படங்களைப் பார்க்கும் போது பொது நல வழக்கு போடும் எண்ணம் வருகிறது -பாக்யராஜ் பேச்சு
சென்னை : சமீபத்தில் நடைபெற்ற 'கடைசி காதல் கதை' படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அத்திரைப்படத்தின் குழுவினர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் நிறைய கருத்துக்களை பதிவு செய்தனர்
நடிகர் சிபிராஜ் பேசும்போது, தமிழ் சினிமா நல்ல தரத்தில் இருக்கிறது. படத்தின் கதை நல்ல இருந்தால் தியேட்டரிலும் சரி, ஓடிடி-தளத்திலும் சரி நல்ல வரவேற்பு உள்ளது. இப்படத்தின் இயக்குனரை நீண்ட காலமாக தெரியும். எனக்கு கதை ஏதும் கிடைக்கவில்லை என்றாலும் முதலில் ஞாபகம் வருவது RKV தான். அப்பாவும் இவரை தான் சொல்லுவார் என்றார்.
இயக்குனர் சீனு ராமசாமி பேசும்போது,படத்தின் டிசைன் வேறு ஒரு தோற்றத்தில் இருந்தது. டைரக்டரை ஒரு 20 ஆண்டு கால பழக்கம். எப்போதும் ஏதேனும் ஓரு வேலையை செய்து கொண்டே இருப்பார். கன்னடம், தமிழ் இரண்டிலும் அவர் ஒரு நல்ல கதை மாந்தர். அவருக்கு சினிமா மீதுள்ள விருப்பம் தான் புது முக நடிகர்களை வைத்து எடுப்பதற்கான தைரியத்தைக் கொடுத்துள்ளது. இப்பொழுது தமிழ் சினிமாவில் இப்போது கதைக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. 7 ஓடிடி தளங்கள் தமிழில் வரவிருக்கிறது. பறந்து வரும் நாயகனை, நடந்து வர வைத்தது கே.பாக்யராஜ் தான். இயக்குனர் ஜாம்பவான் கே.எஸ்.ரவிக்குமார் என்றார் சீனு ராமாசாமி .

மாடலிங் செய்து
நடிகை ஷாலு ஷாமு பேசும்போது...நான் இந்தத் துறைக்கு புதுசு தான். சினிமாத் துறையில் வாய்ப்பு கிடைப்பது மிகவும் கடினம். எனக்கு வரும் வாய்ப்புகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறேன். இப்பொழுது மாடலிங் செய்து கொண்டு இருக்கிறேன். ட்ரைலர் வெளியீட்டில் ஜாம்பவான்கள் முன்பு பேசியது மகிழ்ச்சி என்றார்.

யாரும் காதலிக்க மாட்டார்களா
இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் பேசும்போது...ஆர்.கே.வி. எனக்கு 4 ஆண்டாக தான் தெரியும். அவர் சிறந்த நடிகரும் மற்றும் இவர் ஓரு கால் நடை மருத்துவரும் கூட. கன்னடம் தெரியாவிட்டாலும் அவரின் திறமையால் வாய்ப்பு வாங்கி விடுவார்."கடைசி காதல் கதை" என்ற பெயரைக் கேட்டவுடன் இயக்குனரிடம் என்னப்பா? இதற்கு மேல் யாரும் காதலிக்க மாட்டார்களா? அல்லது இதற்கு பிறகு யாரும் காதல் கதையை எடுக்க மாட்டார்களா? என்று கேட்டேன். அதற்கு அவர், அப்படியில்லை சார் அதற்குள் விஷயம் இருக்கிறது என்றார். அவர் உச்சிக்கு செல்லும் ஒரு காலம் வர வேண்டும் என்று வேண்டுகிறேன். கமல், ரஜினி போன்று எல்லாரையும் தியேட்டரில் பார்த்து கைதட்டின எனக்கு அவர்களை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது போல இவருக்கும் ஒரு வாய்ப்பு வரும். படத்தில் நடித்த அனைவர்க்கும் வாழ்த்துக்கள். படம் வெற்றிபெற வாழ்துகிறேன் என்றார்.

19 நாட்களில் எடுத்த படம்
இயக்குனர் ஆர் கே.வித்யாதரன் பேசும்போது சொன்ன விஷயங்கள் ... கொரோனா பெருந்தொற்றிற்கு பிறகு இந்த படம் ட்ரைலர் வெளியீட்டிற்கு வந்துள்ளது.என்னுடைய மானசீக குருநாதர் இருவர். இயக்குனர் கே.பாக்யராஜ் மற்றும் அடுத்ததாக இயக்குனர் கமாண்டர் கே.எஸ்.ரவிக்குமார். என்னுடைய முதல் கன்னட படத்தை 19 நாட்களில் முடித்தேன். சத்யா ராஜ் சாருடன் நிறைய கதை பண்ணிருக்கேன். அடுத்ததாக நிறைய கதை சிபிக்கும் வைத்திருக்கிறேன். அவர் சத்யராஜின் நகல். நான் ஒரு 1415 கதையை புத்தகத்தில் வைத்திருக்கிறேன். அதில் 141 ஆவது கதை மற்றும் 231ஆவது கதைக்கும் அட்வான்ஸ் வாங்கி அது சில காரணத்தால் எடுக்க முடியவில்லை. கடைசி காதல் கதை 531 ஆவது கதை தான். இந்த படத்தையும் 19 நாட்களில் எடுத்திருக்கிறேன். இந்த படத்தில், ஜாதி மதம், பெண்களின் பிரச்னை அனைத்தும் சர்ச்சைக்குரியதாக இருக்கும். படத்தின் ஹீரோ ஏற்கனவே பாலா இயக்கிய வர்மா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர். இந்த படத்தின் இசையமைப்பாளர் சேத்தன் கிருஷ்ணா கன்னடத்தில் 1000 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார். இந்த படத்தை வெகுவிரைவில் வெளியிட உள்ளோம் என்றார்

இயக்குனர் பாக்யராஜ் பேசும்போது,
சமீபத்தில் விபத்தில் இறந்த முப்படை தளபதி, அவரின் மனைவி மீதமுள்ள 12 பேருக்காக வருந்துகிறேன்.
கொரோனாவிற்கு பிறகு தியேட்டர் திறக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டேன். ஆனால், இப்போது சில படங்கள் பார்த்த பின்பு தியேட்டர் திறக்காமலே இருந்திருக்கலாமோ என்று எண்ண தோன்றுகிறது. நல்ல படங்களை வரவேற்கலாம். ஆனால் தவறான உதாரணங்கள் கொண்ட படங்களை வரவேற்கிறோம் என்பது கொஞ்சம் வருத்தம் அளிக்கிறது. பொது நல வழக்கு போடும் அளவிற்கு மன உளைச்சலாக இருக்கிறது. இந்த படம் வெற்றியடைய வாழ்த்துக்கள் என்றார்.


Click it and Unblock the Notifications











