ஃபர்ஸ்ட் நவரச நாயகன் கார்த்திக் பற்றி.. இப்போ வடிவேலு பற்றி.. பாரதி கண்ணன் இப்படி இறங்கிட்டாரே
சென்னை: திருநெல்வேலி, கண்ணாத்தாள் உள்ளிட்ட படங்களை இயக்கிய பாரதி கண்ணன் அண்மையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் நவரச நாயகன் பற்றி பேசியது படு வைரலானது. அந்தப் பேட்டிக்கு வரவேற்பு கிடைத்த அளவுக்கு எதிர்ப்புகளும் வந்தன. குறிப்பாக கார்த்திக் ரசிகர்கள் பாரதியை தொடர்புகொண்டு பேசியதை அடுத்து அவர் வருத்தமும் தெரிவித்தார். இந்நிலையில் வடிவேலு பற்றி பேசியிருப்பது ட்ரெண்டாகியிருக்கிறது.
இயக்குநராக 90களில் ஜொலித்த பாரதி கண்ணன் இப்போது நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். காமெடி, குணசித்திர கதாபாத்திரங்களை ஏற்கும் அவர் அண்மையில் டூரிங் டாக்கீஸ் என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்தார். அந்தப் பேட்டியில், "கார்த்திக்கை சந்தித்து கதை சொல்ல போனேன். போகும்போதே ஐந்து லட்சம் ரூபாய் அட்வான்ஸோடுதான் போனேன். அவர் என்னை பார்த்ததும் பொதுவாக பணத்தை நான் கையில் தொடுவது இல்லை அப்பா ஃபோட்டோவில் வைத்துவிடுங்கள் என்று சொன்னார். பிறகு தனது கழுத்தில் போட்டிருந்த செயினை தொட்டு பார்த்துவிட்டு இந்தப் படம் நன்றாக வரும் எனவும் ஆரூடம் சொன்னார். அதனையடுத்து திங்கட் கிழமைக்கு மேல் ஊட்டியில் இருப்பேன். அங்கு வந்து கதை சொல்லும்படி பணித்தார்.
ஹோட்டலில் நடந்த சந்திப்பு: அங்கு சென்றவர் ஃபோன் செய்து இன்னொரு 5 லட்சம் ரூபாய் கிடைக்குமா என கேட்க; நான் அந்தப் பணத்தை எடுத்துக்கொண்டு ஊட்டிக்கு சென்றேன். அங்கே அவர் தங்கியிருந்த இடத்துக்கு சென்றபோது டேபிளில் ஐந்து கிளாஸ்கள் இருந்தன. அத்தனை கோப்பைகளிலும் ஒரே நேரத்தில் மினரல் வாட்டரை (சூசகமாக மது என்று கூறினார்) ஊற்றி அடுத்தடுத்து குடித்தார். நான் கதை சொன்னேன். கதையை கேட்டுவிட்டு அதை மாற்றலாம் எனவும் சொன்னார்.

தயாரிப்பாளர் போட்ட ஆர்டர்: இதற்கிடையே தயாரிப்பாளர் கார்த்திக்கை பற்றி விசாரித்துவிட்டார். என்னை தொடர்புகொண்டு அவர் ஒழுங்காக ஷூட்டிங்கிற்கு வரமாட்டார். நீ பணத்தை வாங்கிட்டு வந்திடு என்று சொல்லிவிட்டார். நான் சென்று கார்த்திக்கிடம், 'தயாரிப்பாளர் மனம் மாறிவிட்டார். உங்களிடம் கொடுத்த பணத்தை திருப்பி கேட்கிறார்' என சொல்ல; அவரோ, 'பாரதி இந்த கார்த்திக்கிடம் பணம் வந்தால் மீண்டும் வராது என இன்டஸ்ட்ரிக்கே தெரியுமே' என சொல்லிவிட்டு சென்றுவிட்டார். பிறகு அந்தப் பஞ்சாயத்து விஜயகாந்த்திடம் சென்று பணம் வாங்கிய தயாரிப்பாளர்களுக்கு தேதி கொடுத்தார். கடைசிவரை அந்த பத்து லட்சத்தை என்னால் வாங்க முடியவில்லை" என்றிருந்தார்.
பயங்கர ட்ரெண்டிங்: அவரது இந்தப் பேட்டியில் குறிப்பிட்ட விஷயமும், கார்த்திக் வாய்ஸிலேயே பேசியது பயங்கர ட்ரெண்டானது. அவரைத் தொடர்ந்து பலரும் கார்த்திக் பற்றி யூடியூபில் பேச ஆரம்பிக்க; நவரச நாயகனும் பாரதி கண்ணனும் சென்சேஷனல் ஆனார்கள். மேலும் கார்த்திக்கின் ரசிகர்கள், நடிகர்கள் பிரபு, ராதாரவி உள்ளிட்டோரும் அவரை தொடர்புகொண்டு ஏன் இப்படி பேசினீர்கள் என கேட்க; உடனடியாக வருத்தம் தெரிவித்தார்.
வடிவேலு பற்றி: இந்நிலையில் கார்த்திக் பற்றி பேசிய பாரதி கண்ணன் இப்போது வடிவேலு பற்றியும் பேசியிருக்கிறார். தனியார் ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், "சினிமா என்று மட்டுமில்லை எந்தத் தொழிலாக இருந்தாலும் அதனுடன் கனெக்ஷன் இருந்துகொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் பிரகாசிக்க முடியும். வடிவேலுவையே எடுத்துக்கொள்ளுங்கள். அவர் இடையில் ஒரு கேப் விட்டுவிட்டார். அந்த கேப்பை அவர் விட்டிருக்கக்கூடாது. இவ்வளவு வீம்பாக இருந்திருக்காமல் உடனே தொழிலுக்கு திரும்பியிருக்க வேண்டும். நீண்ட காலம் கழித்து வந்தால் மக்கள் மறந்துவிடுவார்கள்" என்றார்.


Click it and Unblock the Notifications











