என் இனிய தமிழ் மக்களே.. இயக்குநர் இமயம்.. பாரதிராஜாவின் பிறந்த நாள் இன்று!
சென்னை: இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் 78வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.
இயக்குநர் இமயம் என மக்களால் அழைக்கப்படும் பாரதிராஜா, தேனி மாவட்டம் அல்லி நகரத்தில் 1941ஆம் ஆண்டு ஜூலை 17ஆம் தேதி பிறந்தார். இவரது பெற்றோர் மாயத்தேவர்- கருத்தம்மா.
இரண்டு அண்ணன்கள், இரண்டு அக்கா ஒரு தம்பி, ஒரு தங்கை என ஒரு பெரிய குடும்பத்தில் ஐந்தாவது பிள்ளையாக பிறந்தார் பாரதிராஜா. இயக்குநர், தயாரிப்பாளர், எழுத்தாளர், நடிகர் என பல முகங்களை கொண்டவர் பாரதிராஜா.

நாடகங்கள்
சினிமாவுக்கு வருவதற்கு முன்பு ஊர் திருவிழாக்களில் பல நாடகங்களை இயக்கி நடித்துள்ளார் பாரதிராஜா. தமிழில் 31 படங்களும், தெலுங்கில் நான்கு படங்களும், இந்தியில் நான்கு படங்களும் இயக்கியிருக்கிறார் பாரதிராஜா.

கருத்தம்மா
பதினாறு வயதினிலே படம்தான் பாரதிராஜாவின் முதல் படம். பாரதிராஜா தனது தயாரின் பெயரிலேயே எடுத்த படம் தான் கருத்தம்மா. இந்த படம் தேசிய விருது பெற்ற போது தனது தாயின் கையாலேயே வாங்க வைத்து மகிழ்ச்சிக்கொண்டார் பாரதிராஜா.

நடிகர்
பாண்டிய நாடு, ரெட்டச்சுழி, கல்லுக்குள் ஈரம், தாவணிக் கனவுகள் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் பாரதிராஜா. அல்லி அர்ஜூனா, தாஜ்மகால், கருத்தம்மா ஆகிய படங்களை தயாரித்துள்ளார்.

நடிகைகள் அறிமுகம்
1970, 1980களில் முன்னணி நடிகைகளாக இருந்த ராதிகா, ராதா, ரேவதி, ரேகா, ரஞ்சிதா, போன்ற பல கதாநாயகிகளை அறிமுகம் செய்தவர். இவர் அறிமுகம் செய்தவர்களின் பெயர் ஆர் என்ற எழுத்திலேயே தொடங்கியிருக்கும்.

பத்மஸ்ரீ விருது
பாரதிராஜாவின் சாதனையை பாராட்டி மத்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்துள்ளது. மேலும் தனது சிறந்த படைப்புகளுக்காக தேசிய விருது, தமிழக அரசு விருது, ஆந்திர அரசு விருது, கலைமாமணி, டாக்டர் பட்டம் என ஏராளமான விருதுகளையும் பட்டங்களையும் பெற்றிருக்கிறார் பாரதிராஜா.

பிறந்த நாள் வாழ்த்து
பாரதிராஜா இன்று தனது 78வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு அவருக்கு திரைத்துறையை சேர்ந்தவர்களும் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
என் இனிய தமிழ் டைரக்டர்
நடிகை ராதிகா சரத்குமார் இயக்குநர் பாரதிராஜாவை நேரில் சந்தித்து கட்டியணைத்து பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார். இந்த சந்திப்பின் போது எடுக்கப்பட்ட போட்டோவை என் இனிய தமிழ் டைரக்டர் என்ற கேப்ஷனுடன் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ராதிகா சரத்குமார்.
செதுக்கும் ஒரு உளி
கலை என்னும் சிலையை செதுக்கும் ஒரு உளி. #பாரதிராஜா சார் என பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார் இவர்.


Click it and Unblock the Notifications











