருப்பார். ஆனால் தமிழ் சினிமாவின் தன்மையும் அதன் அணுகுமுறையும் இந்தியில் இருந்து முற்றிலும் வேறானது என்பதால், சாந்தனு தனது முதல் வெற்றிக்காக மிகவும் போராடவேண்டி இருந்தது. அப்படி கிட்டத்தட்ட 10 ஆண்களுக்கு மேலாக வெற்றிக்காக போராடி வந்த சாந்தனுவுக்கு கிடைத்த பெரும் வெற்றி என்றால் அது ப்ளூ ஸ்டார் படத்தைக் கூறலாம்.
இப்படி இருக்கும்போது, சமீபத்தில் வெளியான விஜய் சேதுபதியின் 50வது படமான மகாராஜா படத்தினை அவர் தவறவிட்டார் என பேச்சுகள் அடிபட்டது. மேலும் பலரோ சாந்தனு ஏன் இது போன்ற கதையை தவறவிட்டார். சாந்தனு தேடித் தேடி மொக்கைக் கதைகளில்தான் நடிப்பார்போல. மகாராஜா படத்தில் மட்டும் சாந்தனு நடித்திருந்தால், அந்தப் படத்தின் மூலம் அவருக்கு எவ்வளவு பெரிய வெற்றி சாத்தியமாகி இருக்கும் என பலரும் பலவிதமாக பேச ஆரம்பித்தனர்.

மகாராஜா படம் விஜய் சேதுபதியின் 50வது படமாக அமைந்ததால் ஒட்டுமொத்த திரை உலகமும் விஜய் சேதுபதிக்கு பாராட்டுகளை வாரிக்குவித்தது. இந்நிலையில் நடிகர் சாந்தனு தரப்பில் இருந்து மகாராஜா படத்தின் கதையை எதனால் திரைப்படமாக நகர்த்த முடியவில்லை என்ற காரணத்தை கூறியுள்ளார். அதாவது, மகாராஜா படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கின்றது. மகாராஜா படத்திற்கு உயிர் கொடுத்த நித்திலனுக்கு மனமார்ந்த பாராட்டுகள்.
கதை தேர்வு: சரியான கதையை தேர்வு செய்ததை நினைத்து நான் மிகவும் பெருமைப் படுகின்றேன். இந்த கதையை மிஸ் செய்ய நானோ எனது அப்பா பாக்யராஜோ காரணமல்ல. இந்தக் கதையை நாங்கள் ஓ.கே செய்தபோது தயாரிப்பாளர்கள் படம் செய்ய முன்வரவில்லை. இதுதான் முக்கிய காரணம். ஆனால் கதைதான் கிங் என்பதை மகாராஜா படம் மீண்டும் ஒருமுறை நிரூபித்துவிட்டது" எனக் கூறியுள்ளார்.

ஆரம்பகால சினிமா: இந்த தகவல் தீயாக பரவியதால் இணையவாசிகள் சாந்தனு தவறவிட்ட படங்களை லிஸ்ட் போட்டு பகிர்ந்து வருகின்றனர். அவ்வகையில் சந்தனு முதலில் வேண்டாம் எனக் கூறிய படம் பாய்ஸ். அதன் பின்னர் காதல். இந்த இரண்டு படங்களிலும் இவர் தனது ஆரம்ப காலத்திலேயே நடித்திருந்தால் இன்றைக்கு சினிமாவில் தனக்கென தனி மார்க்கெட்டைப் பிடிக்கும் இடத்திற்கு வளர்ந்திருப்பார்.

நீளும் லிஸ்ட்: இந்த படங்கள் மட்டுமா? இதையடுத்து, சுப்ரமணியபுரம் (ஜெய் கதாபாத்திரம்), களவாணி, டாணாகாரன் ஆகிய படங்களும் இவர் தவறவிட்ட படங்கள். ஆனால் இந்த படங்களும் மாபெரும் ஹிட் ஆகி அந்தப் படத்தின் இயக்குநர், நடிகர்களுக்கு பாராட்டுக்களைக் வாங்கிக் கொடுத்தது. இது மட்டும் இல்லாமல், தமிழ் சினிமாவின் பொக்கிஷங்கள் என சுப்ரமணியபுரம் படத்தையும் டாணாகாரன் படத்தையும் கூறும் அளவிற்கு அந்த படங்கள் பெயர் பெற்றது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











